திங்கள், 28 ஏப்ரல், 2014

மலேசிய முயர்மலை நாகமலை அம்மன் ஆலயம்

kலேசியாவின் ஜோகூர் மாகாணத்தில் உள்ள முயர் மலை பகுதியில் உள்ள அடர்ந்த வனத்தில் ஸ்ரீ நாகமலை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. 1972 ஆம் ஆண்டு கோபால மேனன் என்பவரின் கனவில் ஸ்ரீசக்ர வடிவில் தோன்றிய நாக அம்மன் மலை அருகே உள்ள வனப் பகுதியில் நாக அம்மனுக்கு ஒரு ஆலயம் அமைக்குமாறு உத்தரவிட்டாள். இந்த கனவைத் தொடர்ந்து அம்மன் கனவில் கூறிய இடத்திற்கு சென்ற கோபால மேனன் அவ்விடத்தை சுத்தம் செய்து பாதை அமைத்தார். அங்கு பல்வேறு பாம்பு புற்றுகளை கண்டார். இறுதியில் ஒரு பாம்பு புற்றிற்கு அடியில் வட்டவடிவ கருங்கல்லை கண்டார். அது பஞ்ச முகங்களைக் கொண்ட நாகத்தின் தோற்றத்தை ஒத்திருந்தது. இதனைக் கண்ட கோபால மேனன் அந்த இடத்திலேயே அமர்ந்து தியானத்தில் மூழ்கினார். அப்போது அவ்விடத்தில் மிகுந்த அமைதியையும். பேரானந்தத்தையும் கோபால மேனன் உணர்ந்தார். அப்போது ஒலித்த அசரீரியில் கோபால மேனன் நாக அம்மன் வழிபாடு செய்த பக்தர்களின் வம்சாவளியில் தோன்றியவர் எனவும், அவ்விடத்தில் நாக அம்மனுக்கு ஆலயம் அமைத்து பராமரிக்கும்படி தெரிவித்தது. மற்றொரு முறை ஏற்பட்ட அனுபவத்தின் போது மலை அடிவாரத்தில் கிணறு ஒன்று தோன்றுமாறு நாக அம்மன் உத்தரவிட்டுள்ளாள். அதன்படி கிணறு தோன்றிய கோபால மேனன், அங்கு சித்தர் ஒருவர் தேன் கூட்டில் தவம் செய்து வருவதை கண்டார். இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இக்கிணற்றில் சுத்தம் செய்து கொண்ட பின்னரே ஆலயத்திற்கு வருகின்றனர். இக்கோயிலைச் சுற்றி ஏராளமான பாம்பு புற்றுகளும் அதில் 7 வகையான நாகங்களும் உலாவுவதை கோபால மேனன் மட்டுமின்றி பக்தர்கள் பலரும் கண்டுள்ளனர். மேலும் நாககன்னி ஒலி, நாகங்கள் புற்றை விட்டு வெளிவரும் உள்ளிட்ட அபூர்வ ஓசைகளையும் பக்தர்கள் கேட்டுள்ளனர். ஒருமுறை கோபால மேனன் பூஜைக்காக தேங்காய் உடைத்த போது அது யானை தந்தம் வடிவமாக காட்சி அளித்தது. அதன் பின்னர் நாக அம்மன்னின் உத்தரவின் பேரில் மலை அடிவாரத்தில் விநாயகர் சன்னதி ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த விநாயகரை வழிபட்ட பின்னரே பக்தர்கள் மலை ஏற துவங்குகின்றனர். கோபால மேனன் மூலம் இக்கோயிலுக்கு வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகளையும் நாக அம்மன் தெரிவித்துள்ளார். அதன்படி இரவு 7 மணிக்கு மேல் பக்தர்கள் யாரும் மலை ஏற அனுமதிக்கப்படுவதில்லை. அச்சமயத்தில் நாகங்கள் மனித வடிவில் உலா வருவதாக நம்பப்படுகிறது. மேலும் மது, மாமிசம், காலணிகள் ஆகியவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் காலணிகள் இல்லாமல் தான் மலை ஏறி செல்கின்றனர். இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற பசும்பால், மல்லிகை, பூ, பாயாசம் அல்லது சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812