வியாழன், 8 ஆகஸ்ட், 2019

ஹெலன் குமாரி


இலங்கைத் தலைநகர் கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் இடமான ஜெயந்தி நகர் என்று அழைக்கப்படும் ஜிந்துப்பிட்டியில் அருள் பெர்னாண்டோ, திரேசம்மா ஆகியோருக்கு மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர். இவர், இவரது வீட்டுக்கருகில் மேட்டுத் தெருவிலுள்ள புனித அன்னம்மாள் பெண்கள் பாடசாலையில் படித்தார். பாடசாலையில் படிக்கும் போதே நடனத்தில் தேர்ச்சி பெற்றார். பாடசாலையில் நடைபெறும் விழாக்களில் நடனமாடிக் கலந்து கொண்டார்.

இவருக்கு எட்டு வயதாக இருக்கும்போது, "மனோரஞ்சித கான சபா" ராஜேந்திரா மாஸ்டர் இவரை கலை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். மனோரஞ்சித கான சபாவில் கலை நிகழ்ச்சிகளை அளித்து வந்தார். பின்னர் பிரபல சிங்களத் திரைப்பட நடன இயக்குநர் ரொனால்ட் பெர்னாண்டோவிடம் மேற்கத்தைய நடனத்தையும் கற்று வந்தார். சிங்கள திரைப்பட இயக்குநர் எம்.வி.பாலனின் வழிகாட்டலில் 1970 ஆம் ஆண்டு ‘ஒக்கம ஹரி’ என்ற சிங்களத் திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் இவர் எம். வி. பாலனுடன் இணைந்து நடனமாடினார். இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 36 சிங்களத் திரைப்படங்களில் நடனமாடியுள்ளதோடு நடன இயக்குநராகவும் இவர் இருந்துள்ளார்.
புகைப்படக் கலைஞர் கிங்ஸ்லி எஸ். செல்லையாவின் ஆனந்தா புரடக்சன்சின் உதவியுடன் எம்.வி.பாலன் தயாரித்த மஞ்சள் குங்குமம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

இலங்கையில் தயாரான முதல் சினிமாஸ்கோப் திரைப்படமான லெனின் மொராயசின் "நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனாலும், இத்திரைப்படம் திரைக்கு வரும் முன்னரே இதன் திரைப்படச்சுருள் 83 ஜுலை கலவரத்தில் தீக்கிரையானது. அதே போன்று காமினி பொன்சேகாவுடன் இவர் இணைந்து நடித்த "இளைய நிலா" திரைப்படத்தை நடிகர் பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் தயாரித்திருந்தார். அதுவும் ஜூலைக் கலவரத்தில் எரிந்து போனது.
பிரபல எழுத்தாளர் மானா மக்கீன் தயாரிப்பில் உருவான "டயல் எம்-போர்-மேடர்" என்ற நாடகமே இவரது முதல் தமிழ் மேடை நாடகமாகும். அவர் தயாரித்த விட்னஸ்-போர்-த பிரசிகியூசன் என்ற நாடகத்திலும் நடித்துப் பார்ராட்டைப் பெற்றார்.
கிங்ஸ்லி எஸ். செல்லையாவின் ஆனந்தா புரடக்சன்சு தயாரித்த பல நாடகங்களில் ஹெலன்குமாரி நடித்திருக்கிறார். அவரது தயாரிப்பில் உதயகுமார் கதை வசனத்தில் தயாரான ‘தாலிக்கொடி’, நீர்கொழும்பு முத்துலிங்கம் மாஸ்டரின் உண்மை பேசும், உதயகுமாரின் ராம் ரஹீம் ரீட்டா, போன்ற நாடகங்கள் கொழும்பின் டவர், லும்பினி, கதிரேசன் மண்டபங்களில் பல முறை மேடையேறியன.

ஆர்.ராஜசேகரனுடன் இணைந்து ‘வெள்ளி நிலா காலாலயம்’ என்ற அமைப்பை ஏற்று நடத்தினார். "முக்கோணத்தில் மூவர்" கலாலயத்தின் முதல் நாடகமாக மேடையேறியது. அதைத் தொடர்ந்து "ஒன்று எங்கள் ஜாதியே", "கெரி ஒன் டிரக்டர்" போன்ற நாடகங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. "கெரி ஒன் டிரக்டர்" என்ற நகைச்சுவை நாடகம் ரூபவாகினியில் பல முறை ஒளிபரப்பப்பட்டது.

வெள்ளி நிலா கலாலயத்தின் நிறுவனர் ஆர். ராஜசேகரையே இவர் 1985 ஆம் ஆண்டில் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு விக்ரம், கார்த்திகா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812