திங்கள், 28 மே, 2018

மாதவ மாதம்

விசாகம், வைகாசி, அனிலநாள், சோதிநாள் எனவும் படும். இருபத்தேழு நட்சத்திரங்களில் விசாகமும் ஒன்று. சூரபதுமன் முதலான அசுரர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தமது குறைகளை முறையிட்டனர். கருணையங் கடலாகிய சிவபிரான் அசுரர்களுடைய கொடுமைகளினின்று அவர்களைக் காத்தருள விரும்பினார். தமது நெற்றிக்கண்ணின்றும் ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். அவ்வாறு பொறிகளும் வாயு, அக்கினி, தேவர்களினால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கை சரவணப் பொய்கையில் கொண்டு சேர்த்தது. சரவணப் பூந்தடாகத்திலே ஆறு பொறிகளும் ஆறு திருக்குழந்தைகளாகி விளங்கின.ஆறு பொறிகளும் திருக்குழந்தைகளான தினம் வைகாசி மாதத்து விசாக நாள் ஆகும்.
உத்தராயண காலத்தின் ஐந்தாவது மாதம் வைகாசி மாதம். இளவேனில் எனும் வசந்த காலம் இது. வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்பர். வைகாசி மாதத்துக்கு மட்டுமே இந்தச் சிறப்பு உண்டு. காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவதாரம் செய்தது வைகாசி மாத அனுஷ நட்சத்திர நாளில்தான். நாயன்மார்களுள் கழற்சிங்கர், சோமாசி மாறர், திருஞான சம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருநீலநக்கர், முருகநாயனார், நமிநந்தியடிகள் ஆகியோர் அவதரித்ததும் வைகாசி மாதத்தில்தான். பெரிய புராணம் அருளிய சேக்கிழார் சுவாமிகளும் வைணவப் பெரியாரான நம்மாழ்வாரும் அவதரித்தது இந்த மாதத்தில் தான்.

திமிலை ஶ்ரீகண்ணகி அம்மன் ஆலய மஹோற்சவம்

வரலாற்று சிறப்பு வாய்ந்த சிலாபம் திமிலை ஶ்ரீகண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் இன்று 28ந்திகதி திங்கட்கிழமை தொடக்கம் 1ந்திகதி வெள்ளிக்கிழமை வரை திருவிழா நடைபெற உள்ளது. கொடியேற்றம் இன்று திங்கட்கிழமை (28) இடம்பெறுவதோடு 29திகதி சக்திக் கரகம் இடம்பெற்று 30ம் திகதி விஷேட பூஜையோடு 31ம் திகதி காலை மஞ்சள் நீராடல், பொங்கல் இடம்பெறும். இறுதியாக இடும்பன் பூஜை 1ஆம் திகதி நடைபெறுவதுடன் திருவிழா இனிதே நிறைவு பெறும்.

தீபாராதனை

தீபாராதனை காட்டுவது ஏன்?

கோயில்களில் கற்பூர தீபாராதனையும், நெய்விளக்கு தீபாராதனையும் காட்டப்படுகின்றன. கற்பூரமும் நெய்விளக்கும் கடைசிவரை எரிந்து போகும். எதுவும் மிஞ்சாது.மனிதன் இறந்த பிறகும் இதே நிலை தான். எஞ்சும் சாம்பல் கூட தண்ணீரில் கரைக்கப்பட்டு விடுகிறது. இந்த தத்துவத்தை உணர்த்தவே கோயில்களில் தீபாராதனை காட்டப்படுகிறது.


கற்பூர தீபாராதனைகள் எதனை உணர்த்துகின்றன?
கற்பூர வழிபாட்டில் எதுவுமே மிஞ்சாது. நாமும் கற்பூரத்தை போல் நம்மை முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணித்து வழிபட்டால் இறைவனது ஜோதி தரிசனம் கிடைக்கும் என்பதையே கற்பூர தீபாராதனை உணர்த்துகிறது.


சாப்பிட்ட பின்பு குளிக்கலாமா?

காலையில் எழுந்ததும் காலைக்கடன்கள் முடித்து குளித்தபின்பே சாப்பிடவேண்டும். எக்காரணத்திற்காகவும் சாப்பிட்ட பின்பு குளிக்கவே கூடாது. சாப்பிட்ட உணவு செரிப்பதற்கு வெப்பம் அவசியம் தேவை. சாப்பிட்ட பின்பு குளித்தால் உடலின் வெப்பம் குறைந்து விடும். எனவே செரிப்பதற்கு நேரமாகும். வயிற்றிலும் வீண் தொல்லை ஏற்படும். காலப்போக்கில் பசியும் எடுக்காது. இதனால் தான் குளிக்கும் முன்பு சாப்பிடக்கூடாது என்பர். இதையே பெரியோர் குளிக்கும் முன் சாப்பிட்டால் போஜனம் கிடைக்காது எனவும் சொல்லி வைத்தனர்.


வால்மீகி இராமாயணத்திற்கும், தமிழில் கம்பர் எழுதிய இராமாயணத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன ?

வால்மீகி இராமனை மனிதப்பண்புகளில் சிறந்தவனாக வைத்துப் பாடினார். கம்பர் தெய்வமாகவே கொண்டு இலட்சிய நாயகனாக்கினார்.

திருமதி, ஸ்ரீமதி, சௌபாக்யவதி இவை மூன்றில் ஒரு பெண்ணை குறிப்பிடும்போது எது பொருத்தமாக இருக்கும் ?

முன்பெல்லாம் எல்லாப் பெண்களையும் ஸ்ரீமதி என்றும், தம்மினும் வயது குறைந்தவர்களை சௌபாக்யவதி என்றும் சொல்லி வந்தார்கள். ஸ்ரீமதி என்பது வடமொழியாக இருப்பதால் தமிழாக்க வேண்டுமென்று கருதிய சிலர் திருமதி என்று எழுதுகிறார்கள். ஸ்ரீமான் என்பதை திருவாளர் என்று மொழி பெயர்த்தார்கள். அது பழைய இலக்கியத்தில் கண்ட சொல்தான். ஆனால், ஸ்ரீமதி என்பதற்கு சரியான மொழிபெயர்ப்பு திருமதி அல்ல ; திருவாட்டி என்பதே சரி.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812