செவ்வாய், 12 ஜூன், 2018

தமிழ் கலைஞா்கள் பலருக்கு களம் அமைத்து கொடுத்த "கலியுக காலம்" இது

கே. எஸ். பாலச்சந்திரன் உள்ளிட்ட பல வானொலி கலைஞர்கள் திடைப்படத்துறையோடு முதல் தொடர்பை எற்படுத்திக்கொண்டது கலியுக காலம் என்ற மொழிமாற்றப்படத்தின் மூலமாகததான்.

"கலியுக காலய" என்ற சிங்களப்படத்தை T.அர்ஜுனா என்ற தமிழர் தயாரித்தார். இவர் எற்கெனவே "வசந்தயே தவசக்" என்ற சிங்களப்படத்தை தயாரித்து இயக்கியவர். அந்தப்படத்திற்காக சிறந்த படம் உட்பட பல விருதுகளைப் பெற்றவர். கலியக காலய படத்தில் ரொனி ரணசிங்க, நீற்றா பெர்னாண்டோ போன்ற நடிகர்கள் நடித்தனா்.( இந்த நடிகை பின்னாளில் கனடாவிற்கு குடிபெயர்ந்து, மொன்றியேல் மருத்துவமனையில் வரவேற்புபணியாளராக வேலை பார்த்தவர்) சிங்களப் படத்தை திரையிடுவதற்கு முன்னரே தமிழில் மொழிமாற்றம் செய்துவிட்டு இரண்டு மொழிகளிலும் வெளியிடலாம் என்று ஒரு எண்ணம் அவருக்கு வந்திருக்கவேண்டும்.



தமிழில் குரல் என்றவுடன் இலங்கை வானொலிதானே நினைவுக்கு வரும். அப்போது வானொலி நாடகத் தயாரிப்பாளராக இருந்த கே.எம்.வாசகரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவர் தன்னுடைய வானொலி நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்த ஒரு நடிகர் பட்டாளத்தை அழைத்துக்கொண்டு "சிலோன் ஸ்டூடியோ" வுக்குப் போனார்.

அறிவிப்பாளர் ஜோக்கிம் பெர்னாண்டோ கதாநாயகன் ரொனி ரணசிங்கவுக்கு குரல் கொடுக்க, "தணியாதாகம்" விஜயாள் பீற்றர் கதாநாயகிக்கு (நீற்றா பெர்னாண்டோ) பின்னணி குரல் கொடுக்க ஏற்பாடாகியது. இப்படியே ராம்தாஸ், ராஜகோபால், செல்வசேகரன், சுப்புலக்சுமி காசிநாதன் ஆகியோருடன் கே. எஸ். பாலச்சந்திரனும் குரல் கொடுத்தார்.

அக்காலத்தில் விஜய் கொரியா என்றொரு பிரபல ஆங்கில அறிவிப்பாளர் இலங்கை வானொலியில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தார். (பின்னாளில் இலங்கை ஒலிப்ரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகமாக இருந்தவர்) அவருக்கு நடிக்கும் ஆசை ஏன் வந்ததோ தெரியவில்லை. அர்ஜுனாவின் நண்பராக இருக்கவேண்டும். அவருக்கு வில்லன் வேடம் கொடுக்கப்பட்டது. பீ.எஸ்.வீரப்பாவின் "ஹஹஹா" சிரிப்பு ஒன்றும் இல்லை. ஒரு சாதா வில்லன். அவருக்குத்தான் கே. எஸ். பாலச்சந்திரன் பின்னணிக் குரல் கொடுத்தார்.

ஈழத்து இரத்தினம் தமிழ் வசனங்களையும் அத்தனை பாடல்களையும் எழுதினார். தமிழ், சிங்களப்படங்களுக்கான இசையமைப்பாளராக "சண்" அறிமுகமானார். தற்போது நோர்வேயில் வசிக்கும் "சண்" 5 பாடல்களுக்கு இசையமைத்தார். "அன்புள்ளம் ஒன்று சேர்ந்த நல்ல நாள்.. இனிவரும் நாளெல்லாம் இன்ப நாள்' என்றொரு இனிமையான பாட்டு இருந்ததாக கூறப்படுகிறது. எம்.ஏ.குலசீலநாதன், சுஜாதா என்று பலரும் பாடினார்கள். அமுதன் அண்ணாமலை ஆரம்பப் பாடலைப் பாடி அறிமுகமானார். கோணேஷ் பரமேஸ் குழுவின் எம்.பி.பரமேஸ் தனது முதலாவது திரைப்படப்பாடலை பாடியது பற்றி இவ்வாறு கூறினார்.

"கலியுககாலம் மனம்போல் வாழ்வு இனியொரு குறையில்லை’’ என்னும் பாடலை இசையமைப்பாளர் 'சண்' கேட்டதற்கமைய நான் பாடியிருந்தேன். இதனையே கே.எஸ்.ராஜா இப்பட விளம்பரத்திற்கு பயன்படுத்தியிருந்தார். இந்தப் பாடலுக்காகவே இந்தப் படம் சிறப்பாக ஓடியது. திருகோணமலையில் மாத்திரம் 2 வாரங்கள் இப்படம் ஓடியது"

சிங்களப்படம் வெளியிடப்படுவதற்கு முன்ன்ரே வெள்ளவத்தை
"சவோய்" தியேட்டரில்1974 ஏப்ரல் 14ந் திகதி
"கலியுகாலம்" திரையிடப்பட்டது.

இது பற்றி கே. எஸ். பாலச்சந்திரன் கூறியது, எங்கள் குரல் பெரிய திரையில் ஒலிப்பதை கேட்க ஆவலுடன் நாங்கள்தான் முண்டியடித்துப் போனோம். மற்றப்படி தியேட்டர் ஈயோட்டிக் கொண்டிருந்தது. ஒரு வாரம் ஓடியதே பெரிய காரியம். படத்தை இயக்கி, தயாரித்த அர்ஜுனா ஒரு ஆங்கிலப்படப்பிரியராக இருக்கவேண்டும். ஆங்கிலப்படப் பாணியில் Light Comedy படமாக எடுத்திருந்தார். சென்சார் கத்திரிக்கோல் பாவிக்கவேண்டிய காட்சிகளும் இருந்தன.

1975 மார்ச் மாதம் 3ந்திகதி ஒரிஜினல் படமான " கலியுகாலய"(சிங்களப் படம்) வெளியானது. ஆனால் அதற்குள் இது தமிழ்ப்படத்தை "டப்" பண்ணியது என்று யாரோ கதையைக் கட்டிவிட சிங்கள்ப்படமும் ஓடாமல் விட்டுவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812