செவ்வாய், 17 ஜூலை, 2018

கோடி புண்ணியம் தேடி ஆடி








ஒரு வருடத்தின் மாதங்கள் இரு அயனங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயணப் புண்ணிய காலம் எனவும், தை முதல் ஆனி வரை உத்திராயணம் எனவும் வழங்கப்படுகிறது. ஆடி மாதம் கற்கடக மாதம் என்று கூறப்படுகிறது. இந்த மாதத்தில் ஸ்ரீ சூரிய பகவானின் தேரானது வடக்கிலிருந்து, தெற்கு நோக்கி பயணிக்கத் தொடங்குகிறது. இந்தக் காலத்தில், பகல் பொழுது குறைவாகவும், இரவுப் பொழுது நீண்டும் இருக்கும்.
ஆடி மாதத்தில் ஸ்ரீ சூரிய பகவான் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். கடக ராசி என்பது ஸ்ரீ சந்திர பகவானின் ஆட்சி வீடாகும். சிவ அம்சமான சூரியன், சக்தி அம்சமான சந்திரனின் ஆட்சி கிரகத்தில் சஞ்சாரம் செய்கிறார். அதனால் சந்திரனின் ஆளுமை கூடுகிறது. சிவனை விட சக்திக்கே வல்லமை அதிகமாக பரிமளிக்கிறது. ஆஷாட மாதம் என்று கூறப்படும் இந்த ஆடி மாதம் சக்தி மாதமாக வழிபடப் பட வேண்டும் என்று ஈஸ்வரன், ஈஸ்வரிக்கு அனுக்கிரகம் செய்தார். அதன் காரணமாகத் தான் ஆடி மாதத்தில் அம்மனுக்கு உகந்த வேப்பிலை, எலுமிச்சம் பழம், கூழ் ஆகியவை அம்மனுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன. இந்த மாதத்தில் பிராண வாயுவின் சக்தி வழக்கத்தை விட கூடுதலாகவே இருக்குமாம்.
இவைகளை உபயோகப்படுத்துவதில், ஒரு முக்கியமான விஞ்ஞான ரீதியான காரணமும் உண்டு. இந்த நாட்களில் உஷ்ணம் கூடி இருக்கும். அம்மனுக்கு படைத்த ஆடிக்கூழை சாப்பிடும் பொழுது, கூழானது, உஷ்ணத்தைக் குறைத்து, உடலை சீரான வெப்ப நிலையில் வைக்கும். எலுமிச்சம் பழத்திற்கு நோய் எதிா்ப்பு சக்தி உண்டு. வேப்பிலையைப்பற்றி கூறவே வேண்டாம். தீய சக்திகளையும், உடலுக்குக் கேடு விளைவிக்கும் பக்டீரியாக்களையும் அழிக்கும் சக்தி அந்த மருத்துவ குணம் கொண்ட இலைகளுக்கு உண்டு.
பெண்கள், ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி ஆடி ஞாயிறு ஆகிய நாட்களில் விரதம் இருந்தும், வேப்பிலை ஆடை தரித்தும், அலகு குத்தியும், பூ மிதி (தீ மிதி) விழா எடுத்தும் தங்களின் கோரிக்கையை அம்மனிடம் விண்ணப்பித்துக் கொள்கிறார்கள். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அலகு குத்தலின் வலியோ, பூ மிதியின் பொழுது நெருப்பின் உஷ்ணமோ தெரியாமல் ஆதி பராசக்தி காத்தருள்கிறாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812