செவ்வாய், 19 ஜனவரி, 2016

வத்தளை- ஹேகித்தை ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி


தேவஸ்தான முத்தேர்    விழா

வத்தளை- ஹேகித்தை அருள்மிகு ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் இன்று தலைநகரை அடுத்ததாக அமைந்துள்ள சிறந்த கோவில்களில் முதலிடத்தை பெற்றுள்ளது வத்தளை பிரதேச வாழ் இந்து மக்களின் தாய் கோவிலாக சகல அம்சங்களை கொண்டு விளங்கி வருவது பெருமைக்குரியதாகும்.
1960
களில் தொழு நோயளர்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்த அரச வைத்தியசாலை இப்பகுதியில் அமைந்திருக்கின்றது. இங்கு தங்கியிருந்து சிகிச்சைபெற்ற அனைத்து இன மக்களினதும் மத வழிபாடுகளுக்கென ஒரு பன்சலை, ஒரு கிறிஸ்தவ தேவஸ்தானம் சிறியதாக ஒரு கோவில் அமைய பெற்றிருந்தன.
இங்கு அமையபெற்றிருந்த கோவிலை விவேகானந்த சபையினரால் நிறுவப்பட்டு 1960 களில் ஒரு கும்பாபிஷேகமும் அதனை தொடர்ந்து 1980 வரையிலான காலப் பகுதியில் சிறியளவிலான இரண்டு கும்பாபிஷேகங்கள் நடந்ததாக வரலாறு உண்டு.
1983
களில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளின் நிமித்தம் இந்து தொழு நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்த நிலையில் ஆலயம் கவனிப்பாரற்ற நிலைக்கு தள்ளப்பட்டது.
1980
களில் பிற்பகுதியில் கவனிப்பாரற்று இருந்த இவ்வாலயத்தை விவேகானந்த சபையினரின் அனுமதியுடன் பொறுப்பேற்ற வத்தளை இந்து நற்பணி மன்றத்தினர் ஆலயத்தை புனரமைத்து பல இடையூறுகளுக்கு முகம் கொடுத்த நிலையிலும் தொடர்ந்து இயங்கி வந்தனர். பல இளைஞர்களின் அர்ப்பணிப்பால் சிறிய ஆலயமாக புனர் நிர்மாணித்து அன்றாட நித்திய பூஜைகளை செய்து வந்தனர். இப்பிரதேசத்தில் வாழ்ந்த ஏனைய மத குழுக்களால் பல்வேறுபட்ட வழியில் இடையூறுகள் தொடர்ந்த நிலையில் மீண்டும் சில காலம் கோவிலை மூடவேண்டிய நிலை ஏற்பட்டது.
அவ்வப்போது ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் பிரதிபலனாக 1990 களில் ஆலய திருத்த வேலைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு இயங்கத் தொடங்கியது. இப்பகுதி வாழ் இந்து மக்களின் பெரும் வரவேற்புடன் அத்தனை இடையூறுகளையும் களைந்து 1996 ஆம் ஆண்டு ஒரு பரிபூரண ஆலயமாக உருப்பெற்று முதலாவது மஹா கும்பாபிஷேகம் 1996 நவம்பர் 29 ஆம் திகதி சிறப்பாக நடைபெற்றது. இது வத்தளை சரித்திரத்தில பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வாக அமைந்தது.
மூலவராக வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமியை பிரதிஷ்டை செய்து அனைத்து பரிவார மூர்த்திகளை கொண்ட உயர்ந்த வாசல்கோபுரத்துடன் அமைந்த இவ்வாலயம் ஸ்ரீ சிவசுப்பிரமணி சுவாமி தேவஸ்தானமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு வத்தளையில் அமைந்த முதல் கோவிலாக சிறப்பு பெற்று விளங்கியது.
இப்பிரதேசத்தில் வாழும் இந்து மக்களின் தொகை அதிகரித்து கொழும்பை அண்டிய பிரதான கோவிலாக பெயர்பெறத் தொடங்கினர்.
1996
ல் முதல் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் சிறப்பாக தேர் பவனி இடம்பெற்றது. ஒரு தேரில் வலம் வந்த முருகன் இரண்டாவது தேராக விநாயகருடனும் அடுத்த வருடத்திலேயே அம்மனையும் சேர்த்து 1998 ஆண்டிலிருந்து முத்தோர் பவனியாக பரிணமித்து இன்று வத்தளையில் சிறப்பானதொரு தேர்த்திருவிழாவாக மட்டுமன்றி பிரதேச வாழ் அனைத்து இன மத மக்களையும் கவர்ந்த ஒன்றாக நடைபெற்று வந்துள்ளதை இங்கு கூறவேண்டும்.
சகல வழிகளில் முன்னேற்றமடைந்த ஆலயம் மீண்டும் 2013 ஆம் ஆண்டு தைத்தினத்தன்று தமது இரண்டாவது மகா கும்பாபிஷேகத்தை வெகு சிறப்பாக செய்து முடித்தது. ஆலயத்தை புனர் நிர்மாணம் செய்து பணியுடன் மூன்று மாடிகளை கொண்ட கட்டிடத்தை நிறுவி அறநெறி பாடசாலை வசதிகளை செய்து மூன்றாம் மாடியில் சுவாமி விவேகானந்தரின் பெயரில் தியான மண்டபம் ஒன்றையும் அமைத்ததுடன் 33 அடி உயரமான ஒரு முருகன் சிலையை ஆலய மூலஸ்தானத்திற்கு மேல் மூலையில் அமைத்தமையும் சிறப்பாக அமைந்தது. கொடி மரமும் ஸ்தாபிக்கப்பட்டது.
இவ்வாறு அமைய பெற்ற ஆலயம் கடந்த இரண்டு வருடங்கள் முத்தேர் பவனியுடன் வருஷாபிஷேக மகோற்சவ திருவிழாவாக சிறப்புடன் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்க விஷேட நிகழ்வாகும்.
எமது ஆலயத்தின் மூன்றாவது வருஷாபிஷேக மகோற்சவ தேர்த்திருவிழா 15/01/2016 அன்று வெகு சிறப்புடன் கொடியேற்றம் செய்யப்பட்டு 26.01.2016 வரை தொடர்ந்து நடைபெற சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
23.01.2016
அன்று முத்தேர் பவனி சிறப்பாக நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த மூன்று வருடங்களாக முத்தேர் வணியுடன் விஷேட பூஜைகளாக வேட்டைத் திருவிழா பால்குட பவனி தீர்த்தோற்சவத்தை தொடர்ந்து வெகு சிறப்பாக தெப்பத்திருவிழா நடைபெறவுள்ளது.
மூன்றாவது தடவையாக நடைபெறும் இத்தெப்பத்திருவிழா நிகழ்வுகள் இம்முறை 25.01.2016 அன்று களனி கங்கை நடுவில் மாலை 7 மணியளவில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
இவ்வனைத்து நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...