திங்கள், 28 மார்ச், 2011

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்

தலைவர்/ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


பிரதட்சிணம்

8428. பிரதட்சிணம் என்றால் என்ன?

சுற்றி வருதல்

8429. இறைவனை வலப்புறமாக சுற்றிவர வேண்டியவர்கள் யார்?

உலக போகங்களை விருப்பினவர்கள்.

8430. இறைவனை இடப்புறமாக சுற்றி வர வேண்டியவர்கள்?

மோட்சத்தை விரும்பினவர்கள்.

8431. சிவபெருமானை எத்தனை தரம் பிரதட்சிணம் செய்ய வேண்டும்?

3, 5, 7, 9, 15, 21 தரங்களுள் இயன்ற அளவு

8432. விநாயகரை எத்தனை தரம் பிரதட்சிணம் செய்ய வேண்டும்?

ஒரு தரம்

8433. சூரியனை எத்தனை தரம் பிரதட்சிணஞ் செய்தல் வேண்டும்?

இரண்டு.

8434. பார்வதி தேவியை எத்தனை தரம் பிரதட்சிணஞ் செய்யலாம்?

நான்கு தரம்.

8435. நாம் வேறு எந்த தெய்வத்தை நான்கு தரம் பிரதட்சிணம் செய்யலாம்?

விஷ்ணுவை

8436. பிரதட்சிணஞ் செய்யும் பிரகாரத்திலே எது இருத்தால் அதனை மிதியாமற் செல்லுதல் வேண்டும்?

தூபியின் நிழல், கொடி மரத்தின் நிழல்

8437. பிரதட்சிணம் செய்யும் பிரகாரத்தில் உள்ள வேறு எவற்றை சேர்ந்து பிரதட்சிணம் செய்ய வேண்டும்?

பலிபீடத்தையும் இடபத்தையும்

திங்கள், 21 மார்ச், 2011

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்

தலைவர்/ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்



நந்தீஸ்வரர்

8413) சைவ சமயத்தில் முதல் குருவாகவும் சிவனின் வாகனமாகவும் கருதப்படுபவர் யார்?

திருநந்தி தேவர்.

8414) ஆலயங்களில் நந்தி தேவரின் திருவுருவம் எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கும்?

சிவலிங்கத்தின் முன் சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக.

8415) நந்தி என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

எப்பொழுதும் ஆனந்த நிலையில் இருப்பவர்.

8416) சிவாகமத்தை சிவபெருமானிடமிருந்து நேரடியாகத் தெறிந்து கொண்டவர் யார்?

நந்திதேவர்.

8417) நந்தி தேவர் சிவபெருமானிடம் நேரடியாகப் பெற்ற உவதேசத்தை அவரிடமிருந்து பெற்று கொண்டவர் யார்?

சனற்குமாரர்.

8418) சனற்குமாரரிடமிருந்து இந்த உபதேசத்தை பெற்ற கொண்டவர்கள் யார்?

சத்தியஞான தரிசினிகள்.

8419) சத்திஞான தரிசினிகளிடமிருந்து இந்த உபதேசத்தை பெற்றுக்கொண்டவர் யார்?

பரஞ்சோதியார்.

8420) பரஞ்சோதியாரிடமிருந்து உபதேசத்தை பெற்றவர் யார்? மெய்கண்டர்.

8421) சிவாகமத்தை சிவபெருமானிடமிருந்து நேரடியாக தெளிந்து உலகத்தவர்களுக்கு அருளியவர் நந்திதேவர் என்பதை விளக்கும் செய்யுள் எது?

“செம்பொருள் ஆகமத்திறம் தெரிந்து நம் பவமறுக்கு நந்திவானவர்”

8422) நந்தி தேவரை வேறு எவ்வாறு அழைப்பர்?

நந்தீஸ்வரர், நந்திகேஸ்வரர்.

8423) நந்தீஸ்வரர் யாருடைய அம்சமானவர்?

சிவனின்.

8424) இடபம் எனக் கொள்வது எதனை?

நந்தியை

8425) விடை ஏறிய பெருமான் என்பதன் பொருள் என்ன?

தர்மத்தை வாகனமாக்கிய இறைவன்.

8426) இடபம் எப்படி தர்மமாகிறது?

எருது ஒரு தியாகி நெல்லை எமக்களித்து வைக்கோலையும் எமக்களித்து உமியையும் அது ஏற்கின்றது.

8427) நந்தீஸ்வரரை வணங்குவதன் மூலம் என்ன பலனைப் பெறலாம்?

சாரூப, சாயுச்சிய முத்திகளைப் பெறலாம் என்பது சித்தாந்த சாஸ்திரங்களின் கருத்து.

ஞாயிறு, 20 மார்ச், 2011

போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட இரத்மலானை நந்தீஸ்வரம் ஆலயம்




போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட இரத்மலானை நந்தீஸ்வரம் ஆலயம்

தமிழ் மூவாயிரம் பாடிய சுந்தரமூர்த்தி நாயனாரால் ‘சிவபூமி’ எனப் போற்றப்பட்ட நாடு இலங்கைத் திருநாடு- நாற்புறமும் கடலால் சூழப்பட்ட இந்தப் புண்ணிய பூமியில் கொழும்பு மாவட்டத்தில் இரத்மலானை ஜயசுமனாராமயில் அமைந்துள்ளது திரு நந்தீஸ்வரம்.

இந்தத் திருநந்தீஸ்வரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வருபவர் அருள்மிகு ஸ்ரீசொர்ணா அம்பிகா சமேத ஸ்ரீ நந்தீஸ்வர சுவாமி. திருக்கேதீஸ்வரம், திருக்கோணஸ்வரம், முன்னீஸ்வரம், தொண்டீஸ்வரம் ஆகிய தொன்மைமிகு சிவாலயங்களுடன் இந்த இரத்மலானை திருநந்தீஸ்வரமும் இணைந்து பஞ்ச ஈஸ்வரங்களைக் கொண்ட திருநாடாக இலங்கைத் திருநாடு விளங்குகின்றது.

இந்த ஆலயம் யாரால், எப்பொழுது எழுப்பப்பட்டது? எவ்வாறு தோன்றியது? என்பதை கண்டறியக்கூடிய சான்றுகள் இல்லாததால் இது ஆதியும் அந்தமும் இல்லாத ஆலயமாக விளங்குகிறது.

எனினும் கோட்டை அரசனாக விளங்கிய ஆறாம் பராக்கிரமபாகு காலத்தில் அதாவது 1454 ஆம் ஆண்டு தொடகமுவே ஸ்ரீ ராகுல தேரர் என்ற சிங்கள பெளத்த துறவி ‘சலலிஹினி சந்தேசய’ என்ற சிங்கள மொழி காவியத்தில் இந்த நந்தீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் பூஜை, வழிபாட்டு முறைபாடுகளை பற்றி பாடியுள்ளார்.

பக்தர்கள் விரும்பும் இனிமையான தமிழ் மொழியில் இத்தலத்தின் மீது தோத்திரங்கள் பாடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது தொன்மையும் பழமையும் மிகு இத்திருத்தலம் ஆறாம் பராக்கிரமபாகு காலத்திற்கு முற்பட்டது என்பதுடன் இந்த அரசரது காலத்தில் இது பெருமையும் சிறப்பும் பெற்றும் விளங்கியது என்பது புலனாகிறது.

இரத்மலானையிலிருந்து கடற்கரையோரமாக சுமார் ஒன்றரை கிலோ மீற்றர் தொலைவில் எழுந்தருளி உள்ளது இந்த நந்தீஸ்வரம் எனும் திருத்தலம்.

இலங்கையில் உள்ளவர்களுக்கும், ஏன் கொழும்பில் உள்ளவர்களுக்கும் இரத்மலானையில் உள்ளவர்களுக்கும் கூட இவ்வாறானதொரு நந்தீஸ்வரர் ஆலயம் இருப்பது இங்கு தெரியாமல் இருக்கலாம்.

1515 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த போர்த்துக்கேயர் திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம், முன்னீஸ்வரம், தொண்டீஸ்வரம் போன்ற பழம்பெரும் சிவாலயங்களை சிதைத்ததுடன் 1518 ஆம் ஆண்டு இந்த நந்தீஸ்வரத்தையும் சேதமாக்கி அழித்தனர்.

அங்கு பூஜைகள் நடத்தி வந்த குப்புசாமி என்ற குருக்களையும் அவரது குடும்பத்தினரையும் அதே இடத்திலேயே போர்த்துக்கேயர் கொலை செய்துள்ளனர்.

அவரது மகனை மதம் மாறுமாறு கூறி பலாத்காரமாக இழுத்துச் சென்றனர். அதன்பின் அப்பகுதியில் ‘பெர்னாண்டோ’ என்ற பரம்பரை பெயருடன் வாழ்ந்து வந்த சிங்களவர் இந்த ஆலயத்தை பராமரித்து வந்துள்ளார்.

கலைநயம் மிகு தெய்வங்களின் திருவுருவங்களும் சிற்பங்களும் சிறப்புற விளங்க வேண்டிய இத்திருத்தலத்தில் போர்த்துக்கேயர் இத்திருத்தலத்தை நிர்மூலமாக்கியதை நினைவுறுத்தும் வண்ணம் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன.

இராமாயண காலத்தில் இராமபிரான் வழிபட்ட சிவத்தலமாக இந்த நந்தீஸ்வரர் திருத்தலம் விளங்குகிறது.

குளுகுளுவென்ற கடல்காற்று வீசி வரும் மிகவும் அமைதியான சூழலில் இந்தத் திருத்தலம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த ஆலயம் என்பதற்கு சான்றாக விளங்குகிறது இந்த ஆலயத்தின் தல விருட்சமாகிய ஆலமரம். இந்த ஆலமரத்தின் அடிவாரத்திலே வீற்றிருந்து அருள் பாலித்து வந்தவர் வினை தீர்க்கும் விநாயகப் பெருமான்.

இந்தத் தல விருட்சமாகிய ஆல மரத்தையும் ஆலயம் பற்றிய சான்றுகளையும் வைத்துப் பார்க்கும்போது ஐந்தாறு நூற்றாண்டுகள் பழமைவாய்ந்ததாக இவ்வாலயம் விளங்குகிறது. கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் ஐம்பது வருடங்களுக்கு மேல் பிரதம சிவாச்சாரியராக இருந்து சிவனுக்கு பூஜை புனஸ்காரங்களை செய்து வந்தவர் குஞ்சிதபாத குருக்கள். இவரது கனவில் தோன்றி, தனக்கு ஆலயம் எழுப்புமாறு கூறிய எம்பெருமானாகிய சிவபெருமான் இருப்பது இந்த ஆலய வளாகத்தில்தான் என்று கூறுப்படுகிறது.

இந்த ஆலயத்தை பராமரித்து வந்த பெர்னாண்டோ குடும்பத்தினரின் அனுமதியுடன் 1980 ஆம் ஆண்டு சிவன் ஆலயம் அமைப்பதற்கு நிலத்தை அகழ்ந்தபோது ஆவுடையாகும் உடைந்த நிலையிலுள்ள நந்தியும் சிவலிங்கத்தின் உடைந்த மேல் பகுதியும் மேலும் பல கோயிற் படிமங்களும் கிடைத்தன. இவ்வாறு அகழ்ந்தபோது கிடைத்த அம்மன் சிலையொன்று தொல்பொருள் காட்சியகத்தில் உள்ளது. அகழும்போது ஏற்பட்ட தாக்கத்தினால் அத்திருவுருவச் சிலை சேதமுற்றது.

தாமரை மலரின் மீது அமர்ந்து அருளாட்சி புரியும் அம்மனை ஒத்ததாக அத்திருவுருவச் சிலை அமைந்துள்ளது. அத்திருவுருவச்சிலையை ஆராய்ந்து பார்த்த உதவித் தொல்பொருள் ஆணையாளர் செனரத் திசாநாயக்க அத்திருவுருவச்சிலை 11, 12 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தது என சான்றுபடுத்தியுள்ளார். இதற்கான சான்றிதழும் வழங்கியுள்ளார். இதனை வைத்து பார்க்கும்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மை வாய்ந்த பெருமையைக் கொண்ட சிவத்தலம் இது என்பது புலனாகிறது.

ஆதிகால எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இது ஆதிச் சிவத்தலமாக உள்ளது என்பதற்கு சான்று பகிர்கின்றது. இந்த கல்வெட்டுக்கள் இன்னும் அப்பகுதிகளை அலங்கரித்த வண்ணமுள்ளன. இத்திருத்தலம் அமைந்துள்ள பகுதியில் கோவிலுக்கு அருகில் ஒரு மிகப் பெரிய குளம் ஒன்று இருந்ததாகவும் அத்தீர்த்தக் கேணி இப்பகுதி மக்களின் தீர்த்தமாக விளங்கியதாகவும் பெர்னாண்டோ குடும்பத்தினர் குறிப்பிடுகின்றார்கள்.

சிவாலயம் இருந்த இந்த இடத்திலே 1717 ஆம் ஆண்டு தமிழ்க் கடவுளான முருகப் பெருமானுக்கு ஆலயமொன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இது நந்திதேவருடன் விளங்கிய முருகப் பெருமானின் ஆலயமாக விளங்கியதால் இதனை இப்பகுதியில் உள்ள சிங்களவர்கள் கொனாபெந்தி கத்தரகம தேவாலய என்று அழைக்க தலைப்பட்டனர். இன்று இதனை கோணாகோயில் என்று அழைக்கின்றனர்.

1984 ஆம் ஆண்டு நிலத்தை அகழ்ந்தபோது கிடைத்த ஆவுடையார் இவ்வாலயத்தின் மூலமூர்த்தியானார். பெர்ணான்டோவுக்குப் பின். இவ்வாலத்தை அவரது பரம்பரையிலே வந்த பெளத்த மதத்தைச் சார்ந்த காமினி பெர்ணாண்டோ பராமரிந்து வந்தார்.

2004 ஆம் ஆண்டு ஆனி மாதம் 25 ஆம் திகதி ஆனி உத்திரத்தன்று பழமையான ஆவுடையாருக்கு பதிலாக கருங்கல்லால் உருவாக்கப்பட்ட புதிய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய திட்டமிடப்பட்டது. இந்த சிவலிங்கத்தோடு நந்தி, பலிபீடம் என்பவற்றையும் பிரதிஷ்டை செய்ய திட்டமிடப்பட்டது. இது அரும்பெரும் கைங்கரியத்தை நிறைவேற்ற காரைநகரைச் சேர்ந்த கனகசபை நிர்மலகாந்தன் திருவுளம் கொண்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.

திருநந்தீஸ்வரத்தில் காணப்பட்ட பழமையான கலைநயம் கொண்ட கருங்கல்லான வாயிற் தூண்கள் ஆலயத்திற்கு அருகிலுள்ள புகையிரத வேலைத் தளத்தில் புதையுண்டு போனதாகவும் ஆலயத்தின் தீர்த்தக் கேணியாகத் திகழ்ந்த திருக்குளம் மூடப்பட்டுள்ளதாகவும் ஆலய வரலாறுகள் பறைசாட்டுகின்றன.

ஆலயத்தின் தல விருட்சகமாகத்திகழும் ஆலமரம் தனக்கே உரிய கம்பீரத்துடன் சிவனின் திருவருளை பெற்றுக்கொண்ட பெருமையோடு வளங்குவதை இன்னும் நாம் எம் கண்களால் காணலாம். இந்த ஆலமரத்தின் அடிவாரத்திலே ஆனைமுகன் விநாயகப் பெருமான் வீற்றிருந்து அருள்பாலிக்க காரணகர்த்தாக்களாக விளங்கியவர்கள் பெளத்த பெருமக்கள்.

இவர்கள் தங்களது இந்தத் திருப்பணிகளை விநாயகரோடு நிறுத்திக் கொள்ளாது நவக்கிரக நாயகர்களையும் அழைத்து அவர்களது திருவருளையும் பெற்றுக்கொள்வதற்காக நவக்கிரகங்களையும் பிரதிஷ்டை செய்யத் தலைப்பட்டனர். இவ்வாறு இஷ்ட மூர்த்திகளான பரிபாலகர்களுக்கு தனித்தனி திருக்கோயில்கள் எழுப்பியதுடன் இந்த உலகை இயக்கும் சக்தியாகவும் எல்லாம்வல்ல சிவனின் சரிபாதியாகவும் விளங்கும் பெளத்தர்களின் பத்தினி தெய்யோ வான அம்மனுக்கும் திருக்கோயில் அமைத்தனர்.

பெளத்தர்கள் ‘கத்தரகம தெய்யோ’ என்று போற்றித் துதிக்கும் முருகனுக்கும் இங்கு திருக்கோயில் அமைத்து வழிபடத் தொடங்கியதால் இவ்வாலயத்தின் பெருமை பெளத்தர்கள் மத்தியிலும் மேலோங்கி விளங்கியது. காரைநகரைச் சேர்ந்த திருமதி இராஜலட்சுமி கனகசபை குடும்பத்தினர் இவ்வாலய திருப்பணிகளை செவ்வனே நிறைவேற்றி எதிர்வரும் 2011.04.10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.21 மணிக்கு கும்பாபிஷேகம் நடத்தவுள்ளனர்.

2011.04.09 ஆம் திகதி சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்கள் எண்ணெய் சாத்துதல் இடம்பெறும். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறும். 8 ஆம் திகதி இரவு 11.50 மணி முதல் யந்திர விம்பஸ்தாபனம், அக்ஷட பந்தனம் தைலாப்பியங்கம் என்பன நடைபெறும்.

ஆலய நிர்மாணத் திருப்பணிகளை தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வஸ்ரீ சீ. எஸ். சந்தனக்குமார் ஆசாரியும் திருத்தலத் திருப்பணியை முகத்துவாரம் தியாகராஜா சற்குணநாதன் ஆசாரியும் செய்துள்ளனர். சிவஸ்ரீ குஞ்சிபாதக் குருக்கள், யாழ். இணுவில் காயத்திரி குருகுல அதிபர் சிவஸ்ரீ தானு மஹாதேவக் குருக்கள், பொன்னாலை வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தின் பிரதம குரு சிவஸ்ரீ க. ச. சோமாஸ் கந்தக்குருக்கள் ஆகியோரின் அருளாசிகளோடு கொழும்பு பொன்னம்பலவானேஸ்வரர் தேவஸ்தான குருக்கள் சிவஸ்ரீ சி. சந்திரகுமாரக் குருக்கள் தலைமையில் இவ்வாலய கும்பாபிஷேகம் நடைபெறும்.

சிவஸ்ரீ பாலசுப்பிரமணியக் குருக்கள் (பொன்னம்பலவானேஸ்வரர் கோவில்), சிவஸ்ரீ சி. பாலசண்முகக் குருக்கள் (சண்டிலிப்பாய்), சிவஸ்ரீ க. சிவராஜக் குருக்கள் (வவுனியா), சிவஸ்ரீ பத்மஜெயராமக் குருக்கள் (உடப்பு திரெளபதி அம்மன் ஆலய பிரதம குரு), சிவஸ்ரீ சுகுமாரக் குருக்கள் (வவுனியா) ஆகியோர் கும்பாபிஷேக கிரியைகளை நடத்துவார்கள்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் மஹோற்சவ குரு சிவஸ்ரீ சதாயோகீஸ்வரக் குருகள் சர்வபோதகம் செய்ய, வவுனியா பண்டாரிகுளம் அம்மன் கோவில் பிரதமருக்கு ப்ரம்மஸ்ரீ செளந்தரராஜக் குருக்கள், கொழும்பு சிவஸ்ரீ ந. பிரதீபக் குருக்கள் ஆகியோர் சர்வ சாதகர்களாகவும் பிரம்மஸ்ரீக்களான சிவா சர்மா, சுரேஷ்சர்மா, சுதாசர்மா, ரிசிகேச சர்மா ஆகியோர் உபசாதகர்களாகவும், கிரியைகளை நடத்த உறுதுணையாவார்கள். சுவிஸ் பொன்னம்பலவானேஸ்வரர் கோவில் பிரதம குரு சிவஸ்ரீ வை. பாலசுந்தரக் குருக்கள், காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ நா.

ஞானசம்பந்தக் குருக்கள், முகத்துவாரம் சிவன் கோவில் பிரதம குரு சிவஸ்ரீ செந்தில் நாதக் குருக்கள் ஆகியோரின் அருளாசியோடு இடம்பெறும் இக் கும்பாபிஷேகத்தில் ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலய ஓதுவார் ஆசிரியர் எஸ். உமாகாந்தன் திருமுறை பாராயணம் ஓதுவார். கே. என். சந்தன கிருஷ்ணனும் எம். வடிவேல் குழுவினரும் மங்கள வாத்தியம் இசைப்பார்கள்.


கே. ஈஸ்வரலிங்கம்

திங்கள், 14 மார்ச், 2011

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


(வாஸ்து புராணம்)

8400) இந்து மதத்தில் உள்ள வேதங்கள் எத்தனை?

நான்கு

8401) வாஸ்தோஸ்பதி என்ற சொல் எந்த வேதத்தில் உள்ளது?

ரிக் வேதத்தில்

8402) வாஸ்தோஸ்பதி என்பதன் பொருள் என்ன?

பாதுகாப்பு, மகிழ்ச்சி, வழமை ஆகியவை இந்தப் பிறவியிலும் மற்ற எல்லாப் பிறவியிலும் கொடுக்கக்கூடியது.

8403) வாய்தோஸ்பதி என்பது எந்த மொழி சொல்?

சமஸ்கிருத மொழி

8404) வாஸ்து என்ற சொல் எதில் இருந்து உருவாகி, இருக்கும்?

வாஸ்தோஸ்பதி என்ற சொல்லில் இருந்து

8405) மத்ஸய புராணத்தில் வாஸ்து சாஸ்திர வல்லுநர்களாக எத்தனை பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன?

18

8406) 18 வாஸ்து சாஸ்திர வல்லுநகர்களின் பெயர்களையும் தருக.

1.பிருகு 2. அத்ரி 3. விஸ்வகர்மா

4.வசிஷ்டர் 5. மயன் 6. நாரதர்

7.நகுனஜித் 8.விசாலாக்ஷன் 9.புரந்தரன்

10.பிரம்மா 11.குமாரஸ்வாமி 12.நந்தீஸ்வரர்

13.ஸெளனகர் 14.பகர் 15வாசுதேவர்

16.அநிருந்தர் 17. சுக்கிரன் 18. பிருஹஸ் பத

8407) மகாபாரதத்தில் கட்டிட வல்லுநர்களை அழைத்து வாஸ்து சாஸ்திரப்படி எளிதில் எரியக்கூடிய ஒரு மாளிகைக் கட்டித்தரும்படி கூறியவர் யார்?

துரியோதனன்.

8408) வாஸ்து வல்லுனர் மயனைக் கொண்டு பாண்டவருக்காக பிரிக்கப்பட்ட இந்திரபிரஸ்தத்தை மிக நேர்த்தியாக அமைத்து கொடுத்தவர் யார்?

ஸ்ரீ கிருஷ்ணர்

8409) வட மதுராவில் உள்ள மக்களைக் காப்பாற்ற கடலுக்கு நடுவில் துவாரகா என்ற நகரத்தை வாஸ்து சாஸ்திரபடி கட்டியவர் யார்?

ஸ்ரீ கிருஷ்ணர்

8410) இராமாணத்தில் பஞ்சவடி என்னும் இடத்தில் ஆசிரமம் அமைக்கும் குடிலை வாஸ்திரப்படி அமைக்கும் படி கூறியவர் யார்?

இராமன்

8411) யாரை பார்த்து கூறினார்?

இலக்குமணை

8412) சூரியனை நோக்கி கிழக்கு முகமாக அமர்ந்து சிறுநீர் கழிக்கக்கூடாது என்று அறிவுறுத்துபவர் யார்?

ஸ்ரீ இராமன்

திங்கள், 7 மார்ச், 2011

அறநெறி அறிவு நொடி

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


8394 ஸ்தல விருட்சம் என்றால் என்ன?

அங்குதான் சுவாமியே உருவாகியிருப்பார்.


8395 ஸ்தல விருட்சத்தை வேறு எவ்வாறு கூறலாம்?

ஸ்தலம் உருவாகக் காரணமாக இருப்பது.


8396 ஸ்தல விருட்சத்தைச் சுற்றினால் ஏற்படும் நன்மை என்ன?

கடவுளின் கர்ப்பக்கிரகத்தைச் சுற்றும் பலன் கிட்டும்.


8397 ஸ்தல விருட்சத்தை எத்தனை முறை வலம் வரவேண்டும்?

எத்தனை முறை வேண்டுமானாலும் வலம் வரலாம். ஒருமுறை வந்தாலும்

போதுமானதுதான்.


8398 திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் எனக் கூறுவதன் அர்த்தம் என்ன?

நெல், கரும்பு போன்றவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் விளைச்சலை தந்துவிடும். ஆனால் திருமணம் என்பது அனைத்து காலத்திலும் பிரச்சினைகளை சமாளித்து விளைச்சலை கொடுக்கும் பயிர் என்ற அர்த்தத்தில் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

பழங்கால மக்கள் எதையும் இயற்கையுடன் ஒப்பிட்டு பேசினார்கள் அதேபோல் திருமணமும் காலம் காலமாக பலனை அளிக்கக்கூடிய ஒன்று.

கணவன், மனைவி இருவரும் அடுத்தடுத்த ஜென்மங்களிலும் மனம் ஒத்து வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் அதனை ஆயிரம் காலத்துப் பயிர் என்று குறிப்பிட்டனர்.


8399 அறுபத்து மூன்று நாயன்மார்களின் பெயர்களையும் தருக

1)அதிபத்தர் 2)அப்பூதியடிகள் 3)அமர்நீதியார் 4)அரிவட்டாயர்

5)ஆனாயர் 6)இசைஞானியர் 7)இடங்கழியார் 8)இயற்பகையார்

9)இளையான்குடி மாறன் 10)உருத்திரபசுபதியார் 11)எறிபத்தர் 12)ஏயர் கோன்கலிக்காமர்

13)ஏனாதி நாதர் 14)ஐயடிகள் காடவர் கோன் 15)கணநாதர்

16)கணம் புல்லர் 17)கண்ணப்பர் 18)கலிக்கம்பர் 19கலியர்

20)கழறிற்றறிவார் 21)கழட்சிங்கர் 22)காரியார் 23)குங்கிலியக்கலயர்

24)காரைக்கால் 25)குலச்சிறையார் 26)கூற்றுவார் 27)கோச்செங்கட்சோழர்

28)போட்புலியார் 29)சடையனார் 30)சண்டேசுரர் 31)சந்தியார்

32)சாக்கியர் 33)சிறுப்புலியார் 34)சிறுத்தொண்டர் 35)சுந்தரர்

36) செருத்துணையார் 37)சோமாசிமாறர் 38)தண்டியடிகள் 39)திருக்குறிப்புத் தொண்டர்

40)திருஞானசம்பந்தர் 41)திருநாவுக்கரசர் 42)திருநாளைபோவார் 43)திருநீலகண்டர்

44)திருநீலகண்டயாழ்பாணர் 45)திருநீலநக்கர் 46)திருமூலர்

47)நமிநந்தியடிகள் 48)நரசிங்க முனையாரையர் 49)நின்ற சீர்நெடுமாறர்

50)நேசர் 51)புகழ்ச்சோழர் 52)புகழ்த்துனையார்

53)பூசலார் 54)பெருமிழவககுரும்பர் 55)மங்கயற்கரசியார்

56)மானக்கஞ்சாறர் 57)முருகர் 58)முனையடவார் 59)மூர்க்கர்

60)மூர்த்தியார் 61)மெய்ப் பொருளார் 62)வாயிலார் 63)விறண்மிண்டர்

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812