செவ்வாய், 3 டிசம்பர், 2013

காலியில் அருள்பாலிக்கும் கதிர்வேலாயுத சுவாமி

தென் மாகாணத்தின் எழில் அழகை இன்னும் மெருகூட்ட அதன் தலைமை நகராக காணப்படும் காலியூரில் அற்புதமான கடல் பார்க்கும் சுவாமியான எம் பொருமான் ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி வீற்றிருக்கிறார். ஜாதி, மத பேதமின்றி குறிப்பாக பெளத்த மதத்தவர் விரும்பி வணங்கும் அளவிற்கு அனைத்து மக்களுக்கும் நாமிருக்க பயமேன் என நிமிர்ந்து நிற்கும் எம் பெருமான் அருள்பாலிக்கின்றார். 1790 ஆம் ஆண்டு தேவகோட்டை செட்டியார் நாட்டுக்கோட்டை செட்டியார் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட முதல் கோவில் இந்த ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி கோவிலாகும். இக்கோவில் மட்டுமல்லாது உனவட்டுன பிள்ளையார் கோவிலும் இதன் பின் அமைக்கப்பட்டது. இலங்கையில் மேலும் பல கோவில்கள் அமைக்கப்பட்டன. மேற்குறிப்பிட்ட செட்டிமார் தமது வியாபாரத்தை இந்த காலி ஊரிலேயே முதன் முறையாக ஆரம்பித்தார்கள். இவர்கள் பர்மா ஊரிலிருந்தே அரிசி இறக்குமதி செய்தார்கள். இவர்கள் இறக்குமதி செய்யும் அரிசியை கிட்டங்கி என்ற இடத்திலும், டெல்பட்டவுன் வோட்ஸ் வீதி என்ற இடத்திலும் களஞ்சியப்படுத்தி வியாபாரிகளிடையே விநியோகித்தார்கள். இக்காலகட்டத்திலேயே இவர்கள் பர்மாவில் பர்மா டீக் எனப்படும் தேக்க மரக்கட்டைகளை கொண்டு வந்து ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி கோவிலை நிர்மாணித்தார்கள். இதன் பின் இவர்கள் தமது வருவாயை கொண்டு வங்கித் தொழில், நகை அடகு பிடிக்கும் தொழில் என்பன மேற்கொண்டார்கள். செட்டியார்களாலேயே நிர்வகிக்கப்பட்ட இக்கோவில் 1956 இதற்கு முன் வைரவன் செட்டியார், லெட்சுமணன் செட்டியார், சொக்கலிங்கம் செட்டியார், பழனியப்பச் செட்டியார், ராமசாமி செட்டியார் ஆகியோரால் சிறப்பாக பரிபாலிக்கப்பட்டது. 1956 இதிலிருந்து 1981 வரை பெரிஸ்டர் சோமசுந்தரம் செட்டியாரால் இக்கோவில் நிர்வகிக்கப்பட்டது. அவரின் மறைவுக்குப் பின் 1981 இதிலிருந்து கோவிலை நிர்வாகிக்கும் பொறுப்பு தற்போது உள்ள பிரிபாலன சபையான கருப்பன் செட்டியார் அண்ணாமலை செட்டியார் ஏ. எஸ். சீ. முத்தப்பச் செட்டியார் (ஜே.பி.), கே. மாணிக்கம் செட்டியார் (ஜே.பி.) சின்னையா ராமனாதன் ஆகியோரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி கோவிலில் ஆடிமாதம் நடக்கும் ஆடிவேல் திருவிழா தான் தென் மாகாணத்திற்கே முதன்மை வகிக்கிறது. இத்திருவிழாவில் சுவாமி வீதி வலம் வரும் ரதமே இலங்கையிலேயே பெரிய ரதமாக காணப்படுகிறது. 1973 ஆம் ஆண்டின் பின் இந்த ரதம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. 1983 இல் நடந்த இனக் கலவரத்தில் இந்த ரதம் தீக்கிரையாகி சேதமடைந்தது. இன்று வரை அதை மீள்திருத்தம் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.இக்கோவிலில் நகராத்திரி திருவிழா, கந்தசஷ்டி திருவிழா, விநாயகர் சதுர்த்தி, பூஜைகள் என்பன விமர்சையாக நடைபெறுகின்றன. கதிர்காமத்திற்கு பயணிக்கும் யாத்திரிகள் தென் மாகாணத்தில் அமைந்துள்ள முதல் முருகன் கோவிலான இக்கோவிலை தரிசித்து விட்டே அவர்களது பயணத்தை தொடர்வர். புதைப்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூட வியக்குமளவிற்கு இக்கோவிலின் உட்புறமாக வரையப்பட்டுள்ள வண்ணச் சித்திரங்களும் அற்புதமான தேக்கு மர வேலைப்பாடுகளும் முருகனை தரிசிக்க வருபவரை மெய்மறக்கச் செய்கின்றன. இவை இக்கோவிலின் ஒரு விசேட அம்சமாகும். இக்கோவில் நம்மவர்களால் மட்டுமன்றி வெளிநாட்டவர்களாலும் போற்றப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812