வெள்ளி, 17 செப்டம்பர், 2021

வேலையே வேலனாக வணங்கும் ஊர் நல்லுார்

தமிழும் சைவமும் தழைத்தோங்கி வளர்ந்த ஊர் யாழ்ப்பாணம். இந்த யாழ் மண்ணில் உள்ள ஒரு நல்லுார். இந்த நல்லுாரிலே கோயில் கொண்டு அருள்பாலிப்பவன் கந்தப் பெருமான். இந்த ஆலயம் ஆரியச் சக்கரவர்த்தியின் முதலமைச்சராக விளங்கிய புவனேகபாகு என்பவனால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னுமொரு சாரர் இவ்வாலயம் யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றிய செண்பகப் பெருமாள் என்னும் புவனேக வாகுவினால் கட்டப்பட்டதென்பர். இவ்வாலயம் 1454ஆம் ஆண்டு கட்டப்பட்டள்ளதாகவும் கூறப்படுகிறது. எது எப்படி இருப்பினும் புவனேகவாகு என்ற பெயர் மகோற்சவங்களில் ஆலயக் கட்டியத்தில் கூறப்பட்டு வரும் வழக்கம் இன்றும் உள்ளது. யாழ்ப்பாணம் 400 ஆண்டுகள் வரை சைவத் தமிழரசர்களால் ஆளப்பட்டுவந்தது. யாழ்ப்பாண அரசு -1621ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி போர்த்துக்கேயரால் கைப்பற்றப்பட்டது. நல்லுார் ஆலயம் அழிக்கப்பட்டது. போர்த்துக்கேயரிடமிருந்த யாழ்ப்பாணம் 1958ஆம் ஆண்டு ஜுன் மாதம் 21ஆம் திகதி ஒல்லாந்தர் கைக்கு மாறியது. ஒல்லாந்தர்கள் தங்கள் மத வணக்கத்திற்குரிய தேவாலயம் ஒன்றைப் இந்த கந்தசுவாமி கோவில் இருந்த இடத்தில் கட்டினார்கள். நல்லுார் கோயில் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தைச் சுற்றி வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய மூன்று திசைகளிலும் பெரிய கோபுரங்கள் காணப்படுகின்றன. இவ்வாலயத்தில் உள்ள கிழக்கு கோபுரம் ஐந்து நிலைகளுடனும், தெற்கு மற்றும் வடக்கு கோபுரங்கள் ஏழு நிலைகளுடனும் காட்சியளிக்கின்றன. தெற்கு கோபுரத்தின் அருகில் திருக்குளம் அமைந்திருக்கிறது. கிழக்கு கோபுரத்தின் முன்பு, அழகிய வேலைப்பாடுகளைக்கொண்ட தோரண வளைவு ஒன்றும் உள்ளது. இந்தக் கோயிலில் வியப்புக்குரிய செய்தி ஒன்றும் உள்ளது. கந்தசுவாமி கோயிலின் கருவறையில் மூலவரான முருகப்பெருமானின் திருவுருவம் இல்லை. இவ்வாலயத்தின் கருவறையில் முருகப்பெருமானின் ஆயுதமான வேல்தான் மூலவராக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்க முருகப்பெருமான் வேலை வைத்து திருவுளம் செய்துள்ளான். இந்தக் கோயிலில் வழிபடு தெய்வமாக வேலைத் தான் எழுந்தருளச் செய்திருக்கிறார்கள். திருவிழாக்களின்போது இந்த 'வேல்' வடிவத்தையே அலங்கரித்து வாகனங்களில் எழுந்தருளச் செய்து வீதி வழியாக கொண்டு வருகின்றனர். ஆலய பிராகாரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானை, குழந்தை கிருஷ்ணன், சூரியன், சூலம் ஆகிய சந்நிதிகளும் அமைந்துள்ளன. மூலவர் சந்நிதிக்குப் பின்புறம் உற்சவ மூர்த்திகள் உள்ளனர். ஆறுமுக சுவாமியின் உற்சவ மூர்த்தம் மிகவும் அழகாக அமைந்திருக்கிறது. வருடம்தோறும் ஆடி, ஆவணி மாதங்களில் 27 நாட்கள் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆடி மாதம் அமாவாசைக்கு அடுத்த 6-ம் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழா, ஆவணி மாதம் அமாவாசையன்று தீர்த்தவாரியுடன் நிறைவு பெறும். 24-ம் நாள் தேரோட்டம் நடைபெற்று, 25-ம் நாள் தீர்த்தத் திருவிழா நடைபெறும். வருடாந்தம் நடைபெறும் இவ்வாலய உற்சவக் காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடுவார்கள். இன்று இவ் உற்சவத்தின் தீர்த்தத் திருவிழா நடைபெறுகிறது. இதற்கு நாட்டின் நாலா பாகங்களிலிருந்தும் வௌிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் படை எடுத்து வருவதுண்டு. கே. ஈஸ்வரலிங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812