திங்கள், 25 ஏப்ரல், 2011

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர், ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


(மேற்பிரிவு)


8466) ஏழு துளைகளையுடைய வாத்தியம் எது?

நாதசுரம்.

8467) பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்டம் இல்லது
நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே
ஆவினுக்கு என்பது என்ன?

பசு

8468) அரனஞ்சாருதல் என்பது என்ன?

பஞ்ச கவ்வியங்களால் இறைவன் மஞ்சனம் ஆடுதல்

8469) சம்பந்தர் பொற்றாளம் பெற்றது எந்த பதிகத்தை பாடி?

மடையில் வாளை

8470) சுக்கிர வாரம் என்பதன் பொருள் என்ன?

வெள்ளிக்கிழமை.

8471) இறைவன் உலகம் முழுவதை யும் ஒடுக்கி நிற்கும் காலத்தை என்னவென்று கூறுவர்?

இருட்காலம், பிரளய காலம், ஊழி முடிவு, சர்வசம்மார காலம்.

8472) ஆதிரையில் முதல்வன் என்று அழைப்பது யாரை?

சிவபெருமானை

8473) சூரியன் கன்னி இராசியில் செல்வது எந்த மாதம்?

புரட்டாதி

8474) திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என்பன எத்தனையாம் திருமுறையில் உள்ளன?

ஒன்பதாம்

8475) சிவபெருமானது சிறந்த பொருள் சேர் புகழைக் கூறும் அருட்பா எது?

திருவிசைப்பா

8476) பல ஆண்டுகள் வாழ்க என மெய்யடியார்கள் வாழ்த்துவர். அங்ஙனம் வாழ்த்திக் கூறும் அருட்பாவை என்னவென்று கூறுவீர்?

திருப்பல்லாண்டு

8477) திருப்பல்லாண்டுத் திருப்பதிகம் பாடியருளியவர் யார்?

சேற்தனார்

8478) சிதம்பரத் தேர்த்திருவிழாவிலே ஓடாது நின்ற தேரை ஓடச் செய்யும் பொருட்டுப் பாடியருளப்பட்ட திருப்பதிகம் எது?

ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்...

8479) சிவனடியே சிந்திக்குந் திருப்பெருகு சிவஞானம்.... என்ற பதிகம் யார் பெற்ற ஞானத்தைப் பற்றி கூறுகி றது?

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

8480) ‘தொண்டர்சீர் பரவுவார்’ என்ற சிறப்புப் பெயரை பெற்றவர் யார்?

சேக்கிழார்

8481) சேக்கிழாருக்கு கிடைத்த வரிசை பெயர் என்ன?

உத்தம சோழப் பல்லவன்

8482) அருணகிரிநாதர் எத்தனையாம் நூற்றாண்டில் அவதரித்தவர்?

15 ஆம் நூற்றாண்டில்

திங்கள், 18 ஏப்ரல், 2011

அறநெறி அறிவுநொடி



கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர், ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


(மேற்பிரிவு)


8456) மலைகிழவோன் என அழைக்கப்படுவர் யார்?

முருகப்பெருமான்

8457) மலையும் மலை சார்ந்த கடவுள் என்பதால் முருகனை தமிழ் நூல்கள் வேறு எவ்வாறு அழைக்கின்றன?

குறிஞ்சிக் கிழவன்.

8458) யான் எனது என்ற அகந்தை அற்ற அடியவர்களிடம் முருகன் தானே வந்து அருள் புரிவான் என்ற தத்துவத்தை விளக்குவது எது?

வள்ளித் திருமணம்

8459) முருகனுக்குச் சிறப்பாக அமைந்த படை எது?

வேலாயுதம்

8460) முருகவேளுக்குரிய மந்திரம் ஆறு எழுத்து - அதனை என்னவென்று கூறுவர்?

சடாட்சரம்

8461) முருகப் பெருமான் மருவும் அடியவர் மனதில் உறைவதால் அவரை என்ன பெயர் கொண்டு அழைப்பர்?

குகன்

8462) திருமுறை என்ற தொடரில் ‘திரு’ என்பது எதனைக் குறிக்கும்? தெய்வத்தன்மையை

8463) மலம், பந்தம், தளை என அழைப்பது எதனை?

பாசத்தை

8464) நாதம், விந்து, சாநாக்கியம், ஈசுவரம், சுத்தவித்தை என்பவற்றை என்னவென்று கூறுவர்? சிவதத்துவம்

8465) இராவணனின் தாயின் அபரக்கிரியைகள் செய்வதற்காக அமையப்பெற்றது எது?

திருகோணமலையிலுள்ள கன்னியாய் தீர்த்தம்.

திங்கள், 11 ஏப்ரல், 2011

விவேகானந்த சபையின் சைவசமயப் பரீட்சை

செயலமர்வு

திருமூலரால் ‘சிவபூமி’ எனப் போற்றப்பட்ட இலங்கைத் திருநாட்டிலே கொழும்பு மாநகரிலே இன்று தமிழர்கள் செறிந்து வாழும் ஒரு பகுதியிலே ஐரோப்பியரின் வருகையால் நலிவுற்றிருந்த சைவ சமயத்தை ஆங்கிலேயர் காலத்தில் மேலும் நலிவடையச் செய்ய விடாது தடுப்பதற்கு தோற்றுவிக்கப்பட்ட ஒரு அமைப்பு கொழும்பு விவேகானந்த சபை.

இது 1902.07.13 ஆம் திகதி அனுஷ நட்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஸ்தாபிக்கப்பட்டது. அன்று ஐரோப்பியரால் இலங்கையில் சைவ சமயம் நலிவுற்றிருந்தது. ஆனால் இன்று இலங்கைத் திருநாடு முழுவதிலும் மட்டுமன்றி ஐரோப்பியாவிலும் கொழும்பு விவேகானந்த சபையின் சைவசமய பாடப் பரீட்சை நடத்தப்படும் அளவுக்கு புகழ் பெற்றிருப்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.

அன்று இலங்கையில் சைவ சமயத்தை நலியவைத்த ஐரோப்பாவிலேயே இன்று சைவசமயம் வளம்பெற்று வருவதைப் பார்த்தால் சைவ சமயத்தின் சிறப்பு புலப்படும்.

800 பாடசாலைகளில் பரீட்சை

கொழும்பு விவேகானந்த சபை முதன் முதலாக 1930.02.15 ஆம் திகதி இப்பரீட்சையை நடத்த ஆரம்பித்தது. 1931 ஆம் ஆண்டு 80 பாடசாலைகளில் இப்பரீட்சை நடத்தப்பட்டது. இன்று 700, 800 பாடசாலைகளில் இப்பரீட்சை நடத்தப்படுகிறது. இலங்கை முழுவதிலும் உள்ள தமிழ்மொழி மூல பாடசாலைகளில் மட்டுமன்றி ஐரோப்பியாவிலுள்ள கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் இப்பரீட்சை நடத்தப்படுகிறது.

இந்த விவேகானந்தா சபையினால் நடத்தப்படும் அகில இலங்கை சைவசமய பாடப் பரீட்சைக்குரிய பாடத்திட்டங்களை ஆசிரியர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கான கருத்தரங்கும் செயலமர்வும் கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5 மணி வரை விவேகானந்த சபையில் நடத்தப்பட்டது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் இருக்கின்ற தமிழ் மொழி மூல பாடசாலைகளில் சைவசமயம் கற்பிக்கும் ஆசிரியர்களும் அறநெறி ஆசிரியர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடத்தப்பட்ட இந்த செயலமர்வு தமிழ் மரபுப்படி மங்கள விளக்கேற்றலுடனும் தேவாரத்துடனும் ஆரம்பமானது.

விவேகானந்த சபை செயலாளர் க. விவேகானந்தன்

சபையின் பொதுச் செயலாளர் க. விவேகானந்தன் வரவேற்புரை நிகழ்த்த சபையின்
தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஏ. ஆர். சுரேந்திரன் தலைமையுரை நிகழ்த்தினார். செயலாளர் தமது உரையில் பரீட்சை ஆரம்பித்த வரவாற்றைக் கூறியதோடு சங்கீத ஆசிரிய ஆலோசகரான சங்கீத கலாவித்தகர், தேவாரங்கள் 7ம் நூற்றாண்டில் பாடப் பட்டதாகவும் கர்நாடக இசை 16ம் நூற்றாண்டில் தோற்றம் பெற்றதாகவும் பஜனை, கீர்த்தனைகள் 17ம் நூற்றாண்டில் பாடப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

தேசிய கல்வி நிறுவகத்தின் ஆலேசாகர் குமாரசாமி சோமசுந்தரம்


தேவாரத் திருவாசகங்கள் உரிய பண்ணோடு பாடப்பட வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தி அவ்வப்போது பதிகங்களை பண்ணோடு பாடி காட்டி பண்ணிசை விளக்கம் அளித்தார். அவரைத் தொடர்ந்து மகரகம தேசிய கல்வி நிறுவகத்தின் ஆலேசாகர் குமாரசாமி சோமசுந்தரம் மெய்கண்ட சாஸ்திரம் திருவருட் பயன் பற்றி விளக்கமளித்தார்.

மெய்யியல் என்பது தத்துவம், மெய்பொருள் காண்பது அறிவு, மெய்யியலின் 3 உண்மைப் பொருள்கள் பதி, பசு, பாசம், என மெய்கண்ட சாஸ்திரத்தைப் பற்றி மிகவும் எளிய நடையில் விளக்கமளித்தார் இவர். இந்த செயலமர்வு நடத்துவதற்குரிய நோக்கம், விவேகானந்த சபை வருடாந்தம் நடத்தும் சைவசமய பாடப் பரீட்சைக்குரிய வினாக்கள் அகில இலங்கை இந்து மன்றத்தின் ‘இந்து மக்களுக்கு ஓர் கையேடு’ ஆறுமுகநாவலரின் ‘சைவ வினா விடை’, ‘திருக்குறள்’ ஆகிய நூல்களில் உள்ள சில பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதை அறிவுறுத்துவதற்காகவே ஆகும்.

சைவப்புலவர் எஸ். செல்லத்துரை

கலாபூஷணம் சைவப்புலவர் எஸ். செல்லத்துரை சைவ வினாவிடை நூலில் இருந்து எடுக்கப்பட்ட பகுதிகளை சுட்டிகாட்டியதோடு அந்நூலில் இடம்பிடித்துள்ள சில சொற்பதங்களை எடுத்தியம்பி விளக்கமளித்தார்.

தேவாரம், புராணம் என்பன தமிழ்வேத இயலுக்குள் அடங்குவதாகவும் மலசல மோசனம் என்றால் மலசலம் கழித்தல் என்றும், செளசம் என்றால் கழுவுதல் என்றும், தந்த சுத்தி என்றால் பல் தீட்டுதல் என்றும் இவ்வாறாக இன்னொரன்ன பதங்களையும் பயன்படுத்தி விளக்கமளித்தார்.

இந்துக் கல்லூரி அதிபர் செல்வி பு. யோ. முருகேசு

கொழும்பு முகத்துவாரம் இந்துக் கல்லூரி அதிபர் செல்வி பு. யோ. முருகேசு ‘திருக்குறள் காட்டும் நெறி’ என்ற தொனிப்பொருளை மையமாக வைத்து விளக்கமளித்ததுடன் திருக்குறளில் எந்தெந்த வகுப்புக்கு எந்தெந்தப் பகுதி எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெளிவுபடுத்தினார்.

சங்க மருவிய காலத்தில் தோற்றம் பெற்ற திருக்குறளை முதன் முதலில் மொழிபெயர்த்தவர் யார், இது எந்தெந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறித்தெல்லாம் விபரம் அளித்தார்.

திருமதி வசந்தா வைத்தியநாதன்

இந்த செயலமர்வின் பிற்பகல் அமர்வுகள் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் செயலாளர் சட்டத்தரணி கந்தையா நீலகண்டனின் தலைமையில் நடைபெற்றது. இதில் அருள்மொழி அரசி வித்துவான் திருமதி வசந்தா வைத்தியநாதன் ‘நமசிவாய’ என்ற பஞ்சாட்சரத்தின் ஒவ்வொரு எழுத்திலும் பொதிந்துள்ள பொருளை நயம்பட எடுத்துரைத்தார்.

ந என்பது திரோதனம் மறைப்பு என்றும் ம என்பது மலகம் குற்றம் என்றும் சி என்பது சிவம் என்றும் வா என்பது யா அருட்சக்தி என்றும் என்பது ஆன்மா என்றும் குறிப்பிட்டார். தூல பஞ்சாட்சரம், சூட்சும பஞ்சாட்சரம், காரண பஞ்சாட்சரம், முத்தி பஞ்சாட்சரம், மகா காரண பஞ்சாட்சரம் என பஞ்சாட்சரத்தை வகைப்படுத்தி வேறுபடுத்தி (சிவாயநம, சிவசிவ, சிவாயசிவ...) கூறுவது எவ்வாறு? யார் யார் இதை கூறலாம் என்பது குறித்தெல்லாம் விளக்கமளித்தார்.

செல்லையா நவநீதகுமார்

திருவாவடுதுறை ஆதீன சமயப் பரப்புனர் செல்லையா நவநீதகுமார் கட்டையிலே போகும் போது செய்ய வேண்டிய அபரக்கிரிகைகளை பற்றி அழகுற தெளிவுபடுத்தினார்.

இந்த அபரக் கிரியைகளை செய்கின்ற புரோகிதருக்கு என்னென்ன கொடுக்க வேண்டும். பெற்றோர் இறந்தால் அவர்களுக்கு உரிய இறுதிக் கிரிகைகளை செய்கின்ற பிள்ளைகள் தீட்சை பெற்றிருக்க வேண்டும். அப்போது தான் அந்த அபரக் கிரியையில் பயன் உண்டு என்றெல்லாம் இவர் தெளிவுபடுத்தினார்.

பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன்

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசனின் தலைமையில் ஐயந் தெளிதல் நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் ஆசிரியர்களின் சந்தேகங்கள் பலவற்றுக்கு பதில் அளிக்கப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டது. விவேகானந்த சபையின் உப தலைவர் க. ஜெகதீசனின் நன்றியுரையுடன் செயலமர்வு நிறைவுபெற்றது.

திருக்குறள்

விவேகானந்த சபை நடத்தும் சைவ சமய பரீட்சைக்கு 5ம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை திருக்குறளில் அறத்துப் பாலில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

5, 6, 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் ஆகிய பகுதிகளிலுள்ள 40 குறள்களும் இதற்கு சேர்க்கப்பட்டுள்ளன.

8ம், 9ம் வகுப்புகளுக்கு இனியவை கூறல், செந்நன்றி அறிதல், நடுவு நிலைமை, அடக்கம் உடைமை, ஒழுக்கம் உடைமை, பிறனில் விழையாமை ஆகிய பகுதிகளிலுள்ள 60 குறட்பாக்களும் இதற்கு சேர்க்கப்பட்டுள்ளன.

10ம், 11ம் வகுப்புகளுக்கு பொறையுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில் சொல்லாமை, தீவினையச்சம், ஒப்புரவறிதல், ஈகை ஆகிய பகுதிகளிலுள்ள 80 குறள்களும் இந்த பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

சைவ வினா விடை

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் சைவ வினா விடை நூலில் இருந்து 4ஆம், 5ஆம், 6ஆம் வகுப்புகளுக்கு கடவுள் இயல், புண்ணிய பாவ இயல், விபூதி இயல், ஆகியவையும்,

7ஆம், 8ஆம், 9ஆம் வகுப்புகளுக்கு சிவமூல மந்திர இயல், தமிழ், வேத இயல், ஆகியவையும் 10ம், 11ம் வகுப்புகளுக்கு நித்திய கரும இயல், மலசலமோசனம் நீங்கலாக சிவாலிய தரிசன இயல், தோத்திரங்கள் என்பனவும் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்து மக்களுக்கு கையேடு

அதனைவிட அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ‘இந்து மக்களுக்கு கையேடு’ என்ற நூலிலிருந்து 3ம், 4ம், 5ம் வகுப்புகளுக்கு முதலாம், இரண்டாம் இயலும் 6ம் தரம் முதல் 9ம் தரம் வரை மூன்றாம், நான்காம், ஐந்தாம் இயல்களும் 10ம், 11ம் தரங்களுக்கு ஆறாம், ஏழாம், எட்டாம் இயல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

பங்குபற்றியோர்

புவக்பிட்டிய சீ. சீ. தமிழ் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த மயில்வாகனன் ஜெயசுதன், செல்வி செல்வநாயகம் சுதர்ஷனி, றைகம் கீழ்பிரிவு தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த தங்கராஜ் கல்யாணி, நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தைச் சேர்ந்த செல்வி தர்மிலா ஹரிதேவ், செல்வி அச்சுதன் அனிசியா லோஜினி, வத்தளை றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த புஷ்பவதி மாணி, தந்தை செல்வா அறநெறி பாடசாலையைச் சேர்ந்த சிவலிங்கம் சிவச்செல்வி, செல்வி தர்சனி வேல்சாமி, விசுவலிங்கம் சோமசுந்தரம், கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயம் சுகந்தி விநாயக மூர்த்தி, களனி அல் அஷ்ரப் மகாவித்தியாலயத்தைச் §சேர்ந்த ததருமதி தேவகி நெல்சன், வத்தளை புனித அன்னம்மாள் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த திருமதி இராஜநாயகி, திருமதி எஸ். ஸ்ரீதரன் ஷசிரஜனி, கொழும்பு வெஸ்லி கல்லூரி திருமதி லோகிதா சுதாகரன், கொழும்பு புனித அன்னம்மாள் மகளிர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த திருமதி சுவர்ணாங்கி சுகர்தன் திருமதி கெளஷியா ஜெயகாந்தன், கொட்டாஞ்சேனை வரதராஜ விநாயகர் அறநெறி பாடசாலை செல்வி சந்திரபவானி கோவிந்தசாமி, திருமதி குஞ்சரா நிமலன், வணாத்தமுல்ல றோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலை செல்வி ஜெ. செல்லத்துரை, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி திருமதி செல்வராணி ஆனந்தசிவம், திருமதி தேவசேனாஞான பண்டிதன், சைவ முன்னேற்றச் சங்கம் திருமதி ரதினி பிரதீப்குமார், செல்வி சுமதி பத்மநாதன் கொழும்பு விவேகானந்த சபை திருமதி அனுராதா பாக்கியராஜா ஐங்கரன் கிருஷ்ணசாமி, செல்வி பவானி சண்முகலிங்கம், செல்வி ரேணுகா அருணகிரிநாதன், ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான அறநெறிப் பாடசாலை செல்வி பிரியதர்ஷனி ராஜலிங்கம், திருமதி மகாலெட்சுமி நட்ராஜ், பம்பலப்பிட்டி திருக்குடும்பக் கன்னியர் மடம் செல்வி வாஹினி ஸ்ரீதரன், வத்தளை ஸ்ரீ முத்து குமாரன் அறநெறி பாடசாலை திருமதி சந்திராதேவி அருளானந்தம்,

வெள்ளவத்தை சாந்த கிளேயர் கல்லூரி

வடகொழும்பு இந்து பரிபாலன சபை திருமதி யோகேஸ்வரி மாணிக்கவாசகர், கொழும்பு றோயல் கல்லூரி சபாரத்தினம் சிவகுமார், ஹுனுப்பிட்டி ஸாஹிரா ம. வி. திருமதி ரோகிணிதேவி கணேசலிங்கம், கொழும்பு புனித பேதுரு கல்லூரி, திருமதி யோகேஸ்வரி சண்முகநாதன், ஸ்ரீ ஜெயவர்தனபுர இந்து வித்தியாலயம் திருமதி லலிதா ஜெகதீசன், கொட்டாஞ்சேனை மெதடிஸ்த தமிழ் பாடசாலை செல்வி மங்களேஸ்வரி சண்முகநாதன், கொள்ளுப்பிட்டி மெதடிஸ்த தமிழ் பாடசாலை திருமதி ச. இராமச்சந்திரன், கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி திருமதி கெளரி இரத்தினவேல், கொழும்பு – 10 பிறிஸ்பன்றோரின் பெண்கள் பாடசாலை திருமதி பவானி வரதராஜன், வெள்ளவத்தை சாந்த கிளேயர் கல்லூரி திருமதி சோமசுந்தரம் மகேஸ்வரி ஆகிய ஆசிரியர்கள் இந்த செயலமர்வில் கலந்துகொண்டனர்.

இப்பரீட்சை வகுப்பு அடிப்படையில் நடத்தப்படுவதால் ஒவ்வொரு வகுப்புகளிலும் அகில இலங்கை ரீதியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறும் மாணவ மாணவிகளுக்கு பணப் பரிசில்கள் வழங்கப்படுவதுடன், இப்பரீட்சையில் சித்திபெறும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

11ம் வகுப்பு பரீட்சையில் முதலாம் இடத்தைப் பெறும் மாணவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்படும். இதைவிட புலமைப் பரிசில்களும் வழங்கப்படும்.

கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர்/ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர்/ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


8450) திருமணங்களில் புதுமணம் பரப்பி விளக்கு ஏற்றி வயதில் மூத்த பெண்கள் மணப் பெண்ணை நீராட்டி வாழ்த்தி, அவள் விரும்பியவனுடன் அவளை ஒப்படைத்தது எந்தக் காலத்தில்?

சங்ககாலத்தில்


8451) ‘தாலி’ என்ற பதம் எந்த சொல்லில் இருந்து வந்தது?

தாலம்


8452) எத்தனையாம் நூற்றாண்டில் திருமணச் சின்னம் என்ற ரீதியில் தாலி பெயர் உபயோகப்படுத்தப்பட்டது?

பதினோராம் நூற்றாண்டில்


8453) மாங்கல்யச் சரடு எத்தனை இழைகளைக் கொண்டது?

ஒன்பது


8354) மாங்கல்யச் சரடின் ஒன்பது இழைகளும் எதனை குறிக்கிறது?

9 குணங்களை


8455) அந்த 9 குணங்களையும் தருக.


தெய்வீகம், தூய்மை, மேன்மை, தொண்டு, தன்னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்துகொள்ளுதல்.

திங்கள், 4 ஏப்ரல், 2011

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர்/ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

(திருமூலர், திருமந்திரம் 7 ஆம் வகுப்பு சைவபோதினி)


8438) பன்னிரு திருமுறைகளுள் சைவ சமய சாத்திர ரூபமானது எது?

திருமந்திரம்

8439) தமிழில் முதலில் உண்டான சைவ சமய சாத்திரம் என்று கருதப்படுவது எது?

திருமந்திர்

8440) திருமந்திரம் எதனை அடிப்படையாகக் கொண்ட நூல்?

வேதாகமங்களின் முடிவை

8441) சிவானுபவத்துக்கு இன்றியாத சாதனம் எது?

அன்பு நெறி (பக்தி மார்க்கம்)

8442) திருமந்திரத்தை அருளியவர் யார்?

திருமூலர்

8443) திருமூலர் யாருக்கு மாணவராயிருந்தார்?

திருநந்தி தேவருக்கு

8444) திருமூலர் திருநந்தி தேவருக்கு எங்கு மாணவராய் இருந்தார்?

திருக்கைலாய மலையில்

8445) சிவானுபவத்துக்கு இன்றியாத சாதனம் அன்பு நெறி என்பதை உணர்த்தியவர் யார்?

திருமூலர்

8446) பன்னிரு திருமுறைகளுள் திருமந்திரம் எத்தனையாம் திருமுறை?

பத்தாம்

8447) திருமூலர் என்ற சிவயோகி யாருடன் வசிக்க பொதியமலை நோக்கி வந்தார்?

அகத்திய முனிவரோடு

8448) திருமூலர் பொதியமலை நோக்கி செல்லும் போது எங்கு தங்கிச் சென்றார்?

திருவாவடுதுறையில்

வாழைப்பழ ரகசியம்


8448) சுவாமிக்கு வாழைப்பழம் படைக்கப்படுவது ஏன்?

எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள் மற்ற எந்த பழத்தை எடுத்தாலும் சாப்பிட்டுவிட்டு கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால் வாழைப்பழத்தை உரித்தோ முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையை காட்டுகிறது. மீண்டும் பிறவாமை வேண்டும் என்பதற்காகத் தான் சுவாமிக்கு வாழைப்பழம் படைக்கப்படுகிறது.

ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்பாள் ஆலய வள்ளுவர் அறநெறி பாடசாலை



மட்டக்குளி, கதிரானவத்த, எக்கமுத்தபுரவில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகின்றவள் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்பாள்.

கொழும்பு நாரஹேன்பிட்டி, மாவத்தை ஆகிய பகுதிகளின் சேரிப்புறங்களில் வாழ்ந்தவர்கள் 1991 ஆம் ஆண்டு இங்கு குடியேற்றப்பட்டனர். நகர சபைக்கு சொந்தமான சதுப்பு நிலமாக இருந்த பகுதியில் சுமார் 3000 குடும்பங்கள் இரண்டு கட்டங்களாக குடியேற்றப்பட்டன. இவ்வாறு இங்கு வந்து குடியேறியோர் கோயில் இல்லாத குறையை கண்டனர். ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்று கூறுவதால் இவர்கள் இங்கு கோயிலொன்றை எழுப்ப தலைப்பட்டனர். இதன் விளைவாக 1993ஆம் ஆண்டு இவ்வாலயம் அமைக்கப்பட்டது. இவ்வாலயத்தோடு சேர்ந்ததாக 1995 ஆம் ஆண்டு வள்ளுவர் அறநெறி மன்றம் அமைக்கப்பட்டது. கே. பி. பத்மராஜா இந்த மன்றத்தை ஸ்தாபித்து இதன் தலைவராக இன்றும் இருந்து வழிநடத்தி வருகிறார். இம்மன்றத்தின் வரழைத் தொடர்ந்து 1995.03.26 ஆம் திகதி இங்கு வள்ளுவர் அறநெறி பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.

1ம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்புவரை உள்ள இந்தப் பாடசாலையில் இன்று 150 பிள்ளைகள் கல்வி கற்கின்றனர். 9 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர். இவர்களுக்கு 1000 ரூபா தொடக்கம் 2000 ரூபா வரை மாதாந்தம் சம்பளம் வழங்கப்படுகிறது. திருமதி எஸ். பத்மராணி (நந்தினி) இதன் தலைமை ஆசிரியராகவும் எம். செல்வகுமார் நடன ஆசிரியராகவும் இங்கு பணிபுரிகின்றனர். இங்கு தற்போது ஆசிரியராக இருக்கும் விஸ்வலிங்கம் வித்தியா, கந்தசாமி முகுந்தினி ஆகிய இருவரும் இதே பாடசாலையில் கல்வி கற்றவர்கள். இவர்களைத் தவிர திருமதி மைக்கல் சித்ராதேவி, திருமதி எஸ். சாந்தி, திருமதி கருப்பையா புஷ்பலதா, திருமதி சிவராஜா சாந்தி, சிவசங்கர், கே. கோபிகா ஆகியோர் ஆசிரியர்களாக உள்ளனர்.

வள்ளுவர் அறநெறி மன்றத்தின் செயலாளராக எஸ். புனிதாவும், பொருளாளராக ஆர். நாகேஸ்வரனும் இருக்கின்றனர். இந்த மன்றத்தினரும் அறநெறி பாடசாலையின் மாணவ மாணவியரும் ஆசிரியர்களும் இந்த ஆலயத்தில் நடைபெறும் திருவிழா, சிவராத்திரி விழா, நவராத்திரி விழா, திருவெம்பாவைக்கு பஜனை ஆகியவற்றை ஆலய நிர்வாகத்தினருடன் இணைந்து சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

இந்த மன்றத்தின் ஸ்தாபகரும் தலைவரும் அறநெறி பாடசாலையின் பொறுப்பாசிரியருமான கே. பி. பத்மராஜா இந்த அறநெறி பாடசாலைக்கு என்று கையேடொன்றை வெளியிட வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தார். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா என்பவற்றோடு மந்திரங்கள், அறநெறி கீதம், எழுச்சிப் பாடல்கள், மாணவர்கள் ஒழுக்க வழிகாட்டி என பல்வேறு அம்சங்களைக் கொண்ட அறநெறி தீபம் என்ற இந்த கையேடு அண்மையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. கல்விக்கு அதிபதியான கலைமகளின் வீணை ஏந்திய திருவுருவம் முன்புற அட்டை படத்தை அலங்கரித்துள்ளது. பின்புற அட்டையை திருவள்ளுவரின் திருவுருவம் தனதாக்கிக்கொண்டுள்ளது.

பண்பாடு மனித வாழ்க்கைக்கு உயிர்நாடி, இறை உணர்வு இல்லாத வாழ்வு துடுப்பு இல்லாத படகிற்குச் சமம் போன்ற தத்துவ முத்துக்கள் பல வித்தாகி இருப்பதை இந்நூலில் காணலாம்.

சுத்தம் அறநெறிக் கல்வியின் அவசியம், போன்ற பெற்றோரை அறிவுறுத்தும் கருத்துக்கள் பலவும் இந்நூலில் இடம் பிடிக்கத் தவறவில்லை. சுகமான சிந்தனைகளுடன் நலமான பல கருத்துக்கள் இதில் விளைந்துள்ளதால் இது பண்பட்ட ஒரு உள்ளத்தின் பாராட்டுக்குரிய கைங்கரியம் என போற்றுவது தகும் என எண்ணுகிறோம்

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812