திங்கள், 28 ஏப்ரல், 2014

அட்சய திரிதியை

சீமாவாசைக்குப் பின் வரும் மூன்றாம் நாளை திரிதியை திதி என்பர். சித்திரை மாதம் வரும் திரிதியை திதியை அட்சய திரிதியை என சிறப்பித்துக் கூறுவதுடன் விழாவாகவும் கொண்டாடுகிறோம். அட்சய என்றால் வளர்வது. குறையாதது என்று பொருள். அள்ள அள்ளக் குறையாது அள்ளித் தரும். அற்புதத் திருநாள் அட்சய திரிதியை அன்று செய்யப்படும் எந்த ஒரு நல்ல காரியமும் அதிக பலன்களைத் தரும் என்பர். இந்த நன்னாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி எப்போதும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. இந்நாளில் தங்கம் வாங்க ஆசைப்படுவார்கள். ஆனால் எல்லாராலும் வாங்க முடியாதே. அதற்காக மனம் தளர வேண்டாம். நமக்கு உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாமே. உப்பு (கண்டிப்பாக), அரிசி மற்றும் ஓரிரு ஆடைகள், சிறிய பாத்திரம் வாங்கலாம். எப்படியும் மாதா மாதம் மளிகை வாங்கியே ஆகவேண்டும். சித்திரை மாத மளிகையை அட்சய திரிதியை அன்று வாங்கிப் பயனடையலாமே. ஏனெனில் குபேரன் தான் இழந்த சங்கநிதி, பதுமநிதிகளை திரும்பவும் அட்சய திரிதியையில்தான் பெற்றான். குசேலன் தன் பால்ய நண்பன் கண்ணனுக்கு சிறிது அவல் கொடுத்து தன் வறுமையைப் போக்கிய நாளும் இதுவே. பாண்டவர்கள் வனவாசத்தின் போது சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாளும் இதுதான். மணிமேலையும் இப்பாத்திரம் பெற்றுள்ளாள். பிட்சாடனரான சிவன் தன் கையில் ஒட்டியிருந்த கபாலத்தில் காசி அன்னபூரணியிடமிருந்து உணவு பெற்று, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்ட நாளும் இதுதான். கெளரவர் சபையில் பாஞ்சாலி ஆடையை துச்சாதனன் உருவும் போது, ‘அட்சய’ என கண்ணன் கூற, பாஞ்சாலியின் புடவை வளர்ந்து அவள் மானம் காத்த நாள் இதுதான். பரசுராமர் அவதரித்த நாளும் இதுதான். மகாலட்சுமி திருமால் மார்பில் நீங்கா இடம்பிடித்த நாள். கேரள சொர்ணத்து மனையில் பாலசந்நியாசியான ஆதிசங்கரர் கனக தாரா ஸ்தோத்திரம் பாடி தங்க நெல்லிக்கனி மழை பெய்வித்த உன்னதத் திருநாளும் இதுவே. ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், இந்திரனிடத்தில் சொர்க்க லட்சுமியாகவும், மன்னர்களிடத்தில் ராஜலட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும் விளங்குகிறாள். பசுக்களில் கோமாதா, யாகங்களில் தட்சிணை, தாமரையில் கமலை, அவிர்பாகத்தில் ஸ்வாகா தேவி என சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்கும் நாராயணனின் இணை பிரியாத தேவியான லட்சுமியை நாம் அட்சய திரிதியை நாளில் சாஸ்திரப்படி பூஜித்தால் லட்சுமி கடாட்சம் கிட்டும். இதனை தானத் திருவிழா என்றும் கூறுவர். அட்சய திரிதியையில் செய்யும் எல்லா வகை தான தர்மங்களும் அளவில்லாத பயன்களைத் தரும். அன்னதானம் செய்தால் விபத்து நீக்கி உடல்நலம் தரும். கல்விக்கு உதவினால் நம் குழந்தைகளுக்கு கல்வி மேம்பாடு கிட்டும். அன்று குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கலாம். புத்தகம் வெளியிடலாம், வீடு, மனை, கிணறு புதுப்பிக்கலாம், எந்த ஒரு புதிய செயலையும், புண்ணிய செயலையும் செய்யலாம். ஆனால் கண்டிப்பாக கடன் மட்டும் வாங்கவே கூடாது. சங்கர அவதாரம் கேரளாவில் உள்ளது காலடி தலம். இங்கு சிவகுரு - ஆர்யாம்பாள் தம்பதிகளுக்குப் பிறந்தவர் ஆதிச்சங்கர். சிறுவயதில் குருகுலத்தில் சேர்ந்தார். குருகுல வழக்கப்படி சங்கரர் யாசகத்திற்குப் புறப்பட்டார். அவர் முதல் முதல் யாசித்த வீடு படு ஏழை வீடு. “பவதி பிட்சாந்தேஹி” என குரல் கொடுத்த பாலகனுக்கு கொடுக்க ஏதுமில்லையே என வருந்திய அவ்வீட்டிலிருந்த ஏழைப் பெண், தன்னிடமிருந்த காய்ந்த நெல்லிக்கனி ஒன்றைக் கொடுத்தாள். (அவள் இல்லத்தின் பின்புறம் நெல்லிமரம் ஒன்று இருந்தது) அவள் ஏழ்மையை உணர்ந்த பாலகன் அளவுக்கு உதவ விரும்பி, மகாலட்சுமியை நோக்கி மனம் உருகப் பாடினார். என்ன அதிசயம்! அவள் வீட்டு நெல்லிமரம் தங்கமழையைப் பெய்வித்தது. வீடு முழுவதும் தங்கக் கனிகள் குவிந்தன. அப்பாடல் தான் கனகதாரா ஸ்தோத்திரம். இது 8ம் ஆம் நூற்றாண்டில் நடந்த அதிசயமாகும். இச்சம்பவத்தையொட்டி ஆண்டுதோறும் காலடி கண்ணன் கோவிலில் கனக தாரா யாகம் செய்கின்றனர். சங்கரர் முக்தியடைந்தது 32ம் வயதில். எனவே அன்றைய தினம் 32 நம்பூதிரிகள் கனகதாரா சுலோகத்தை 1,008 முறை ஜெபித்து அர்ச்சனை செய்வார்கள். தங்க நெல்லிக்கனிகள், வெள்ளி நெல்லிக்கனிகள், ரட்சைகள் வைத்துப்பூஜை செய்வார்கள். முன்னதாகப் பணம் கட்டி பதிவு செய்த பக்தர்களுக்கு இவை தரப்படும். இதனை வீட்டு பூஜையறையில் வைத்துப் பூஜித்தால் நலமும் வளமும் பெற்று இன்பமாய் வாழலாம். திருக்காலடியப்பன் ஆலய மூலஸ்தானத்தில் கண்ணன் ஒரு கையில் வெண்ணெயுடனும், ஒரு கையை இடுப்பிலும் வைத்தபடி காட்சி தரும் அழகைக் காணலாம். ஆலயத்தின் பெயர் கிருஷ்ண அம்பலம் என்பதாகும். இவ்வாலயத்தின் உள்ளே வலப்புறம் சங்கரர் சந்நிதியும், இடப்புறம் சாரதாம்பாள் சந்நிதியும், சக்தி விநாயகர், கிருஷ்ணர் சந்திநிதிகளும் அமைந்துள்ளன. சங்கரரின் தாயார் ஆர்யாம்பாள் சமாதியும் சிறப்புடன் அமைத்துள்ளனர். இங்கு ஒரு கல் விளக்கு நிரந்தரமாக ஒளி வீசியபடி உள்ளது. இது ஒரு அணையா தீபம். ஆன்மிகத்தின் முதல் குருவான ஆதிசங்கரரின் தாய்க்கு இவ்வாலயத்தில் தரப்பட்டுள்ள சிறந்த புகழ் சரியானதுதானே. 1910ம் ஆண்டு ஆதிசங்கரர் அவதரித்த காலடியில் ஒரு கோவில் அமைத்துள்ளனர். இக்கோவிலில் சங்கரரின் உருவத்தை தட்சிணாமூர்த்தியாக வடிவமைத்து பிரதிஷ்டை செய்துள்ளனர். ஆலயத்தில் உள்ள பெரிய மண்டபத்தின் சுவர்களில் சங்கரரின் வாழ்க்கை வரலாற்றை வண்ண ஓவியங்களாகத் தீட்டியுள்ளனர். வாசுதேவபுரம் மகாவிஷ்ணு கோவில் கேரளா மாநிலம் அடுவாஞ்சேரி கிராமத்தில் - வாசுதேவபுரத்தில் பரசுராமர் பிரதிஷ்டை செய்த மகா விஷ்ணு கோவில் உள்ளது. பரசுராமன் பிரதிஷ்டை செய்யும் போது, லட்சுமி தேவியை திரிமால் தன் கையால் ஆலிங்கனம் செய்து கொண்டிருப்பது போல சங்கல்பம் செய்து கொண்டே பிரதிஷ்டை செய்தார். பின் இவ்வாலயத்தை அந்தணர்களிடம் ஒப்படைத்து பூஜை பொறுப்புகளைத் தந்தார். ஆலயப் பொறுப்புகளை பரசுராமரிடமிருந்து பெற்றுக் கொண்ட அந்தணர்கள் பணிகளைச் சிறப்புடன் செய்ததால் லட்சுமி கடாட்சம் பெற்று செல்வந்தர்களாக மிக உயர்ந்த நிலையில் இருந்தனர். பல தலைமுறைகளுக்குப் பின் வந்தவர்கள் கோவில் காரியங்களை உதாசீனப்படுத்தியதால் அனைத்தையும் இழந்து வறுமையில் வாடினர். கோவில் பூஜையும் சரிவர நடைபெறவில்லை. அதனால் ஆலயத்தில் மனித நடமாட்டம் இல்லை. விஷ்ணுவிற்கு பூஜைகள் நடைபெறாத நிலையில், அவருக்கு பணிவிடை செய்ய லட்சுமியே வந்தாள். சாலக்குடி ஆற்றில் பூஜைக்கு நீர் எடுக்க வந்தபோது, அங்கு வந்த வில்வமங்கள சுவாமிகள் லட்சுமி தேவியைக் கண்டு ஆச்சரிய மடைந்து விவரம் கேட்டார். லட்சுமியும் நடந்தவற்றைக் கூறினாள். அதற்கு வில்வமங்கள சுவாமிகள், “தாயே, உங்கள் கருணைப் பார்வையை அந்த பாவிகள் மீது செலுத்தி, அவர்களைத் திருத்தி ஆன்மீக வழியில் ஈடுபடுத்துங்கள்” என மனமுருகி கேட்டுக் கொண்டார். லட்சுமி தேவி, “அட்சய திரிதியை நாள் முதல் எட்டு நாட்களுக்கு நான் அருள்பாலிக்கிறேன்” என உறுதி கூறினாள். அதன்படி இந்த எட்டு நாட்களும் அஷ்ட லட்சுமிகளாக - ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு லட்சுமியாக அருள்பாலிப்பதை அடுவாஞ்சேரி கோவிலில் ஆண்டுதோறும் காணலாம். ஆலய மூலவரான விஷ்ணு பகவான் சதுர்புஜங்களுடன் காட்சி தருகிறார். இவருக்குப் பின் லட்சுமிதேவி விக்ரகம் உள்ளது. அதை தினசரி பார்க்க முடியாது. இந்த எட்டு நாட்களில் அவ்விக்கரகத்தை விஷ்ணுவின் இடபாகத்தில் எழுந்தருளச் செய்யும்போது பார்க்கலாம். முழையூர் காசி, விளங்குளம், திருப்பரங்குன்றம், திரிச் சோற்றுத்துறை, முழையூர் ஆகிய தலங்களுடன் மேலும் ஒருசில தலங்கள் அட்சய திரிதியை தலங்களாகும். இத்தலங்களில் மிக விசேஷமாகக் கருதப்படும் தலம் முழையூர் சிவத்தலமாகும். முழையூர் தலத்தில் வருடந்தோறும் அட்சய திரிதியை நாளன்று ஆயிரக்கணக்கானோர் கூடிக் கொண்டாடுகின்றனர். இத்தல இறைவன் பரசுநாதர்; இறைவி ஞானாம்பிகை இத்தலம் பட்டீஸ்வரம் அருகே அமைந்துள்ளது. திருக்கயிலாயத்தில் இசைக்கப்படும் முழை என்ற இசைக்கருவியின் ஒலி முதன்முதல் பூமியை அடைந்த தலம் இது. எனவே முழையூர் எனப் பெயர் பெற்றது. இந்த ஒலியைக் கேட்பதற்காகவே முப்பத்து முக்கோடி தேவர்கள் அட்சய திரிதியை நாளன்று இத்திருத்தலத்தில் கூடி இவ்வொலி கேட்டு ஆனந்திக்கின்றனர். அட்சய திரிதியை அன்று 3, 12, 21 என்ற எண்ணிக்கை கொண்ட ஜலமதுரம் என்ற இளநீரால் அபிஷேகம் செய்து, புடலங்காய் கலந்த உணவை தானமளி த்தால் அறிந்தோ, அறியாமலோசெய்த தீவினைகளில் இருந்து காக்கப்படுவார்கள். இவ்வாலய லிங்கம் பஞ்சாட்சர பீஜங்களாலான பரசுநாத லிங்கம். கோஷ்ட மூர்த்திகள் இங்கு இறைவன் அருகிலேயே அமைந்துள்ளனர். இங்கு குபேர பூஜை செய்வது சிறப்பு. காசி அன்னபூரணி தன் கையில் உள்ள அட்சய பாத்திரத்தில் இருந்த உணவை சர்வேஸ்வரனுக்கு தானமிட்டு, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட வைத்த நாள் அட்சய திரிதியை நாள்தான். எனவே காசியும் அட்சய திரிதியை தலமாகிறது. விளங்குளம் சனியின் துயரைத் தீர்க்க இறைவன் தோன்றிய தலம் விளங்குளம் என்ற கிராமத்தில் உள்ளது, ஈஸ்வரன் சனியின் ஊனத்தை நீக்கிய நாள் பூச நட்சத்திர சனிக்கிழமையுடன் கூடிய அட்சய திரிதியை நாளில்தான். இத்தலத்தில் அட்சய திரிதியை அன்று அட்சய புரீஸ்வரருக்கும், சனி பகவானுக்கும் சந்தனக்காப்பு செய்து வழிபட்டால் செல்வச் செழிப்பு ஏற்படும். இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் குடும்பக் கஷ்டம், குழப்பம் விலகும். தஞ்சை மாவட்டம், பேராவூரணியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. குபேரலிங்கம் திருவானைக்கா கோவிலில் கிழக்கு வாசல் பகுதியில் உள்ளது குபேரலிங்கம். இந்த லிங்கத்தை அட்சய திரிதியை நாளன்று பால், தேன், சந்தன அபிஷேகம் செய்துவழிபாட்டால் செல்வச் செழிப்பு ஏற்பட்டு, வறுமை தொலைந்து வளமாக வாழலாம். இத்தலத்தில் ஆடை தானமும் அன்னதானமும் செய்வது சிறப்பு. திருக்கோளூர் நவதிருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூர், தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி அருகில் உள்ளது. இத்தல பெருமாள் மரக்கலாலால் குபேரனுக்கு செல்வம் கொடுத்தாராம். பின் அந்த மரக்காலை தலைக்கு அடியில் வைத்தபடி சயன கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு வைத்த மாநிதி என்றும், செல்வம் அளித்த பெருமாள் என்றும் பெயர். இவரை அட்சய திரிதியை நாளில் தரிசித்தால் வாழ்வில் வளம்சேரும். சுவர்ண கெளரி விரதம் கர்நாடக மாநிலப் பெண்கள் அட்சய திரிதியை அன்று சுவர்ண கெளரி விரதம் கடைப்பிடிப்பர். அன்று பார்வதி பிறந்த வீட்டுக்கு வருவதாகவும். மறுநாள் அன்னைக்குப் பாதுகாப்பாக விநாயகரும் வருவதாகவும் நம்பப்படுகிறது. சுமங்கலிப் பெண்கள் கோதுமையில் இனிப்புக்கள் செய்து படைத்து பிரசாதமாக அனைவருக்கும் கொடுத்து ஆடை தானமும் செய்வார்கள். அட்சய திரிதியை தான பலன்கள் தயிர்சாத தானம் : ஆயுள் கூடும், இனிப்புப் பண்ட தானம் - திருமணத் தடையை விலக்கும். உணவு தானிய தானம் - விபத்து, அகால மரணத்தை தடுக்கும். கால்நடை தீவன தானம் - வாழ்வை வளமாக்கும். முன்னோரிக்குத் தர்ப்பணம் செய்தால் பாபவிமோசனம் கிட்டும். லட்சுமி பூஜை செய்வதால் அஷ்ட ஐஸ்வர்யம் கிட்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812