திங்கள், 30 மார்ச், 2015

கடவுளின் படம் அல்லது சிலை எது வழிபாட்டிற்கு உகந்தது

கே. ஈஸ்வரலிங்கம் (11293) கடவுளின் படம் அல்லது சிலை எது வழிபாட்டிற்கு உகந்தது? மனதில் இறைவனை நிறுத்தி வழிபடுவது மிக உயர்ந்தது. இரண்டாவது சிலை, அடுத்தது படம். முதலில் கூறியதற்கு மன ஒருநிலைப்பாடு அவசியம். உலக வாழ்க்கையை வெறுத்து வேறு எந்த சிந்தனையும் இல்லாத ஞானிகளுக்கு மட்டுமே இது சாத்தியம். உருவச்சிலை வழிபாட்டில் அபிஷேகம், நைவேத்யம் ஆகிய கிரியைகள் அதிகம். அவசரமான காலகதியில் எல்லோருக்கும் இயலாது. பட வழிபாடு எளிமையானது. தினமும் புஷ்பம் சாத்தி, பழம், பால், கற்கண்டு நிவேதனம் செய்தால் போதும். எது உயர்ந்தது என்று கவலைப்படுவதை விட, எது இயன்றது என்று முடிவெடுத்து அதை விடாமல் செய்வது தான் உயர்ந்தது. (11294) சுமங்கலிகளை வழியனுப்பும்போது குங்குமம் கொடுக்க வேண்டுமா? அவசியம் கொடுக்க வேண்டும். இதில் விஷயங்கள் உள்ளன. சுமங்கலிகள் நம் வீட்டிற்கு வந்தால் அம்பாளே வந்திருப்பதாக எண்ண வேண்டும். குங்குமம், ரவிக்கைத் துணி, வெற்றிலை பாக்கு, மஞ்சள் கிழங்கு ஆகியவற்றை வழியனுப்பும்போது கொடுத்தால் அம்பாளின் அருள் கிடைக்கும். மற்றொன்று வந்திருப்பவர் நம்மை விட வயதில் சிறியவராக இருந்தால் வாழ்த்தியும், பெரியவராக இருந்தால் வாழ்த்திப் பெற்றும் குங்குமம் கொடுக்க வேண்டும் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்ட இதனைச் செய்வது வழக்கில் உள்ளது. (11295) திசைச் தெய்வங்களை வழிபடுவதினால் ஏற்படும் நன்மைகள் யாது? திசைகள் பத்து என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். பத்துத் திசைகளையும் இறைவனின் திருவருள்தான் நின்று ஆளுகின்றது. இறைவன் திருவருள் ஆணையைப் பெற்று ஏவல் செய்யும் திக்குப் பாலகர்களும் திசைத் தெய்வங்களும் அந்த அந்த திசைக்கு உட்பட்டே தத்தமக்கு இட்ட பணிகளைச் செய்ய முடியும். இத்திசைத் தெய்வங்கள் எல்லாவற்றையும் செலுத்துவதாகவும், அவற்றிற்கு மேம்பட்டும் விளங்குவது பரம்பொருளான சிவம். அந்தந்த திசைத் தெய்வங்களை மட்டும் வழிபடுகின்றவர்கள், அதற்குரிய பலன்களை மட்டுமே அடைவர். பரம்பொருளை வழிபடுவதனால் எல்லாத் திசைத் தெய்வங்களினால் கிடைக்கும் பலனும் அவற்றிற்கு மேலும் கிட்டும். (11296) கோயிலின் கருவறை ஏன் இருட்டாக இருக்கின்றது? கோயிலின் கருவறை ஒலி அலைகளின் (இறை ஆற்றலை கடத்தும்) கலமாகும். விமானக் கலசம் மூலவரின் திருவுருவச் சிலைக்குச் சூரிய கதிர்களின் மூலமாகக் கிடைக்கப் பெறும் ஒலி அலைகளைக் கடத்துகிறது. மூலவரின் சிலைக்கு அடியிலுள்ள நவரத்தினக் கற்களும் யந்திரத் தகடும் பூமிக்கு அடியில் இருந்து கிடைக்கப்பெறும் ஆற்றலை மூலவரின் திருவுருவச் சிலைக்குக் கடத்துகின்றன. எல்லா ஆற்றல்களையும் ஒருங்கே பெற்றுக்கொண்ட மூலவரின் திருவுருவச் சிலை, அதனை இறை ஆற்றலாக மாற்றி இறைவன் திருமுன்பு இருக்கும் வாகனம், பலி பீடம் மற்றும் உற்சவ மூர்த்தங்கள் மீது அவ்வாற்றலைக் கடத்துகிறது. பிறகு கோயில் முழுவதும் அவ்விறையாற்றல் பரவுகிறது. அங்கே வழிபட வருகின்ற அடியவர்கள் மீதும் அவ்விறையாற்றல் பதிகின்றது. கருவறையில் இருந்து வரும் அருள் ஒலி அலை எப்பொழுதும் கிடைக்க கருவறை இருட்டாக இருத்தல் அவசியம். அதோடு பெருமானுக்கு முறையான பூசைகளும், நிறைவான திருநீராட்டுதலும், அவசியம் நடைபெற வேண்டும். (11297) வழிபாட்டில் ஏன் இறைவனுக்குத் திருவமுது வைக்கின்றோம்? தமது கருணையினால் பொது நிலைக்கு வரும் இறைவன் ஆனந்த கூத்தாடி நம்மை ஆட்கொள்ள விழைகின்றார். இப்படி நமக்கு அருளைப் பொழிந்து கொண்டிருக்கின்ற பெருமானுக்கு நம்மால் கைம்மாறு ஒன்றும் செய்ய முடியாது. இதனை மணிவாசகர் யான் இதற்கு இலன் ஓர் கைமாறே என்கிறார். தவிர பெருமானும் நம்மிடம் இருந்து எதையுமே எதிர்பார்ப்பதில்லை. இதனை வேண்டுதல் வேண்டாமை இலான் எனும் குறள் வழித் தெளிவுப் படுத்துகின்றார் வள்ளுவ பெருந்தகை. இவாறு நமக்கு எந்நேரமும் நன்றே செய்து கொண்டிருக்கின்றார் பெருமான். உயிரினங்கள் வாழ்வதற்காக இறைவன் அருளிய உணவுப் பெருட்களை இறை வழிபாட்டில் திருவமுதாக வைத்து அவருடைய பேரருள் திறத்திற்கு நன்றி பாராட்டுகின்றோம்.

செவ்வாய், 24 மார்ச், 2015

பூஜையறையில் ஒரே ஒரு விளக்கை மட்டும் ஏற்றலாமா?

11285) கடவுளை நேருக்கு நேர் நின்று வழிபடக் கூடாதாமே ஏன்? இறைவனுக்கு மூன்று கண்கள். இவற்றில நெற்றிக்கண் நெருப்பு வடிவமானது. இந்தப் பார்வை நன்மை அளிக்காது. மற்ற இரு கண்களும் சூரியசந்திர வடிவானவை. இவை நன்மை தருபவை. தெய்வத்தின் கடைக்கண் பார்வை தான் நமக்கு வேண்டும். இதைத்தான் “கடாக்ஷம்” என்பர். இதை கட + அக்ஷம் என பிரிப்பார்கள். “கட” என்றால் கடைசி. “அக்ஷம்” என்றால் கண். அதாவது கண்களின் கடைப்புறப் பார்வை என்று பொருள். இது கருணையே வடிவானது. சகல ஐஸ்வர்யங்களையும் தரவல்லது. அதற்காகத் தான் நேருக்கு நேர் நின்று தரிசிக்காமல், ஒரு பக்கமாக நின்று வழிபட வேண்டும். (11286) பூஜையறையில் ஒரே ஒரு விளக்கை மட்டும் ஏற்றலாமா? பொதுவாக பூஜையறையில் குலதெய்வ தீபம் என்று ஒரு காமாட்சி விளக்கும் எல்லா தெய்வங்களுக்குமாக குத்து விளக்குமாக இரண்டு தீபம் ஏற்றவேண்டும். ஊதுபத்தி, சூடம் போன்றவற்றை இந்த விளக்கில் இருந்து ஏற்றக் கூடாது. அதற்கு பூஜை நேரத்தில், தனியாக ஒரு கைவிளக்கை ஏற்றிக்கொள்ள வேண்டும். (11287) சிவபெருமான் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசி நடனம் ஆடுவது ஏன்? எல்லா சுகபோகங்களையும் அருளும் சிவபெருமான், நமக்கு தேவையில்லாதவற்றை, நாம் விரும்பாததை தனக்காக வைத்துக்கொண்டுள்ளார். இது தான் கருணையும், எரிமையும். இணைந்த திருவருள் உலக போகங்களையே பெரிதும் விரும்பி மயங்காமல் வாழவும், இறுதியில் நம் உடல் கைபிடிச்சாம்பல் தான் என்பதை உணர்த்தவும் சுடலைப்பொடி பூசி அளுள்கிறார். (11289) சுமங்கலி பூஜை செய்வதன் நோக்கம் என்ன? பக்தர்களையும் இறைவனாகவே காணும் உயர்ந்த தத்துவத்தைக் கொண்டது இந்து மதம். உமையம்மை மகாலட்சுமி போன்ற தெய்வங்களின் அருளைப்பெற சுமங்கலிப் பெண்களை அம்பாளாக வழிபட்டு, புடவை குங்குமச்சிமிழ் போன்ற மங்கலப் பொருட்களைக் கொடுத்து விருந்தளிப்பது சுமங்கலிபூஜை. இது மிக உயர்ந்த வழிபாடு. இதனைச் செய்தால் சுமங்கலிகளாக இறந்த மாதர்கள் சந்தோஷப்பட்டு, குடும்பத்தினர் நலமாகவும், தீர்க்க சுமங்கலிகளாகவும் வாழ வாழ்த்துவார்கள். (11290) விரத நாட்களில் பகலில் தூங்கக் கூடாதாமே ஏன்? சாப்பாடும் தூக்கமும் உடலுக்கு சுகமளிப்பவை ஒரு நிலைப்பட்ட மனதுடன் அன்று முழுவதும் தெய்வ சிந்தனையாகவே இருப்பதற்குத் தடையாக இருப்பவை. பசியோடும் தூங்காமலும் இருக்கும்போது, நாம் இன்று விரதம் இருக்கிறோம் என்ற எண்ணம் மறக்காமல் இருக்கும். முழுமையான தெய்வ சிந்தனையுடன் விரதம் இருந்தால் நாம் எண்ணியது நிறைவேறும். (11291) பிறந்த குழந்தையை கோயில் தரிசனத்திற்கு எவ்வளவு நாள் கழித்து அழைத்துச் செல்லவேண்டும்? குழந்தை பிறந்து 22 நாள் வரை தாய்க்கும் சேய்க்கும் தீட்டு உண்டு. எனவே அதன் பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். (11292) யாகத்தீயில் பட்டு வஸ்திரம், பழவகைகள், நாணயம் இவைகளை இடுவதால் என்ன பயன்? இந்தப் பொருட்கள் ஆகுதிப் புகையாக சூரியனைச் சென்றடைந்து மேகமாக மாறி மழையாக நமக்குக் கிடைக்கிறது. யாகத்தில் இட்ட பொருட்கள் பல்லாயிரம் மடங்காக விளைகிறது என்கிறது தர்ம சாஸ்திர ஸ்லோகம்.

வெள்ளி, 6 மார்ச், 2015

கலசம்

(11251) கலசம் என்பது என்ன? மண் அல்லது செம்பு பித்தளை, தாமிரம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட நீர் நிறைந்த ஒரு செம்பு, சிறுபானை தான் கலசம் எனப்படுகிறது. (11252) இந்த கலசத்தில் என்ன செருகப்படும்? மாவிலைகள் (11253) மாவிலைகளின் நடுவில் வைக்கப்படுவது என்ன? தேங்காய் (11254) கலசத்தில் என்ன நிறநூல் கட்டப்படும்? வெண்மை அல்லது சிவப்பு நிறநூல்கள் (11255) கலசத்தில் நூல் எவ்வாறு கட்டப்படும்? பானையின் கழுத்திலிருந்து முழுமையாக டயமண்ட் வடிவத்தை உருவாக்கும் வகையில் நுணுக்கமாக கட்டப்படும். (11256) இந்த பானையை என்னவென்று கூறுவார்கள்? கலசம் (11257) கலசத்தை எதைக் கொண்டு நிரப்புவார்கள்? நீரினாலோ அல்லது அரிசியினாலோ (11258) இவ்வாறு பூரணப்படுத்தப்பட்ட கலசத்தை எவ்வாறு அழைப்பர்? பூரண கும்பம்

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812