திங்கள், 25 நவம்பர், 2013

தாய்நாட்டில் மட்டுமன்றி தமிழகத்துக்கும் சென்று சைவத்துக்கும் தமிழுக்கும் பணியாற்றியவர் நாவலர்

அன்னாரின் குருபூசை தினம் நாளை 24ம் திகதி அனுஷ்டிப்பு கே. ஈஸ்வரலிங்கம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் யாழ்ப்பாணம் நல்லூரில் என்னும் ஊரில் 1822 டிசம்பர் 18ஆம் திகதி பிறந்தார். இவர் கந்தப்பிள்ளை - சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு கடைசி புத்திரனாகப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் ஆறுமுகப்பிள்ளை என்பதாகும். இவரது தந்தையாரான ப. கந்தப்பிள்ளை, பேரனாகிய பரமானந்தர், பூட்டனான இலங்கைகாவல் முதலியார் ஆகியோர் தமிழ் அறிஞர்களாவார்கள். நாவலருடன் உடன் பிறந்தவர்கள் ஏழு பேர். சகோதரர்கள் நான்கு பேர், சகோதரிகள் மூன்று பேர். சகோதரர்கள் அரசாங்க உத்தியோகம் செய்து வந்தார்கள். ஆறுமுகநாவலருக்கு பெற்றோர் ஐந்து வயதில் வித்தியாரம்பம் செய்து வைத்தனர். இவர் நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் நீதி நூல்களையும் தமிழையும் கற்றுக்கொண்டார் ஒன்பதாவது வயதில் தனது தந்தையை இழந்த இவர், சரவணமுத்து புலவரிடம் உயர் கல்வி கற்றார். முதலில் சரவணமுத்து புலவரிடம் உயர் கல்வி கற்றவர், பின்பு சரவணமுத்துப் புலவரின் குருவாகிய சேனாதிராச முதலியாரிடமும் உயர்கல்வி கற்றார். ஆறுமுகநாவலரை அவரது மூத்த சகோதரரே உயர்கல்வி கற்க வைத்தார். ஆறுமுகநாவலர் தனது பன்னிரண்டாவது வயதில் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்று பாண்டித்தியம் பெற்றார். யாழ்ப்பாணத்தில் அக்காலத்தில் முன்னணி ஆங்கிலப் பாடசாலையாக இருந்தது மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையாகும். இது இப்போது யாழ்ப்பாண மத்திய கல்லூரி என்று அழைக்கப்படுகிறது. இவர் இக்கல்லூரியில் கல்வி கற்று ஆங்கில மொழியிலும் பாண்டித்தியம் பெற்றார். இவர் இருபதாவது வயதில் இப்பாடசாலையின் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். இவர் இக்கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றும் காலத்தில் அந்தப் பாடசாலையின் ஸ்தாபகராகவும் அதிபராகவும் இருந்தவர் பேர்சிவல் என்ற பாதிரியாராவார். அப்போது இந்த பாதிரியார் கிறிஸ்தவ விவிலியத்தை தமிழில் மொழிபெயர்க் கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவரது அந்த மொழி பெயர்க்கும் பணிக்கு உதவியாக இருந்து ஒத்துழைப்பு வழங்கியவர் ஆறுமுகநாவலராவார். ஆறுமுகநாவலர் பேர்சிவல் பாதிரியாருடன் சென்னைக்கு சென்று அதனை அச்சிடும் பணிக்கும் உதவியாக நின்று அவருடனேயே யாழ்ப்பாணத்துக்கு வந்தார். தமிழும் சைவமும் தனது இரு கண்கள் என போற்றிவந்த ஆறுமுக நாவலர் தமிழையும் சைவத்தையும் வளர்ப்பதற்காக பணி புரியத் தொட ங்கினார். சைவ சமயத்தை வளர்ப்ப தற்காக பிரசங்கம் செய்யத் தொடங் கினார். இவரது முதலாவது பிரசங் கம் வண்ணார்பண்ணை வைத்தீஸ் வரன் கோவிலில் 1847 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 37ஆம் திகதி இடம் பெற்றது. இந்தப் பிரசங்கத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பிரசங்கம் செய்து வந்தார். இவர் செய்த இந்த பிரசங்கங்களின் பயனாக மக்களிடையே பெரும் சமய விழிப்புணர்வு ஏற்பட்டது. இவ்வாறு சமயப் பிரசங்கங்களை செய்து வந்த ஆறுமுகநாவலர் வண்ணார்பண்ணையில் சைவப் பிரகாச வித்தியாசாலை என்ற பெயரில் ஒரு சைவப் பாடசாலையை ஆரம்பித்து வைத்தார். இவர் இந்தப் பாடசாலையை ஆரம்பிக்கும் வரையில் அதாவது 1848ஆம் ஆண்டு வரை மத்திய கல்லூரியில் ஆசிரியராகவே பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கு மாதாந்தம் மூன்று பவுண் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. 1848 இல் அவர் அந்த ஆசிரியர் பதவியையும் துறந்து சைவசமய வளர்ச்சிக்காக தன் வாழ்வின் முழு நேரத்தையும் செலவிட்டார். சைவப் பிள்ளைகளுக்கான பாட நூல்களை அச்சிடுவ தற்காக அச்சியந்திரம் வாங்கத் திட்டமிட்டார். இதற்காக இவர் நல்லூர் சதாசிவம் பிள்ளையுடன் 1849 ஆம் ஆண்டு ஆடிமாதம் சென் னைக்குச் சென்றார். அங்கு திருவாவடுதுறை ஆதினத் தில் சைவப்பிரசங்கம் செய் தார். இவர் திருவாவடுதுறை ஆதீனத்தில் தமது புலமையை வெளிப்படுத்தியதால் திருவாவடுதுறை ஆதீனம் 'நாவலர்' என்ற பட்டத்தை வழங்கியது. இவர் சென் னையில் சிலகாலம் தங்கி இருந்து சூடாமணி நிகண்டு உரையையும் செளந்தர்யலங்கரி உரையையும் அச்சிட்டு வெளியிட்டார். அதன்பின் ஒரு அச்சியந்திரத்துடன் யாழ்ப்பாணம் திரும்பினார். அதன்பின் தனது இல்லத்தில் 'வித்தியானுபாலன இயந்திரசாலை' என்னும் பெயரில் அச்சுக்கூட மொன்றை நிறுவினார். அங்கு அவர் பாலர் பாடம், ஆத்திசூடி, கொன்றை வேந்தன் உரை, சிவாலய தரிசன விதி, சைவசமய சாரம், கொலை மறுத்தல், நன்னூல் விருத்தியுரை, திருமுருகாற்றுப்படை உரை போன்ற நூல்களை அச்சிட்டார். இவ்வாறு சைவத்துக்கு தொண்டாற்றிவரும் இவரது சேவையைப் பாராட்டி இலங்கை அரசாங்கம் முத்திரையொ ன்றை வெளியிட்டது. இவ்வாறு இலங்கையில் சேவையாற்றி வந்தவரின் பணி தமிழ் நாட்டிலும் வியாபித்து இருந்தது. 1859 வைகாசி மாதம் திருவாசகம், திருக்கோவையார் போன்ற நூல்களை சென்னையில் வெளியிட்டார். இலங்கையில் அச்சுகூடம் நிறுவியது போல பெரியதொரு அச்சியந்திரம் வாங்கி சென்னை தங்கசாலைத் தெருவில் அச்சுக் கூடமொன்றை அமைத்தார். இவ்வாறு சென்னையில் அச்சுகூடம் நிறுவியவர் அங்கு பல நூல்களை வெளியிட்டார். இவர் சென்னையில் தங்கி இருந்த காலத்தில் சென்னையிலும், திருவாவடுதுறையிலும் திருநாகைத் தோரணத்திலும் சைவப் பிரசங்கங்களை செய்து வந்தார். 1882 ஆம் ஆண்டு பங்குனி மாதம் இவர் சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பினார். ஆறுமுகநாவலர் 1863 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் தமிழகத்துக்குச் சென்று தமிழகத்திலுள்ள இராமநாதபுர சமஸ்தானத்தில் பிரசங்கம் செய்து வந்தார். இடையிடையே மதுரைக்கு சென்று மதுரை மீனாட்சி அம்மன் சந்நிதானத்திலும் பிரசங்கம் செய்து வந்தார். இதன் விளைவாக அங்கு பரிவட்டமும் பூமாலையும் அணிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார். இவர் குன்றக்குடியிலுள்ள திருவண் ணாமலை ஆதீனத்தில் செய்த பிரசங்கத்தைப் பார்த்து பலரும் பாராட்டினர். தம்பிரான்களும் ஓதுவார்களும் சூழ்ந்து வர பல்லக்கில் ஏற்றி மங்கள வாத்தியங்கள் முழங்க பட்டணப்பிரவேசம் செய்வித்தார்கள். இவ்வாறாக நாவலர் பெருமான் அங்கிருந்து திருப்பெருந்துறை, திருப்பள்ளி இருக்குவேரு, சீர்காழி ஆகிய இடங்களிலுள்ள திருத்தலங்களை தரிசித்தார். இராமலிங்கப்பிள்ளை தாம் பாடிய பாடல்களை திருமுறைகளுடன் ஒப்பிட்டு சில ஆலய உற்சவங்களிலே திருமுறைகளுக்குப் பதிலாக தமது பாடல்களைப் பாடுவதை நாவலர் பெருமான் கண்டார். இதனைத் தொடர்ந்து 'போலி அருட்பா மறுப்பு" எனும் நூலை வெளியிட்டார். தமிழகத்தில் இருந்து கொண்டே தமிழுக்கும் சைவத்திற்கும் அரும் தொண்டாற்றிக் கொண்டிருந்த ஆறுமுக நாவலர் பெருமான். 1859ம் ஆண்டு ஆணிமாதம் மீண்டும் சிதம்பரத்திற்கு சென்றார். அங்கு சைவ ஆகம விடயம் தொடர்பாகவும் சில தீட்சைகள் தொடர்பாகவும் ஆறுமுக நாவலர் பெருமான் சில கருத்துக்களை முன்வைத்திருந்தார். இந்த கருத்துக்களால் மனம் தடுமாறி இருந்த சிலர் வள்ளலார் இராமலிங்கப் பெருமானைக் கொண்டு சிதம்பரத்திலுள்ள திருத் தலத்திலே 1869ம் ஆண்டு ஆனி உத்திரத்தன்று ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தார்கள். அங்கு நாவலர் பெருமானை பல்வேறு நிந்தனை செய்ததுடன் நாவலர் பெருமான் தம்மை அடித்ததாக மஞ்சத்குப்பத்திலுள்ள நீதிமன்றத்திலே வழக்கு தாக்கல் செய்தார்கள். இந்த வழக்கிலே வழக்காளிகளுக்குத்தான் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. சிதம்பரத்திலே இவ்வாறு நீதிமன்ற வழக்குகளை சந்தித்த பின்னர் நாவலர் பெருமான் தர்மபுரி திருவிடை மருதூர், திருவேட்டைக்கும், காரைக் கால், கோடிக்கரை ஆகிய இடங்களிலுள்ள திருத்தல ங்களுக்குச் சென்று வணங்கி விட்டு 1870ம் ஆண்டு பங்குனி மாதம் மீண்டும் யாழ்ப் பாணத்திற்கு வந்தார். அதன் பின்னர் இவர் சைவப்பாடசாலை நிறுவிய துடன் நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு அருகில் மணி மண்டபம் ஒன்றையும் அமைத்தார். 1870ம் ஆண்டு கோப்பாயில் ஒரு வித்திய சாலையை ஆரம்பித்து தமது செலவிலேயே நடத்தி வந்தார். 1871ம் ஆண்டு வண்ணார் பண்ணையில் "ஜோன் கில்னா" என்பவர் 'லெசூ லியன்" ஆங்கில பாட சாலையை நடாத்திவந்தார். இந்த பாடசாலையில் கல்வி பயின்று வந்த மாணவர்கள் விபூதி தரித்து செல்வது வழக்கமாகும். அவ்வாறு தரித்துச் சென்ற மாணவர்கள் ஒருநாள் விபூதி தரித்து சென்றமைக்காக வெளியேற்றப்பட்டார்கள். இதனைக் கண்ட நாவலர் பெருமான் வண் ணார்பண்ணையில் 1872ம் ஆண்டு தைமாதம் ஆங்கில பாடசாலையொன்றை ஆரம்பித்து வைத்தார். நாவலர் ஆரம்பித்த இந்த பாடசாலை போதிய நிதி இன்மையால் நான்கு ஆண்டுகள்தான் இயங்கியது. ஆறுமுக நாவலர் பெருமான் தாம் இதுவரை பெற்ற அனுபவங்களையும் தாம் கண்டறிந்த உண்மைகளையும் வைத்து 'யாழ்ப்பாண சமய நிலை' என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து மேலும் பல நூல்களை வெளியிட்டார். 1879 ஆம் ஆண்டு ஆடிச்சுவாதி அன்று நாவலரது கடைசிப் பிரசங்கம் இடம்பெற்றது. ஆடிச் சுவாதி, சுந்தரமூர்த்தி சுவாமிகளது குரு பூசை தினமாகும். அன்று ஆறுமுக நாவலரது கடைசி பிரசங்கம் வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் இடம்பெற்றது. 1879 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 18 நாள் ஆறுமுகநாவலரது உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. 1879-12-05 ஆம் திகதி இரவு 9 மணி அளவில் ஆறுமுகநாவலர் இவ்வுலகை விட்டு மறைத்தார்.

உயிர்கள் மீதான அன்புதான் உண்மையான மதமென்று உலகுக்கு நிரூபித்தவர் பகவான் பகவான் சத்யசாயிபாபாவின் ஜனனதினம் நாளை உலகெங்குமுள்ள பக்தர்களால் அனுஷ்டிப்பு

உலகிலுள்ள பலகோடி பக்தர்களால் நேசிக்கப்படும் பகவான் சத்திய சாய்பாபா அவர்கள் 1926ம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் திகதி பிறந்தார். இவரது இயற்பெயர் சத்ய நாராயண ராஜு ஆகும். இவரின் தாயார் ஈஸ்வரம்மாள். தந்தையார் ராஜு ரட்னகரம் ஆவார். பகவான் சத்திய சாயி பாபா அவர்கள் இளமைக் காலத்தில் இருந்தே ஒரு அதிசயக் குழந்தையாகத் திகழ்ந்ததாக அவரது தாயார் தெரிவித்திருந்தார். பாபா அவர்கள் 14 வயதாக இருக்கும் போது 1944 மார்ச் மாதம் 8ம் திகதி ஒரு சம்பவம் நடந்ததாகப் பதிவாகியுள்ளது. கொடிய விஷமுடைய கொடுக்கான் அவரைத் தீண்டியுள்ளது. பல மணிநேரமாக அவர் நினைவிழந்து இருந்திருக்கிறார். இனி மீண்டு எழமாட்டார் என நாட்டுப்புற வைத்தியர்கள் தெரிவித்த வேளை, அவர் சில மணிநேரங்களில் எழுந்து பேச ஆரம்பித்ததாகச் சொல்லப்படுகிறது. அவர் எழுந்து பேச ஆரம்பித்த பாஷையைப் புரிந்துகொள்ள முடியாத மக்கள் தேள் கடித்ததால் அவருக்கு புத்தி பேதலித்ததாக நம்பினர். ஆனால் அவர் பேசிய பாஷை சமஸ்கிருதம் என்று பின்னர் அறியப்பட்டது. அவர் சமஸ்கிருதத்தை அதற்கு முன்னர் கற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். அப்படி இருக்கும் போது அதை அவர் எவ்வாறு பேசினார் என மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். இந்த நிலையில் 1940ம் ஆண்டு மே 23ந் திகதி சாய்பாபா வீட்டில் இருந்த அனைவரையும் அழைத்தார். திடீரென தனது கையில் இருந்து கற்கண்டை வரவழைத்து அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். அதற்கு சாய்பாபா நான் யார் தெரியுமா? சீரடி சாய்பாபாவின் மறு பிறவி என்று கூறினார். அதன் மூலமே அவரை முதல் முதல் ஒரு தெய்வப்பிறவி என மக்கள் நம்ப ஆரம்பித்தனர். சீரடி என்னும் இடத்தில் 1838 ஆம் ஆண்டு பிறந்தவர் சீரடி பாபா ஆவார். இவர் பல அற்புதங்களை நிகழ்த்தி மக்கள் குறைகளை நீக்கினார். சீரடியில் பல கோயில்கள், மடங்களை உருவாக்கிய சீரடி பாபா அவர்களை பல லட்சக்கணக்கான மக்கள் போற்றி வணங்கினர். மக்களின் குறைகளைத் தீர்த்த அவர், தீராத வியாதிகளையும், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளையும் குணமாக்கினார். அவர் 1918ம் ஆண்டு தனது 80வது வயதில் இறைபதம் எய்தினார். அதற்கு முன்னர் தாம் இறைபதம் எய்யவிருக்கும் நாளை அவர் மக்களுக்குச் சொன்னதோடு, இன்னுமோர் விடயத்தையும் தெரிவித்தார். அது தான் மறுபிறவியாகும். இந்துக்களால் நம்பப்படும் ஒரு விடயம் மறு பிறவியாகும். 1918ம் ஆண்டு அவர் இறக்க முன் தான் மீண்டும் பிறந்து வருவேன் என்றும் அதிசயங்களை நிகழ்த்துவேன் என்று தெரிவித்திருந்தார். அதன் பின்னரே சத்திய சாயி பாபா அவர்கள் அவதரித்தார். புட்டப்பர்த்தி சென்ற அவர் 40களில் பல அற்புதங்களைப் புரிந்து சீரடி பாபாவின் மறு அவதாரம் தானே என மக்களுக்குக் கூறினார். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா என உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் அவருக்கு பக்தர்கள் பெருகினர். வெளிநாட்டவரும் வேற்றின மக்களும் அவரை நாடி, நன்மைகளைப் பெற்றனர். பிள்ளை யில்லாத பலர் பிள்ளை வரங்களையும், தீராத நோயால் பீடிக்கப் பட்டவர்கள் அதிலிருந்து விடுதலையும் கண்பார்வை இழந்தோர் கண் பார்வை யையும் திரும்பப் பெற்றனர் எனச் சொல்லப்படுகிறது. ஒரு மனிதனை நாம் ஏன் வணங்குகிறோம் என்று எழும் கேள்விகளுக்கு கீழே பதில்கள் உள்ளன. குறிப்பாக சத்ய சாயி பாபா அவர்களுக்கு வெளி நாட்டு பக்தர்கள் அதிகரித்ததால் அவர்கள் நன்கொடையாகக் கொடுக்கும் பணம் கோடிக் கணக்கில் சேர ஆரம்பித்தது. புட்டப்பர்த்தி என்னும் மிகவும் பின் தங்கிய கிராமத்தை அப்பணம் கொண்டு அவர் நவீன நகரமாக மாற்றினார். மலைகள் சூழ அடிவாரத்தில் இருந்த அக் குக்கிராமத்தை ஒரு நகரமாக்கிய பெருமை அவரையே சாரும். விமான நிலையம், மருத்துவக் கல்லூரி, இலவசப் படிப்பு, பாடசாலை, பல்கலைக்கழகம், இலவச மருத்துவமனை, இலவச இருதய அறுவை சிகிச்சை என பல திட்டங்களை நிறைவேற்றினார் பாபா. பாபா இருதய அறுவை சிகிச்சை மருத்துவமனை, இதுவரை பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. அதுமட்டுமா, குடிக்கும் நீர் என்றால் அது ஒரு கனவு என்று நினைத்திருந்த கிராம மக்களுக்கு நீர் வசதி செய்து கொடுத்துள்ளார். ஆந்திர அரசாங்கமே செய்ய தயங்கிய காரியம் ஒன்றை எந்த எதிர்ப்பு வந்தாலும் பரவாயில்லை என அவரே முன் நின்று செய்து முடித்தார். பல கோடி ரூபா செலவில் சுமார் 3500 கி. மீட்டர் நீளமான குழாய்களை அமைத்தார். அதனூடாக நீரை எடுத்து வந்து வறண்ட பல கிராமங்களைச் செழிப்புறச் செய்தார். விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாத மக்கள் நீர் கிடைத்ததால் விவசாயம் செய்தனர். தமது வாழ்வாதாரத்தை வளப்படுத்தினர். சுமார் 5 இலட்சம் மக்கள் பல குக்கிராமங்களில் இன்று விவசாயம் செய்வது பாபாவின் நீர்ப்பாசனத் திட்டத்தினால் என்பது யாவரும் அறிந்ததே. இத் திட்டம் தொடர்பாக பல சர்வதேச தொலைக் காட்சிகள், பாபாவை புகழ்ந்து பாராட்டின. இலட்சக்கணக்கான மக்கள் உயிர்வாழ, இலட்சக்கணக்கான மக்களுக்கு அவர்கள் நினைத்துப்பார்க்க முடியாத சத்திர சிகிச்சைகளை இலவசமாகச் செய்துகொள்ள வசதி செய்து கொடுத்தார். இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு இலவசக் கவ்வி கொடுத்து, இலட்சக்கணக்கான மக்களுக்கு குடிக்கவும், விவசாயத்துக்கும் தண்ணீர் கொடுத்து அவர்கள் வாழ்வாதாரங்களை உயர்த்தி அவர்களை வாழவைத்த ஒரு நல்ல மனிதராக பகவான் சத்ய சாயிபாபா திகழ்ந்தார். பாபா புரிந்த அற்புதங்களை எவர் வேண்டும் என்றாலும் விமர்சிக்கலாம். ஆனால் அவர் புரிந்துள்ள மனித நேயத் தொண்டையோ இல்லை மனிதநேய உதவிகளையோ எவராலும் மறுக்கவோ இல்லை விமர்சிக்கவோ முடியாது. ஏழையின் சிரிப்பில் இறை வனைக் காண்கிறேன் என்றான் கவி ஞன். அதனையே பாபா செய்திருக்கிறார் எனலாம். தனி ஒருவனுக்கு உண வில்லையேல் இந்த ஜெகத்தினை அழிப்போம் என்றான் புரட்சிக்கவி பாரதி. பாபா மக்களுக்கு உணவை வழங்கியதோடு நின்று விடாது விவசாயத்தைச் செய்ய உதவியுள்ளார். இலட்சக்கணக்கான மக்களுக்கு உதவி செய்துள்ளார். பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா 1944 ஆம் ஆண்டு குடும்பத்தை விட்டு பிரிந்து புட்டபர்த்தி அருகே கட்டப்பட்டுள்ள கோயிலில் வசிக்கத் தொடங்கினார். இவ்வாறு இங்கு வசித்த வேளையில் ஆன்மீகப் பயணமாக பெங்களூருக்குச் சென்றார். அதுவரை அவர் தூய வெள்ளை நிறத்தில் நீண்ட சட்டையும் அணிந்து வந்தார். பின்னர் காவி உடைக்கு மாறினார். 1950 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி புட்டபர்த்தியில் பிரசாந்தி நிலையம் என்ற பிரமாண்டமான ஆசிரமத்தை கட்டி அவருடைய 28வது பிறந்த நாளில் திறந்து வைத்தார். 1957 ஆம் ஆண்டு பிரசாந்தி நிலைய வளாகத்தில் இலவச மருத்துவ மனையை திறந்து வைத்தார். பகவான் சத்ய சாயிபாபா 1968 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதி முதன் முதலாக வெளிநாட்டு பயணமாக நமிபியா, உகண்டா ஆகிய நாடுகளுக்குச் சென்றார். 1968 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் திகதி ஆந்திரா மாநிலத்தில் உள்ள அனந்தபூரில் மகளிர் கல்லூரி ஒன்றை திறந்து வைத்தார். 1968 ஆம் ஆண்டும் மும்பையில் ஆன்மீகம் மற்றும் சமூக சேவைக்காக தர்மஷேத்ரா என்ற சத்ய மந்திரை நிறுவினார். 1972 ஆம் ஆண்டு ஆன்மீக மற்றும் சமூக பணிகளை நிர்வகிக்க ஸ்ரீசத்ய சாய் சென்ட்ரல் டிரஸ்ட்டை நிறுவினார். இவ்வாறாக 1973 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் சிவம் மந்திரையும் 1981 ஆம் ஆண்டு புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய் பல்கலைக்கழகத்தையும் தொடங்கினார். இவ்வாறாக அவர் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது பணிகளை செய்துகொண்டே வந்தார். பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினுள் இருக்கும் ஆன்மாவுக்குள்ளும் கடவுளின் பிரதிநிதித்துவம் இருக்கிறது என்பதை அவர்களை உணர்ந்து வைத்து கடவுளை சென்றடையும் வழியின் மூலம் அவர்களை சகோ தரத்துவம் என்ற பிணைப்பின் கீழ் ஒரே குடும்பமாக இணைப்பதே என் குறிக்கோள் அதற்காக நான் வருகை தந்துள்ளேன் என்று கூறிய பகவான் அவர்கள், உண்மை, நேர்மை, அமைதி அன்பு மற்றும் அஹிம்சை ஆகிய ஐந்தும் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வதற்கான வழி கட வுளிடம் அன்பு செலுத்துதல், தவறு செய்ய அஞ்சுதல் மற்றும் ஒழுக்க நெறிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதுபோல தன்னலமற்ற சேவை செய்வதன் மூலம் பாவங்களில் இருந்து விடுபட முடியும் என்று அவர் கூறியுள்ளார். மனிதனுக்குச் செய்யும் சேவை கடவுளுக்குச் செய்யும் தொண்டு என்றும் அவர் கூறியுள்ளார். எல்லா மதங்களும் சிறு சிறு நதிகளாகும் எல்லா நதிகளும் போய்ச் சேருவது கடலில்தான். கடலில் சேர்ந்துவிட்டால் பின்பு அது நதியல்ல. இந்த நியதிதான் ஸ்நானம்!இது எல்லா மதங்களையும் ஆட்கொள்கிறது. ஆகவே இவ்வுலகில் ஒரே ஒரு மதம். அது தான் அன்பு மதம். இது என்று கூறி இக்கோட்பாட்டை உலகறியச் செய்து உலகில் உள்ள எல்லா இன மக்களையும் அரவணைக்க வந்தவர் பகவான் ஸ்ரீ சத்யசாயி பாவா அவர்கள். 1999 ஆம் ஆண்டு மதுரையில் ஆனந்த நிலைய மந்திரை அமைத்தார். 2001 ஆம் ஆண்டு ஏழைகள் இலவசமாக சிகிச்சை பெறும் விதத்தில் பெங்களூரில் நவீன பல்நோக்கு கூட்டுறவு ஆஸ்பத்தி ரியை அமைத்தார். 2006 ஆம் ஆண்டு இருப்பு நாற்காலி ஒன்று விழுந்ததில் சாய் பாபாவின் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது. 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி மூச்சுத் திணறல் காரணமாக புட்டபர்த்தியில் உள்ள நவீன மருத்துவமனையில் சத்யசாயி பாபா சேர்க்கப்பட்டார். 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி பகவான் சத்ய சாயி பாபா ஜீவ சமாதி அடைந்தார். அவர் ஜீவ சமாதி அடைந்து விட்டாலும் அவரது பெயரால் அமைக்கப்பட்ட சமய சமூக சேவை நிறுவனங்களின் சேவைகள் தொடரப்பட்டு வருகின்றன. அவரது திருநாமத்தால் அமைக்கப்பட்டு ள்ள பகவான் சத்ய சாயி பாபா நிலையங்களில் நாளை 23 ஆம் திகதி அவரது ஜனன தினத்தையொட்டி பூஜைகளும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. பூஜைகள் நடத்தப் படுவதுடன் அன்னதானமும் வழங்கப் படும். கொழும்பு 13, புதுச் செட்டித் தெருவில் அமைந்துள்ள பகவான் சத்ய சாயி மத்திய நிலையத்திலும் கொழும்பு 7 பான் பிளேஸில் அமை ந்துள்ள பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா வின் நிலையத்திலும் நாளை சனிக் கிழமை இவ்வாறான விசேட பஜனை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. நாளை காலை முதல் மாலை வரை இந்நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

அட்லாண்டா சுவாமி நாராயண மந்திர்

அமெரிக்காவில் ஜியார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டாவில் சுவாமி நாராயணனுக்கு புதிய கோயில் எழுப்பப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் கல்வேலைப்பாடு அமைந்த இந்துக் கோயில்கள் பத்தில் இதுவும் ஒன்று. கோயில் அமைப்பு 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோயில் இது. கட்டட அளவு 22 ஆயிரத்து 442 சதுர அடி கோயிலின் வெளிப்புறம் துருக்கி லிம்ரா சுண்ணாம்புக் கல்லால் ஆனது தரைத் தளம் இத்தாலிய கராரா மார்பிளால் உருவாக்கப்பட்டுள்ளது. அடித்தளம் இந்திய மணற் பாறைகளால் அமைந்தது. 15 கிலோ எடையுள்ள சிறிய கல்லில் இருந்து 5.2 தொன் எடையுள்ள பெரிய கல்வரை, 8430 தொன் எடையுள்ள கற்கள் இக்கோயில் கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இக்கோயிலில் 40 ஆயிரம் கற் துண்டுகள் உள்ளன. கோயிலின் நீளம் 213 அடி. அகலம் 122 அடி. விதானம் கூம்பு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் பரிக்ரமா (வலம் வருதல்) செய்ய வசதியுள்ளது. ஐந்து பெரிய கலசங்களும், நான்கு சிறிய கலசங்களும், ஒரு பெரிய மாடமும், ஆறு சிறிய மாடங்களும், 129 வளைவுகளும், நான்கு பால்கனிகளும், 14 ஜன்னல்களும், 151 தூண்களும், 75 விதானங்களும் இக்கோயிலில் உள்ளன. 39 வகையான டிசைன்கள் கோயிலின் அழகுக்கு மேலும் மெருகூட்டுகிறது. கோயிலின் உள்ள மண்டபத்தில் கடைசல் வேலைப்பாடுடன் கூடிய தூண்களும், ஜன்னல்களும் அருமையாக உள்ளன. படிக்கற்கள் மார்பிளாலானவை. கீழ் தளம் முழுவதும் ஜெல் டியூபால். உஷ்ணமாக்கப்பட்டுள்ளது. பைபா ஒப்டிக் முறையில் ஒளியூட்டப்பட்டுள்ளது. கோயில் கட்ட 19 மில்லியன் டொலர் செலவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பம்சம்: தூண்களில், வேத, புராண நிகழ்ச்சிகளைச் சித்தரிக்கும் சித்திர வேலைப்பாடுகள் கண்களைக் கவரும் முழு கட்டமைப்பும் சிற்ப சாஸ்திர அடிப்படையிலேயே அமைந்துள்ளது. மார்பிள், சுண்ணாம்புக்கல் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு, குறுகலான கூம்பு அமைப்பு, ரோஜாமலர் சிற்பங்கள், இலை போன்ற 500 க்கு மேற்பட்ட சிற்பங்கள் செதுக்கப்பட்டன. அவை அட்லாண்டாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆலய வரலாறு: 1980 களில் இப்பகுதியில் வாழ்ந்த சுவாமி நாராயண பக்தர்களால் இந்துக்கள் கூடும் இடமாக இக்கோயில் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு பழைய பாழடைந்த மண்டபம் ஒன்று வாங்கப்பட்டு அதில் தற்காலிக கோயில் அமைக்கப்பட்டது. பின்னர் அந்த பாழடைந்த மண்டபம் சீரமைக்கப்பட்டு தற்போது உள்ள பிரம்மாண்ட கோயிலாக உருப்பெற துவங்கியது. 2000 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இக்கோயிலின் விரிவாக்கப் பணிகள் நடத்தப்பட்டன. 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோயிலுக்கென சொந்தமாக நிலம் வாங்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சுவாமி நாராயண மந்திர் முழுமை பெற்ற ஆலயமாகவும், பக்தர்கள் கூடும் இடமாகவும் செயல்படத் தொடங்கியது.

இந்து முறைப்படியான உணவு

கே. ஈஸ்வரலிங்கம் (10423) அளவுக்கு அதிகமாக உண்டால் என்ன நடக்கும்? நோய் வரும், ஆயுள் குறையும். (10424) உணவில் மிளகு சேர்ப்பதால் ஏற்படும் நன்மை யாது? உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலிலுள்ள விஷமும் முறிகிறது. (10425) வெந்தயம் சேர்ப்பதால் ஏற்படும் நன்மை யாது? உஷ்ணம் குறையும். (10426) வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊறவைத்து, காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகிவந்தால் என்ன நடக்கும்? உடம்பிலுள்ள உஷ்ணம் குறையும். (10427 உணவில் கடுகு சேர்க்கப்படுவதால் உண்டாகும் நன்மை யாது? உடலிலுள்ள உஷ்ணத்தை ஒரேயளவில் வைத்திருக்கும். (10428) இஞ்சியை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் நன்மை என்ன? பித்தம், தலைசுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வராது. (10429) உணவு உண்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும்? கை, கால், வாய் போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். காலில் நீர் உலர்வதற்கு முன்பே உணவை உண்ணத் தொடங்க வேண்டும். (10430) உணவு உண்ணும்போது செய்யத் தகாதவை எவை? பேசக்கூடாது, கதை படிக்கக்கூடாது, இடது கையைக் கீழே ஊன்றக் கூடாது, தொலைக்காட்சி பார்க்கக் கூடாது. (10431) வீட்டில் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணலாமா? கூடாது. (10432) காலணி அணிந்துகொண்டு உண்ணலாமா? கூடாது (10433) சூரியோதயத்திலும் மறையும் போதும் உண்ணலாமா? கூடாது (10434) இருட்டிலோ நிழல்படும் இடங்களிலோ உண்ணலாமா? கூடாது (10435) சாப்பிடும் போது தட்டினைக் கையில் எடுத்துக்கொண்டு உண்ணலாமா? கூடாது (10436) தட்டை மடியில் வைத்துக்கொண்டும், படுத்துக்கொண்டும் உண்ண லாமா? கூடாது (10437) எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணலாமா? கூடாது (10438) புரச இலையில் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மை என்ன? புத்தி வளரும் (10439) வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மை யாவை? நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை

திங்கள், 11 நவம்பர், 2013

அமெரிக்காவிலுள்ள ஆலயம்

அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாகாணத்திலுள்ள போவாடு கன்ட்ரியில் 1996 ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த கணபதி ஸ்தபதி தலைமையில் திராவிட கலாசாரத்துடன் ஒரு கோயில் கட்ட முடிவெடுக்கப்பட்டது. இதற்காக 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முறையான அனுமதி பெறப்பட்டு 2000 ஆம் ஆண்டு ஏப்ரலில் இந்தியாவின் மாமல்ல புரத்திலிருந்து 12 சிற்பிகள் வரவழைக்கப்பட்டு இந்திய முறைப்படி திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இரண்டு புதிய கட்டடங்களுடன் கூடிய இக்கோயிலில், இரண்டு ராஜகோரங்களும் சிவன் மற்றும் விஷ்ணு கர்ப்பகிரங்களின் மேல் இரண்டு விமான கோபுரங்களும் உள்ளன. சுமார் 6200 சதுர அடி பரப்பளவில் அமைந்த இக்கோயிலில், சிவன்சன்னதி, சோழ மற்றும் பல்லவ பேரரசுகளின் கலாசாரப்படியும் விஷ்ணு சன்னதி, விஜயநகர பேரரசின் கலாசாரப்படியும் ஐயப்பன் சன்னதி, கேரள முறைப்படியும் அமைக்கப்பட்டுள்ளன. சமுதாயக்கூடத்தின் பின்புறமாக அமைந்துள்ள இரண்டாவது கட்டடத்தின் கும்பாபிஷேகம் 2001 ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது. முன்னூறு இருக்கைகளைக் கொண்ட இக்கட்டடம் திருமணம் போன்ற வைபவங்களுக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கும் வாடகைக்கு விடப்படுகிறது. இக்கோயிலின் கும்பாபிஷேகம் 2001 ஆம் ஆண்டு நவம்பர் 23 முதல் 25ம்திகதி வரை நடத்தப்பட்டது. தினமும் சிவ மந்திரமும் பஞ்சாட்சர மந்திரமும் நான்கு அர்ச்சகர்களைக் கொண்டு ஓதப்படுகிறது. சிவன், வெங்கடேஸ்வரர், ஐயப்பன், சரஸ்வதி, முருகன், லட்சுமி, ஆண்டாள், காமாட்சி, கிருஷ்ணன், ராமர், கணபதி, ஆஞ்சநேயர் மற்றும் நவகிரகங்கள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

கே. ஈஸ்வரலிங்கம்

(10396) வேதங்களை வகுத்துக் கொடுத்தவர் யார்? வேதவியாசர் (10397) பதினெட்டுப் புரானங்களை உபகரித்தவர் யார்? வேதவியாசர். (10398) சத்தியலோகத் தில் உள்ள மண்டப த்தின் பெயர் என்ன? சபா மண்டபம் (10399) ஈரேழு லோகங்களையும் படைத்தருளியர் யார்? பிரம்மதேவன் (10400) சரஸ்வதியின் மறு பெயர் என்ன? நாமகள், கலைமகள் (10401) பிரம்மதேவனின் மறு பெயர்கள் என்ன? நான்முகன், கமலோற்பவன், வேதமுதல்வன், சதுர்முகன், திருசடைப்பிரான், மலரோன், (10402) பற்றற்ற பரமன் என்பது யாரைக் குறிக்கும்? சிவபெருமானைக் குறிக்கும். (10403) பிரம்மதேவன் அருந்தவசியர்களுக்காக படைத்தருளிய தபோவனத்தின் பெயர் என்ன? நைமிசாரணியம், (10404) சந்திரவேள்வி என்பது ஒரு பிரம்மாண்டமான வேள்வி. இது எவ்வளவு காலம் நடைபெற்றது? 12 ஆண்டுகள். (10405)ஆதி காலத்தில் சிவபெருமான் நந்தி பெருமானுக்கு எத்தனை புராணங்களை உபதேசித்து அருளினார்? 18 புராணங்களை (10406) 18 புராணங்களையும் சனத் குமார முனிவரிடம் இருந்து கேட்டுத் தெரிந்துகொண்டவர் யார்? வியாச பகவன். (10407)வியாச பகவான் அந்த 18 புராணங்களையும் என்ன செய்தார்? சுலோகங்களாக்கி உலகம் உய்ய அச் சுலோகங்களை வழங்கினார். (10408)வியாச பகவன் 18 புராணங்களையும் சுலோகங்கள் ஆக்கிய பின்னர் வேறு பற்பல முனிவர்கள் அப்புராணங்களை என்ன செய்தார்கள்? வேறு வேறு பரம்பரை வழியாக உபதேசம் பெற்று, அம்மகா புராணங்களுக்கு 18 உப புராணங்கள் இயற்றி அருளினார்கள். (10409)சிவபெருமானின் மறு பெயர்கள் சில தருக. கயிலை மலைவாசன், முக்கண்ணப் பெருமான், ஸ்ரீ பரமேஸ்வரன்

திங்கள், 4 நவம்பர், 2013

கே. ஈஸ்வரலிங்கம்

10385) நாம் பட்டையடிக்க பயன்படுத்தும் மூன்று விரல்களும் எதன் வடிவம்? ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவம் 10386)) இதில் ஆட்காட்டி விரலால் இடப்படும் கோடு எதை குறிக்கும்? சாம வேதத்தை 10387) நடுவிரல் எதை குறிக்கும்? யஜுர் வேதத்தை 10388) மோதிர விரல் எதை குறிக்கும் சாம வேதத்தை 10389) நாம் பட்டையடிக்க பயன்படுத்தும் மூன்று விரல்களும் எதை குறிக்கும்? மூன்று வேதங்களை 10390) இந்த மூன்று பட்டைகளும் வேறு எவற்றை குறிக்கும்? பிரம்மா, விஷ்ணு, சிவன், சிவன், சக்தி, ஸ்கந்தர் அறம், பொருள், இன்பம் குரு, லிங்கம், சங்கமம் படைத்தல், காத்தல், அழித்தல் 10391) கோயில்களுக்கு சென்று இறைவனை வணங்கும் போது முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் எத்தனை உள்ளதாக ஆகமங்கள் கூறுகின்றன? மூன்று 10392) அந்த மூன்று வழிமுறைகளையும் தருக. உத்தம நமஸ்காரம், அஷ்டாங்க நமஸ்காரம், பஞ்சாங்க நமஸ்காரம் 10393) மனிதனின் ஆத்ம இருப்பிடம் எது? இதயம் 10394) நமது இரண்டு கரங்களும் எத்தன்மை வாய்ந்தவை? லட்சுமி வாசம் செய்யும் வேதரேகைகள், மந்திர உபதேசங்கள் நிறைந்தது. 10395) நமது இரண்டு கரங்களை இணைத்து இதயத்திற்கு அருகில் மார்பிற்கு நேரே மையத்தில் வைத்து மனதில் மட்டுமே மந்திரங்களைக் கூறி இறைவனை ஒரு நொடியேனும் மனதார வணங்குவதை என்னவென்று கூறுவார்கள்? உத்தம நமஸ்காரம்.

வெள்ளி, 1 நவம்பர், 2013

பிஜி நாட்டில் உள்ள மிகப் பழைமையான கோயில்

பிஜி நாட்டில் உள்ள சிவசுப்ரமணிய சுவாமி ஆலயம் நாடீ நகரின் வட பகுதி எல்லையில் அமைந்துள்ள மிகப் பழைமையான ஆலயமாகும். பிஜி நாட்டில் உள்ள மிகப் பழைமையான கோயிலாகவும் இது கருதப்படுகிறது. நீண்ட காலமாக பக்தர்கள் மனதில் இருந்த தீராத தாகத்தினாலும் ஆதரவாளர்களின் ஓயாத முயற்சியினாலும் இப்புனிதமான ஆலயம் உருவாக்கப்பட்டது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெருமளவிலாக பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்கின்றனர். இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் பல்வேறு இன மக்களும் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர். தங்களுக்கென தனிப்பட்ட கோயில் அமைக்க வேண்டும் என்பது பிஜி நாட்டு இந்துக்களின் ஆவலாகும். இந்த ஆவல் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புதான் நிறைவேறியது. பல சோதனைகளுக்கு பிறகு பல அமைப்புக்களைச் சேர்ந்தவர்களின் கூட்டு முயற்சியின் காரணமாக 1991ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இக்கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இக்கோயிலுக்கான பொறியியலாளர் பணிகளை இலவசமாக செய்து தர கட்டிடப் பொறியியலாளர் நவீன் மொரார்ஜி ஒப்புக் கொண்டார். அதே ஆண்டில் கோயில் நிர்வாகத் தலைவர் நாராயண் ரெட்டி, அஸ்திரேலியா, நியூசிலாந்து கனடா, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்குச் சென்று நிதி திரட்டி கோயிலின் முன்னேற்ற பணிகளை மேற்கொண்டார். 1992ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இக்கோயிலின் கட்டுமானப்பணிகள் முடிவடைந்தன. இதற்காக திறமை வாய்ந்த சிற்பிகளும் ஓவியர்களும் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டனர். இங்குள்ள சிற்பங்களும், ஓவியங்களும் காண்போரின் உள்ளத்தை கவரும் வண்ணம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. 1994ஆம் ஆண்டு ஜுலை மாதம் இக்கோயிலில் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதற்கென சிறப்பு ஏற்பாடுகளாக சிவாச்சாரியார்களும் குருக்களும் இந்தியாவிலிருந்து வரவரழைக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இப்புதிய கோயிலின் கும்பாபிஷேகம் 1994ம்ஆண்டு ஜுலை 11ம் திகதி முதல் 15ம் திகதி வரை சிறப்பாக நடைபெற்றது. இச்சிறப்புமிகு கும்பாபிஷேக விழா அமெரிக்காவின் ஹவாய் தீவின் குருதேவ் சிவாய சுப்ரமணிய சுவாமிகளால் நடத்தப்பட்டது. இக்கோயிலில் காலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை பூஜைகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை பூஜை இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

கே. ஈஸ்வரலிங்கம்

(10379) வெள்ளிக்கிழமையில் பெண்கள் விரதம் இருப்பது ஏன்? விரதங்களில் சிறந்தது வெள்ளிக்கிழமை விரதம் இதனை சுக்கிரவார விரதம் என்று குறிப்பிடுவர். அம்பிகைக்கும், முருகனுக்கும் உகந்த நாளான வெள்ளியில் விரதம் இருந்தால் கன்னிப் பெண்கள் நல்ல கணவர் வாய்க்கப் பெறுவர், சுமங்கலி பாக்கியம், குழந்தைப்பேறு, செல்வவளம் உண்டாகும். தை, ஆடி வெள்ளிக்கிழமைகள் மேலும் சிறப்பானவை. (10380) கிரகண வேளையில் கோயில் நடை சாத்துவது ஏன்? கிரகண வேளையில் நடை சாத்த வேண்டிய அவசியமில்லை. கிரகண காலத்தில் புண்ய கால தீர்த்தம் கொடுத்துச் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் செய்யச் சொல்லி சாஸ்திரங்கள் கூறுகின்றன. சில கோயில்களில் இது வழக்கத்திலும் உள்ளது. (10381) பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது ஏன்? அவசரமாக ஒரு செயலைச் செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிற நேரத்தில், புதன்கிழமை அமைந்து விட்டால் வேறு எதையும் பார்க்காமல் செய்து விடலாம். பொன்னைக் கூட (தங்கம்) விலை கொடுத்து வாங்கி விடலாம். நமக்குப் பொருத்தமாக புதன் கிடைப்பது அரிது என்பது இதன் பொருள். (10382) அனுமானுக்கு வெற்றிலை மாலை சாத்தப்படுவது ஏன்? அசோக வனத்தில் அனுமன் சீதையைக் கண்டு இராமரைப் பற்றிய விவரங்களை கூறி இராமரின் கணையாழியைக் கொடுத்து சூடாமணியைப் பெற்றார். அன்னையிடம் விடைபெறும் சமயம், அனுமனை ஆசிர்வதிக்க எண்ணிய சீதை தான் அமர்ந்திருந்த வெற்றிலைக் கொடியின் இலைகளை பறித்து அனுமாரின் தலையில் புஸ்பமாய் போட்டு ஆசிர்வதித்து வழி அனுப்பி வைத்தார். இதனால் அன்னையின் நினைவாகவே அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கப்படுகின்றது என்று கூறப்படுகிறது. (10383) குரு பார்க்க கோடி நன்மை என்பது ஏன்? நவக்கிரகங்களில் முழுமையான சுபகிரகம் குரு. இவர் தேவர்களுக்கு பாடம் போதிக்கும் குருவுமாவார். எனவே, இவரது பார்வை எந்த ராசியின் மீது பட்டாலும் எல்லாத் தோஷங்களும் நீங்கிவிடும். ஒருவருடைய ராசிப்படி ஏழரைச்சனி நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த ராசிக்கு குரு பார்வை இருந்தால் கெடுதல் விளையாது என்பதையே குரு பார்க்க கோடி நன்மை என்கிறார்கள் கோடி என்றால் அளவு கடந்த என்றும் பொருள் உண்டு. ஆரத்தி ஏன் எடுக்கப்படுகிறது? நம் முன்னோர்கள் கடைப்பிடித்த பாரம்பரிய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் நம் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை. ஆனால் நம் தலைமுறை அதை சரியாக உணர்வதில்லை. தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை. சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. இதில் முக்கியமான கருத்துக்கள் மறைந்துள்ளன. தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பும் சேர்த்து கலக்க வேண்டும் மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம். மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம். அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம் ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேணுவதோடு பிறருக்கும் அந்த விஷ கிருமிகள் பரவாது தடுக்கிறது

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812