செயலமர்வு
திருமூலரால் ‘சிவபூமி’ எனப் போற்றப்பட்ட இலங்கைத் திருநாட்டிலே கொழும்பு மாநகரிலே இன்று தமிழர்கள் செறிந்து வாழும் ஒரு பகுதியிலே ஐரோப்பியரின் வருகையால் நலிவுற்றிருந்த சைவ சமயத்தை ஆங்கிலேயர் காலத்தில் மேலும் நலிவடையச் செய்ய விடாது தடுப்பதற்கு தோற்றுவிக்கப்பட்ட ஒரு அமைப்பு கொழும்பு விவேகானந்த சபை.
இது 1902.07.13 ஆம் திகதி அனுஷ நட்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஸ்தாபிக்கப்பட்டது. அன்று ஐரோப்பியரால் இலங்கையில் சைவ சமயம் நலிவுற்றிருந்தது. ஆனால் இன்று இலங்கைத் திருநாடு முழுவதிலும் மட்டுமன்றி ஐரோப்பியாவிலும் கொழும்பு விவேகானந்த சபையின் சைவசமய பாடப் பரீட்சை நடத்தப்படும் அளவுக்கு புகழ் பெற்றிருப்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.
அன்று இலங்கையில் சைவ சமயத்தை நலியவைத்த ஐரோப்பாவிலேயே இன்று சைவசமயம் வளம்பெற்று வருவதைப் பார்த்தால் சைவ சமயத்தின் சிறப்பு புலப்படும்.
800 பாடசாலைகளில் பரீட்சை
கொழும்பு விவேகானந்த சபை முதன் முதலாக 1930.02.15 ஆம் திகதி இப்பரீட்சையை நடத்த ஆரம்பித்தது. 1931 ஆம் ஆண்டு 80 பாடசாலைகளில் இப்பரீட்சை நடத்தப்பட்டது. இன்று 700, 800 பாடசாலைகளில் இப்பரீட்சை நடத்தப்படுகிறது. இலங்கை முழுவதிலும் உள்ள தமிழ்மொழி மூல பாடசாலைகளில் மட்டுமன்றி ஐரோப்பியாவிலுள்ள கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் இப்பரீட்சை நடத்தப்படுகிறது.
இந்த விவேகானந்தா சபையினால் நடத்தப்படும் அகில இலங்கை சைவசமய பாடப் பரீட்சைக்குரிய பாடத்திட்டங்களை ஆசிரியர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கான கருத்தரங்கும் செயலமர்வும் கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5 மணி வரை விவேகானந்த சபையில் நடத்தப்பட்டது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் இருக்கின்ற தமிழ் மொழி மூல பாடசாலைகளில் சைவசமயம் கற்பிக்கும் ஆசிரியர்களும் அறநெறி ஆசிரியர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடத்தப்பட்ட இந்த செயலமர்வு தமிழ் மரபுப்படி மங்கள விளக்கேற்றலுடனும் தேவாரத்துடனும் ஆரம்பமானது.
விவேகானந்த சபை செயலாளர் க. விவேகானந்தன்
சபையின் பொதுச் செயலாளர் க. விவேகானந்தன் வரவேற்புரை நிகழ்த்த சபையின்
தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஏ. ஆர். சுரேந்திரன் தலைமையுரை நிகழ்த்தினார். செயலாளர் தமது உரையில் பரீட்சை ஆரம்பித்த வரவாற்றைக் கூறியதோடு சங்கீத ஆசிரிய ஆலோசகரான சங்கீத கலாவித்தகர், தேவாரங்கள் 7ம் நூற்றாண்டில் பாடப் பட்டதாகவும் கர்நாடக இசை 16ம் நூற்றாண்டில் தோற்றம் பெற்றதாகவும் பஜனை, கீர்த்தனைகள் 17ம் நூற்றாண்டில் பாடப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
தேசிய கல்வி நிறுவகத்தின் ஆலேசாகர் குமாரசாமி சோமசுந்தரம்
தேவாரத் திருவாசகங்கள் உரிய பண்ணோடு பாடப்பட வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தி அவ்வப்போது பதிகங்களை பண்ணோடு பாடி காட்டி பண்ணிசை விளக்கம் அளித்தார். அவரைத் தொடர்ந்து மகரகம தேசிய கல்வி நிறுவகத்தின் ஆலேசாகர் குமாரசாமி சோமசுந்தரம் மெய்கண்ட சாஸ்திரம் திருவருட் பயன் பற்றி விளக்கமளித்தார்.
மெய்யியல் என்பது தத்துவம், மெய்பொருள் காண்பது அறிவு, மெய்யியலின் 3 உண்மைப் பொருள்கள் பதி, பசு, பாசம், என மெய்கண்ட சாஸ்திரத்தைப் பற்றி மிகவும் எளிய நடையில் விளக்கமளித்தார் இவர். இந்த செயலமர்வு நடத்துவதற்குரிய நோக்கம், விவேகானந்த சபை வருடாந்தம் நடத்தும் சைவசமய பாடப் பரீட்சைக்குரிய வினாக்கள் அகில இலங்கை இந்து மன்றத்தின் ‘இந்து மக்களுக்கு ஓர் கையேடு’ ஆறுமுகநாவலரின் ‘சைவ வினா விடை’, ‘திருக்குறள்’ ஆகிய நூல்களில் உள்ள சில பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதை அறிவுறுத்துவதற்காகவே ஆகும்.
சைவப்புலவர் எஸ். செல்லத்துரை
கலாபூஷணம் சைவப்புலவர் எஸ். செல்லத்துரை சைவ வினாவிடை நூலில் இருந்து எடுக்கப்பட்ட பகுதிகளை சுட்டிகாட்டியதோடு அந்நூலில் இடம்பிடித்துள்ள சில சொற்பதங்களை எடுத்தியம்பி விளக்கமளித்தார்.
தேவாரம், புராணம் என்பன தமிழ்வேத இயலுக்குள் அடங்குவதாகவும் மலசல மோசனம் என்றால் மலசலம் கழித்தல் என்றும், செளசம் என்றால் கழுவுதல் என்றும், தந்த சுத்தி என்றால் பல் தீட்டுதல் என்றும் இவ்வாறாக இன்னொரன்ன பதங்களையும் பயன்படுத்தி விளக்கமளித்தார்.
இந்துக் கல்லூரி அதிபர் செல்வி பு. யோ. முருகேசு
கொழும்பு முகத்துவாரம் இந்துக் கல்லூரி அதிபர் செல்வி பு. யோ. முருகேசு ‘திருக்குறள் காட்டும் நெறி’ என்ற தொனிப்பொருளை மையமாக வைத்து விளக்கமளித்ததுடன் திருக்குறளில் எந்தெந்த வகுப்புக்கு எந்தெந்தப் பகுதி எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெளிவுபடுத்தினார்.
சங்க மருவிய காலத்தில் தோற்றம் பெற்ற திருக்குறளை முதன் முதலில் மொழிபெயர்த்தவர் யார், இது எந்தெந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறித்தெல்லாம் விபரம் அளித்தார்.
திருமதி வசந்தா வைத்தியநாதன்
இந்த செயலமர்வின் பிற்பகல் அமர்வுகள் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் செயலாளர் சட்டத்தரணி கந்தையா நீலகண்டனின் தலைமையில் நடைபெற்றது. இதில் அருள்மொழி அரசி வித்துவான் திருமதி வசந்தா வைத்தியநாதன் ‘நமசிவாய’ என்ற பஞ்சாட்சரத்தின் ஒவ்வொரு எழுத்திலும் பொதிந்துள்ள பொருளை நயம்பட எடுத்துரைத்தார்.
ந என்பது திரோதனம் மறைப்பு என்றும் ம என்பது மலகம் குற்றம் என்றும் சி என்பது சிவம் என்றும் வா என்பது யா அருட்சக்தி என்றும் என்பது ஆன்மா என்றும் குறிப்பிட்டார். தூல பஞ்சாட்சரம், சூட்சும பஞ்சாட்சரம், காரண பஞ்சாட்சரம், முத்தி பஞ்சாட்சரம், மகா காரண பஞ்சாட்சரம் என பஞ்சாட்சரத்தை வகைப்படுத்தி வேறுபடுத்தி (சிவாயநம, சிவசிவ, சிவாயசிவ...) கூறுவது எவ்வாறு? யார் யார் இதை கூறலாம் என்பது குறித்தெல்லாம் விளக்கமளித்தார்.
செல்லையா நவநீதகுமார்
திருவாவடுதுறை ஆதீன சமயப் பரப்புனர் செல்லையா நவநீதகுமார் கட்டையிலே போகும் போது செய்ய வேண்டிய அபரக்கிரிகைகளை பற்றி அழகுற தெளிவுபடுத்தினார்.
இந்த அபரக் கிரியைகளை செய்கின்ற புரோகிதருக்கு என்னென்ன கொடுக்க வேண்டும். பெற்றோர் இறந்தால் அவர்களுக்கு உரிய இறுதிக் கிரிகைகளை செய்கின்ற பிள்ளைகள் தீட்சை பெற்றிருக்க வேண்டும். அப்போது தான் அந்த அபரக் கிரியையில் பயன் உண்டு என்றெல்லாம் இவர் தெளிவுபடுத்தினார்.
பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன்
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசனின் தலைமையில் ஐயந் தெளிதல் நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் ஆசிரியர்களின் சந்தேகங்கள் பலவற்றுக்கு பதில் அளிக்கப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டது. விவேகானந்த சபையின் உப தலைவர் க. ஜெகதீசனின் நன்றியுரையுடன் செயலமர்வு நிறைவுபெற்றது.
திருக்குறள்
விவேகானந்த சபை நடத்தும் சைவ சமய பரீட்சைக்கு 5ம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை திருக்குறளில் அறத்துப் பாலில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
5, 6, 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் ஆகிய பகுதிகளிலுள்ள 40 குறள்களும் இதற்கு சேர்க்கப்பட்டுள்ளன.
8ம், 9ம் வகுப்புகளுக்கு இனியவை கூறல், செந்நன்றி அறிதல், நடுவு நிலைமை, அடக்கம் உடைமை, ஒழுக்கம் உடைமை, பிறனில் விழையாமை ஆகிய பகுதிகளிலுள்ள 60 குறட்பாக்களும் இதற்கு சேர்க்கப்பட்டுள்ளன.
10ம், 11ம் வகுப்புகளுக்கு பொறையுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில் சொல்லாமை, தீவினையச்சம், ஒப்புரவறிதல், ஈகை ஆகிய பகுதிகளிலுள்ள 80 குறள்களும் இந்த பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
சைவ வினா விடை
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் சைவ வினா விடை நூலில் இருந்து 4ஆம், 5ஆம், 6ஆம் வகுப்புகளுக்கு கடவுள் இயல், புண்ணிய பாவ இயல், விபூதி இயல், ஆகியவையும்,
7ஆம், 8ஆம், 9ஆம் வகுப்புகளுக்கு சிவமூல மந்திர இயல், தமிழ், வேத இயல், ஆகியவையும் 10ம், 11ம் வகுப்புகளுக்கு நித்திய கரும இயல், மலசலமோசனம் நீங்கலாக சிவாலிய தரிசன இயல், தோத்திரங்கள் என்பனவும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்து மக்களுக்கு கையேடு
அதனைவிட அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ‘இந்து மக்களுக்கு கையேடு’ என்ற நூலிலிருந்து 3ம், 4ம், 5ம் வகுப்புகளுக்கு முதலாம், இரண்டாம் இயலும் 6ம் தரம் முதல் 9ம் தரம் வரை மூன்றாம், நான்காம், ஐந்தாம் இயல்களும் 10ம், 11ம் தரங்களுக்கு ஆறாம், ஏழாம், எட்டாம் இயல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
பங்குபற்றியோர்
புவக்பிட்டிய சீ. சீ. தமிழ் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த மயில்வாகனன் ஜெயசுதன், செல்வி செல்வநாயகம் சுதர்ஷனி, றைகம் கீழ்பிரிவு தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த தங்கராஜ் கல்யாணி, நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தைச் சேர்ந்த செல்வி தர்மிலா ஹரிதேவ், செல்வி அச்சுதன் அனிசியா லோஜினி, வத்தளை றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த புஷ்பவதி மாணி, தந்தை செல்வா அறநெறி பாடசாலையைச் சேர்ந்த சிவலிங்கம் சிவச்செல்வி, செல்வி தர்சனி வேல்சாமி, விசுவலிங்கம் சோமசுந்தரம், கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயம் சுகந்தி விநாயக மூர்த்தி, களனி அல் அஷ்ரப் மகாவித்தியாலயத்தைச் §சேர்ந்த ததருமதி தேவகி நெல்சன், வத்தளை புனித அன்னம்மாள் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த திருமதி இராஜநாயகி, திருமதி எஸ். ஸ்ரீதரன் ஷசிரஜனி, கொழும்பு வெஸ்லி கல்லூரி திருமதி லோகிதா சுதாகரன், கொழும்பு புனித அன்னம்மாள் மகளிர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த திருமதி சுவர்ணாங்கி சுகர்தன் திருமதி கெளஷியா ஜெயகாந்தன், கொட்டாஞ்சேனை வரதராஜ விநாயகர் அறநெறி பாடசாலை செல்வி சந்திரபவானி கோவிந்தசாமி, திருமதி குஞ்சரா நிமலன், வணாத்தமுல்ல றோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலை செல்வி ஜெ. செல்லத்துரை, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி திருமதி செல்வராணி ஆனந்தசிவம், திருமதி தேவசேனாஞான பண்டிதன், சைவ முன்னேற்றச் சங்கம் திருமதி ரதினி பிரதீப்குமார், செல்வி சுமதி பத்மநாதன் கொழும்பு விவேகானந்த சபை திருமதி அனுராதா பாக்கியராஜா ஐங்கரன் கிருஷ்ணசாமி, செல்வி பவானி சண்முகலிங்கம், செல்வி ரேணுகா அருணகிரிநாதன், ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான அறநெறிப் பாடசாலை செல்வி பிரியதர்ஷனி ராஜலிங்கம், திருமதி மகாலெட்சுமி நட்ராஜ், பம்பலப்பிட்டி திருக்குடும்பக் கன்னியர் மடம் செல்வி வாஹினி ஸ்ரீதரன், வத்தளை ஸ்ரீ முத்து குமாரன் அறநெறி பாடசாலை திருமதி சந்திராதேவி அருளானந்தம்,
வெள்ளவத்தை சாந்த கிளேயர் கல்லூரி
வடகொழும்பு இந்து பரிபாலன சபை திருமதி யோகேஸ்வரி மாணிக்கவாசகர், கொழும்பு றோயல் கல்லூரி சபாரத்தினம் சிவகுமார், ஹுனுப்பிட்டி ஸாஹிரா ம. வி. திருமதி ரோகிணிதேவி கணேசலிங்கம், கொழும்பு புனித பேதுரு கல்லூரி, திருமதி யோகேஸ்வரி சண்முகநாதன், ஸ்ரீ ஜெயவர்தனபுர இந்து வித்தியாலயம் திருமதி லலிதா ஜெகதீசன், கொட்டாஞ்சேனை மெதடிஸ்த தமிழ் பாடசாலை செல்வி மங்களேஸ்வரி சண்முகநாதன், கொள்ளுப்பிட்டி மெதடிஸ்த தமிழ் பாடசாலை திருமதி ச. இராமச்சந்திரன், கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி திருமதி கெளரி இரத்தினவேல், கொழும்பு – 10 பிறிஸ்பன்றோரின் பெண்கள் பாடசாலை திருமதி பவானி வரதராஜன், வெள்ளவத்தை சாந்த கிளேயர் கல்லூரி திருமதி சோமசுந்தரம் மகேஸ்வரி ஆகிய ஆசிரியர்கள் இந்த செயலமர்வில் கலந்துகொண்டனர்.
இப்பரீட்சை வகுப்பு அடிப்படையில் நடத்தப்படுவதால் ஒவ்வொரு வகுப்புகளிலும் அகில இலங்கை ரீதியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறும் மாணவ மாணவிகளுக்கு பணப் பரிசில்கள் வழங்கப்படுவதுடன், இப்பரீட்சையில் சித்திபெறும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
11ம் வகுப்பு பரீட்சையில் முதலாம் இடத்தைப் பெறும் மாணவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்படும். இதைவிட புலமைப் பரிசில்களும் வழங்கப்படும்.
கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர்/ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக