வெள்ளி, 19 செப்டம்பர், 2014

சகுனம்

கே. ஈஸ்வரலிங்கம் 11087) சகுனம் பார்ப்பது எதற்காக? இந்து மதத்தின் பல நெறிமுறைகளில் சகுணமும் நிமித்தமும் முக்கியமானவையாக இருந்தாலும், சில குறிப்பிட்ட சகுணத்தடை அல்லது நல்ல சகுனம் என்று பொதுவாகக் கருதப்படும் சில விஷயத்திற்கு விளக்கங்கள்: வீட்டிற்கு முன் காகம் கரைந்தால் விருந்தினர் வருவார்கள் என்பது உண்மையா? இந்த விஷயம் சற்று சுவாரஷ்யமானது. அந்தக் காலத்தில் கிராமத்து வீடுகளில் சமையலறை என்று ஒன்று இருந்தாலும், விருந்தினர்கள் வந்தாலோ அதிகப்படி சமைக்க நேரிட்டாலோ, வீட்டின் கொல்லைப்புறத்தில் (முதல் கட்டு, இரண்டாம் கட்டு என்று கொல்லைப்புறம் பிரிக்கப்பட்டிருக்கும். முதற்கட்டில் கிணறு இருக்கும். குளிக்க வெந்நீர் போடுவது, தேவைப்பட்டால் அங்கே சமைப்பது இவை நடக்கும். இரண்டாம் கட்டில் கழிவறை, தோட்டம் இவை இடம்பெறும்), அதிகப்படி சமையலானால் அது முதற்கட்டில் (வெட்டவெளிதான்) நடக்கும். சாதம் தவலையில் வெந்து கொண்டிருப்பதைப் பார்த்து, சுற்றியுள்ள மரங்களில் அமரும் காகங்கள் முதற்கட்டைச் சுற்றிச் சுற்றிக் கரையும். சமையலறையில் சமைத்தாலும், விருந்தினர் சாப்பிட்டபின் மிச்சத்தை முதற்கட்டில் (சிலர் வீட்டை முதற்கட்டு என்றும், இதை இரண்டாம் கட்டு என்றும் சொல்வார்கள்) கொட்டுவார்கள். எப்படியோ சாதம் இரைவதைக் கண்டு காக்கைகள் வட்டமிடும். அக்கம் பக்கத்துக்காரர்கள் காக்கைகள் கரைவதைப் பார்த்து விருந்தினர்கள் வந்திருப்பதைப் புரிந்து கொள்வர். இதுதான் நாளடைவில் தலைகீழாக மாற்றப்பட்டு, காக்கை கரைந்தால் விருந்தினர் வருவார் என்று சொல்லப்படுகிறது. வெளியே செல்லும் போது பூனை குறுக்கே வந்தால் அபசகுணம் என்று கூறுகிறார்களே இது உண்மையா? பூனை என்கிற பிராணி எப்போது எப்படிப் பாயும் என்று எதிர்பார்க்க முடியாத குணாதிசயம் உள்ளது. நாய் என்றால் அது தெரிந்தவர்களிடம் வாலை ஆட்டிப் பின்தொடரும். தெரியாதவர்களைக் பார்த்துக் குலைக்கும். வெகு சில நாய்களே தெரியாதவர்களைக் கடிக்க முற்படும். ஆனால் பூனை, எதிர்பாராத வகையில் மேலிருந்து கீழும் குறுக்கேயும் ஆள்மேலேயே கூட பாயும். பாய்வது அன்பினாலும் இருக்கலாம். விரோதத்தினாலும் இருக்கலாம். அப்படி எதுவும் காரணமே இல்லாமல் கூட சடாரென்று பாயும் சுபாவம் பூனைக்கு. நாம் வெளியே செல்ல எத்தனிக்கும் போது அப்படிப் பூனை பாய்வதால் நாம் பயந்துவிடலாம் அல்லது நமது மனநிலை ஏதோவொரு வகையில் பாதிக்கப்படலாம். இதை மனதில் வைத்துத்தான் பூனை குறுக்கே போவதை அபசகுணம் என்று சொல்லியிருக்கிறார்கள். நாம் வெளியே செல்லும் போது விதவைப் பெண் எதிரே வந்தாள் அபசகுணமா? அந்தக் காலத்தில் இந்தியாவில் மனிதனின் சராசரி ஆயுள் ஐம்பதை ஒட்டித்தான் இருந்தது. அதிலும் ஆண், வயதில் மூத்தவராக (குறைந்த பட்சம் ஏழு வயது வித்தியாசம் இருந்தது) இருந்ததால், கணவனை இழந்த பெண்கள் பெரும்பாலும் இளம் வயதுக்காரர்களாக இருந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் பூ, பொட்டு, வளையல், வண்ண உடைகள் எதுவுமே அணியக் கூடாது. வெள்ளைப் புடவை மட்டும்தான் உடுத்த வேண்டிய சமூகக் கட்டுப்பாடு. திருமணமான தம்பதிகளோ. அலங்காரம் செய்து கொண்ட திருமணமான பெண்ணோ வெளியே போகும் போது இவர்கள் எதிர்ப்பட்டால், இந்த இளம் விதவைகளின் மனம் தனக்கு இந்த பாக்கியம் பறிபோனதே என்று வேதனைப்படும். அது ஏதோவொரு வகையில் இப்படி சந்தோஷமாக வெளியே கிளம்பும் பெண், தம்பதி பேரில் லேசான பொறாமையாகவும் பிரதிபலிக்கலாம். அந்த உணர்ச்சி இவர்களைப் பாதிக்கக் கூடாது என்பதற்காகவும் அந்த விதவைப் பெண்மணிக்கு வேதனையைத் தரக் கூடாது என்று நினைத்து, கொண்டு வரப்பட்ட சம்பிரதாயம். ஆனால் வேதனையைத் தவிர்ப்பதற்காக வந்த சகுண சம்பிரதாயமே, அந்த விதவைகளுக்கு மேலும் வேதனையைத் தருகிறாற்போல் ஆகிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் இந்த சம்பிரதாயத்தைக் கடைப்பிடிப்பதில் அர்த்தமில்லை அவசியமும் இல்லை. வீதியில் செல்லும் போது எதிரே பிணம் எடுத்துச் சென்றால் பார்க்கலாமா? இதன் அடிப்படையும் சுவாரஷ்யமானது. நமக்குத் தெரிந்தவர் யாரேனும் இறந்துவிட்டால், நாம் அந்த மனிதரின் உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்லும் போது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு நடந்து செல்வது வழக்கம், எதிரில் அப்படி ஒரு இறுதி ஊர்வலம் வந்தால், நல்லவேளை இறந்தவர் நமக்கு வேண்டியவர் இல்லை என்று சிறு நிம்மதியும் கொள்ளலாம். ஆக ஊர்வலத்தின் பின் செல்ல வேண்டி வந்தால் நாம் துக்கமாகவும், எதிரிலே வந்தால் சற்று நிம்மதியுடன் இருப்பதும் இயல்பு. இந்த மனிநிலையைத்தான் காலப்போக்கில் எதிரே பிணம் வந்தால் அதிஷ்டம் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812