செவ்வாய், 9 ஜூலை, 2013

கே.ஈஸ்வரலிங்கம்

10172) விட்டகுறை தொட்டகுறை என்று கூறுவதன் அர்த்தம் என்ன? பூர்வ ஜென்மத் தொடர்பையே விட்டகுறை தொட்டகுறை என்று கூறுகின்றனர். ஒரு சிலர் பெண்களை மையப்படுத்தி இதனைப் பொருள் கொள்கின்றனர். ஒரு பெண்ணைத் தொட்டு விட்டு, அநாதையாக விட்டுவிட்டதால் அவருக்கு பாவம் ஏற்பட்டு விட்டது என்றும் கூறுகின்றனர். இது தவறான அர்த்தம் கற்பிக்கிறது. தொட்டு வந்த துறை விட்டு வந்த துறை என்று கூறுவதே இந்தப் கூற்றுக்கு சரியான அர்த்தமாக அமையும். கடந்த பிறவியில் என்ன கர்ம வினைகள் செய்தோமோ அதற்குத் தகுந்தார் போல் இந்தப் பிறவியில் பலனை (நல்லது கெட்டது) அனுபவிப்பதையே விட்டகுறை தொட்ட குறை என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். வாழ்க்கை என்பது தனிப்பிறவி எடுப்பது அல்ல பூர்வ ஜென்மத்தில் எந்த இடத்தில் விட்டு வந்தோமோ அதனை மறுபிறவியில் வேறு உடலில் இருந்து தொடர்கிறோம் என்பதே விட்டகுறை தொட்டகுறை என்று கூறுவதன் உண்மையான உட்பொருள். 10173) திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் எனக் கூறுவதன் அர்த்தம் என்ன? திருமணம் என்பது ‘ஆயிரம் காலத்துப் பயிர்’ என்று முன்னோர்கள் கூறியதற்கு உகந்த பொருள் உள்ளது. உதாரணமாக நெல், கம்பு, கரும்பு உள்ளிட்ட பயிர்களை எடுத்துக் கொண்டால் அவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மகசூல் கொடுத்துவிடும். ஆனால் திருமணம் என்பது அனைத்துக் காலத்திலும் பிரச்சினைகளை சமாளித்து மகசூ கொடுக்கும் பயிர் என்ற அர்த்தத்தில் முன்னோர்கள் கூறினர். பழங்கால மக்கள் எதையும் இயற்கையுடன் ஒப்பிட்டுப் பேசினர். அந்த வகையில் திருமணமும் காலம் காலமாக மகசூல் அளிக்கக் கூடிய ஒன்று. கணவன் - மனைவி இருவரும் அடுத்தடுத்த ஜென்மங்களிலும் மனம் ஒத்து வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் அதனை ஆயிரம் காலத்துப் பயிர் என்று குறிப்பிட்டனர். 10174) கரி நாளின் முக்கியத்துவம் என்ன? கரி நாளைப் பற்றி அறிந்துகொள்ள முதலில் திதி, நட்சத்திரம் தொடர்பான கணக்கு பற்றி அறிந்துகொள்ள வேண்டும். சந்திரனை நெருங்கக் கூடிய பாகையை திதி என்றும், அதற்கு எதிரே உள்ள பாகையை நட்சத்திரக் கணக்கு என்றும் கூறுவர். இதில் குறிப்பிட்ட திதி, நட்சத்திரமும் அமையும் நாளில் குறிப்பிட்ட கிழமை வந்தால் அதனைக் கரி நாளாக கணக்கிடுகிறார்கள். பொதுவாக கரி நாளன்று நல்ல காரியங்களைத் துவக்கினால் அது விருத்திக்கு வராது என்று கூறுவர். எனவே விருத்திக்கு வரக் கூடாது என்று நாம் நினைக்கும் காரியங்களை அன்று நடத்தலாம் உதாரணமாக கடனை அடைக்கும் பணியை மேற்கொள்ளலாம். ஏனென்றால் அன்றைக்கு கடனை அடைத்தால் மீண்டும் கடன் வாங்கும் நிலைமை ஏற்படாது. 10175) தர்மம் ஏன் கர்ணனைக் காக்கவில்லை? உயர்ந்த சர்க்கரைப் பொங்கலாய் இருந்தால் கூட அடுத்தவர் சாப்பிட்ட தட்டில் வைத்துக் கொடுத்தால் நாம் அதை உண்ண மாட்டோம். நல்லவர்களாய் இருந்தால்கூட நல்ல செயலைச் செய்தால் கூட அதர்மத்தின் பக்கம் நின்றால் மரணம்தான் பரிசு. கர்ணன் தானம் செய்தது உயர்ந்ததாய் இருந்தாலும்கூட, அவன் அதர்மத்தின் சொரூபமான துரியோதனின் பக்கத்தில் இருந்ததால் தர்மம் அவனைக் காக்கவில்லை. 10176) சகுனம் பார்க்கலாமா, கூடாதா? சகுனம் கட்டாயம் பார்க்க வேண்டும். ஆனால் நாம் வீட்டில் வளர்க்கும் பூனை நமக்கு குறுக்கே வரும் போது சகுனம் பார்ப்பது மூடத் தனமாகும். இதய வலி என்று அவசரமாக ஆஸ்பத்திரி செல்ல வேண்டி இருக்கையில், பிரசவ காலத்தில் சகுனம் பார்த்துக்கொண்டிருப்பது மூடத்தனமாகும். ஒரு நல்ல செயலை நிறுத்தி நிதானமாகச் செய்யும் போது சகுனம் பார்க்கலாம். அவசர காலத்தில் சகுனம் பார்ப்பது தவறு என்று கூறப்படுகிறது. 10177) ஏழைகளையே கடவுள் அதிகம் சோதனைக்குள்ளாக்குவது ஏன்? ஏழைகளை மட்டும் கடவுள் அதிகம் சோதனைக்குள்ளாக்குவார் என்று எண்ண வேண்டாம். பணம் உள்ளவர்களுக்கும் வசதி உள்ளவர்களுக்கும் வியாதி வருகிறது; வழக்கு வருகிறது; பிரிவு வருகிறது. கடவுள் எல்லோருக்கும் சோதனையைக் கொடுக்கத்தான் செய்கிறார். பலருக்கு வெளியே தெரிவதில்லை. சிலருக்கு வெளியே தெரிகிறது. 10177) எந்த விரதம் வலிமை வாய்ந்தது? ஏகாதசி விரதம் உயர்ந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. 10178) வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் திறப்பு வைபவம் எதற்காக? வைகுண்ட ஏகாதசியன்று திருமால் பாற்கடலில் பக்தர்களுக்கு பள்ளி கொண்டிருப்பது போன்று காட்சியளிப்பதுடன், சொர்க்கத்துக்குச் செல்லும் வழியையும் காட்டுகிறார். கலியுகத்தின் நம்மாழ்வாருக்கு முன்பு வைகுண்டத்திற்கு செல்வார் யாரும் இல்லாததால் வைகுண்டத்தின் கதவுகள் மூடியே இருந்தனவாம். ஆழ்வார் மோனநிலையில் வீடுபேறு பெற்ற அன்றே அது திறக்கப்பட்டது. இந்த வரலாற்றை நினைவூட்டவே வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் திறப்பு உற்சவம் நடைபெறுகிறது. 10179) சொர்க்கவாசல் வைபவம் உணர்த்தும் தத்துவம் என்ன? பல வடிவங்களில் எம்பெருமான் அவதரித்து பலரையும் காத்தது போன்றே அர்ச்சாவதாரத்தில் உருவ வழிபாட்டு முறையில்தானே முக்தி அடையும் ஒருவனாக நடித்து, அவ்வாறு முக்தி பெறுபவன் தன் முக்திப் பயணத்தில் என்னென்ன மாற்றங்களையும், வரவேற்புகளையும் பெறுவானோ அவற்றை நிகழ்த்திக் காட்டும் முறையில் பெருமாளின் வைகுண்ட ஏகாதசி புறப்பாடும், திருவுலாவும் நடைபெறுகிறது. ஆம் அன்று பெருமாள் எல்லோருக்கும் முன்னோடியாக தாமே முதலில் வைகுண்டம் நுழைந்து, தம் அடியவர்களையும் சேர்த்து அழைத்துச் செல்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812