புதன், 19 ஜூலை, 2017



பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்

உலக வாழ்வு, பிறப்பின் நோக்கத்தை அடைவதற்கான வாழ்வு என்ற இரு பகுதிகளைக் கொண்ட நம் வாழ்க்கைக்கு அடிப்படையாக அறக்கல்வி உள்ளது. உலக வாழ்வுக்குக் கைப்பொருள் (பணம்) சம்பாதிக்க வேண்டும்; பிறவிப் பயன் அடைய மெய்ப்பொருள் சம்பாதிக்க வேண்டும். இவ்விரண்டையும் தருவதே முழுமைக் கல்வியாகும்.

கல்வி என்றாலே பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே என்றாகிவிட்டது; இவ்வுலகில் மகிழ்ச்சியுடன் வாழ, குடும்பம், உற்றார் உறவினர், நண்பர்கள் ஆகியோர் நலத்தைப் பேணுவதற்குப் பணம் அவசியம்தான். அந்தப் பணத்தைச் சம்பாதிக்கவும், சம்பாதித்ததைப் பொன்னாகவும், சொத்தாகவும், பணமாகவும் சேமித்துப் பாதுகாக்கவும், பொருட்களைப் பெருக்கவுமே வாழ்நாளில் பெரும்பகுதியைச் செலவழித்துவிடுகிறோம்; அதனால் மெய்ப் பொருளைச் சம்பாதிக்க வேண்டிய காலம் சுருங்கிக்கொண்டே வருகிறது. ‘பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்’ என்று தம் நிலைமையை இறைவனிடம் சொல்லி வருந்துகிறார் மணிவாசகர்.

உடைந்த ஊசியைக்கூட இவ்வுலகத்திலிருந்து யாரும் எடுத்துச் செல்ல முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். தெரிந்தும், தேவைக்கும் அதிகமாகப் பணம் சேர்த்து, தேவையுள்ள சகமனிதர்களுக்கு அவை கிடைக்கவிடாமல் பெரும்பாவம் செய்து, வாழ்நாளையும் வீணடித்துவிடுகிறோம். இறுதியில் பிறவிப் பயனை அடையாமலேயே இறக்கிறோம்.

பொய்ப் பொருட்களைப் பெருக்குவதிலேயே வாழ்நாளைக் கழித்துவிட்டு, இறைவனை அறியும் மெய்யறிவு பெறுவதற்கான பொழுதைச் சுருக்கிவிடும் செயலானது, தீவினைகள் பெருகி, பிறவிகளில் உழலும் கொடிய நரகத்தில் நம்மைத் தள்ளிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812