திங்கள், 25 ஜூன், 2018

ஆனித் திருமஞ்சனம்



ஆனி மாதத்திலும் மார்கழி மாதத்திலும் வரும் நடராஜர் தரிசனத்தைக் கண்டுகளிப்பவர்கள் பகல் முழுவதும் விரதம் இருந்து சிவன் சன்னிதியில் சிவபுராணம் பாடவேண்டும்.


சிவபெருமானுக்குரிய இரண்டு தரிசனங்களில் முதல் தரிசனம் ஆனி மாதத்திலும் இரண்டாவது தரிசனம் மார்கழி மாதத்திலும் நடைபெறும். மிதுனம் நவக்கிரகங்களில் புதனுக்கு சொந்த வீடாகும். புதன் கல்விக்குரிய கிரகமாக கருதப்படுகிறது. எனவே கல்வியில் தேர்ச்சி பெற மாணவச் செல்வங்கள் இம்மாதத்தில் நடைபெறும் இதுபோன்ற விழாக்களில் கலந்துகொண்டு வழிபட்டால் முதன்மை பெற வழிவகுக்கும்.

சிவராத்திரி அன்று சிவனை நாம் வழிபடும் போது இரவு முழுவதும் விழித்திருந்து சிவபுராணம் பாடி சிவாலயங்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். ஆனால் ஆனி மாதத்திலும் மார்கழி மாதத்திலும் வரும் நடராஜர் தரிசனத்தைக் கண்டுகளிப்பவர்கள் பகல் முழுவதும் விரதம் இருந்து சிவனுக்குரிய அபிஷேக ஆராதனைகளைக் கண்டுகளிப்பதோடு நடராஜப் பெருமானையும் தரிசித்து அவர் சன்னிதியில் சிவபுராணம் பாடவேண்டும்.

‘திருவாசகத்திற்கு உருகார், ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்பது பழமொழி. அந்த அடிப்படையில் நாம் இறைவன் சன்னிதியில் திருவாசகம் பாடினால் அவர் தரிசனம் நமக்கு கிடைப்பதோடு மட்டுமல்லாமல் கரிசனத்தோடு வந்து காட்சி கொடுத்து அருள் வழங்குவார் என்பது நம்பிக்கை.

அன்றைய தினம் சிவபிரானுக்கு நடைபெறும் அபிஷேகத்தில் பால் அபிஷேகம் பார்த்தால் நான்கு திசைகளில் இருந்தும் நல்ல தகவல் வந்துகொண்டே இருக்கும். பன்னீர் அபிஷேகம் பார்த்தால் எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும். எனவே அந்த அற்புத தரிசனம் தரும் ஆனி மாதம் ஒரு அபூர்வ மாதமாகும். அகிலத்து மாந்தர்களுக்கு அனைத்து நலன்களையும் தரும் வழிபாட்டிற்குரிய மாதம் இதுவாகும். மனிதப்பிறவி எடுத்ததன் பயனே இறைவனுடைய அழகை கண்ணார காண்பதற்காகவே என்கிறார்கள் சான்றோர்கள். அந்த இறைவன் தரிசனம் தரும் நாளில் நாம் உள்ளன்போடு வழிபட்டு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812