திங்கள், 15 ஜூலை, 2013

கே.ஈஸ்வரலிங்கம்

10180) சொர்க்கவாசல் திறப்பு வைபவம் வெகு சிறப்பாக போற்றிக் கொண்டாடப்படும் திருத்தலம் எது? எல்லா வைணவ ஆலயங்களிலும் சொர்க்க வாசல் வைபவம் நிகழும் என்றாலும், அவற்றுள் முதலிடம் பெறுவது திருவரங்கமேயாகும். எம்பெருமானுடன் போராடியே அப்பெருமானின் அருள்பெற்ற அரக்கர்கள் இருவர், தாம் பெற்ற வைகுண்ட இன்பத்தை உலகத்தார் யாவரும் பெறவேண்டும் என்ற எண்ணத்தில், வைகுண்ட ஏகாதசி அன்று திருவரங்க வடக்கு வாசல் வழியாக பெருமாள் அர்ச்சாவதாரமாக வெளிவரும்போது அவரை தரிசிக்கும் யாவரும், அவரைப் பின்தொடர்ந்து வருவோர்களும் தங்கள் பாவங்கள் யாவும் நீங்கப்பெற்று முக்திப் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். இந்த ஐதீகத்தின் அடிப்படையில் இன்றும் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் திருவரங்கத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அன்று திருவரங்கம் சொர்க்கவாசல் வைபவத்தைக் காண்போரும், பெருமானை தரிசிப்போரும் பிறப்பில்லா பெருநிலை அடைவர். 10181) வைகுண்ட ஏகாதசியன்று அடியவர்கள் செய்ய வேண்டிய முக்கிய காரியங்கள் என்ன? உண்ணாமல் நோன்பிருப்பது, பேசாமல் மெளனிப்பது, உறங்காமல் பகவானின் நாமங்களை தியானிப்பது, தவறாமல் திருமாலை தரிசிப்பது. இவை யாவும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டியன. ஏகாதசியன்று பாகவதக் கதைகளை படிப்பதும், கேட்பதும் மிக நன்று. 10182) ஏகாதசியன்று சிரார்த்தம் செய்யலாமா? ஏகாதசியில் சிரார்த்தம் வந்தால் திதி கொடுப்பவரும், அவர் மனைவியும் மக்களும் அவசியம் சிரார்த்த உணவை (அதாவது வழக்கப்படி திதி கொடுத்த அன்று தயாரிக்கப்படும் உணவை) சாப்பிடவேண்டும். மாதம் இருமுறை வரும் ஏகாதசியைவிட வருடத்திற்கொரு முறை வரும் திதி மிகவும் சிறப்பானது. ஏகாதசி அன்று வரும் திதி ஏகாதசி விரதப் பலனையும் தரும். 10183) துவாதசியன்று சேர்க்க வேண்டியவை? விலக்க வேண்டியவை என்ன? ஏகாதசிக்கு மறுநாளான துவாதசியன்று விரதத்தை பூர்த்தி செய்வர். அன்று சமையலில் நெல்லிக்காய், அகத்திக் கீரை, சுண்டைக்காய் மூன்றும் சேர்த்துக்கொள்வது மிக விசேஷம். துவாதசியன்று புடலங்காய், பகல் தூக்கம், இரு வேளை சாப்பாடு பாலுணர்வு ஆகியவை விலக்கப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812