திங்கள், 31 அக்டோபர், 2011

இந்தோனேசியாவில் ஆயிரத்துநூறு ஆண்டு பழைமையான இந்துக் கோயில் கண்டுபிடிப்பு






இந்தோனேசியாவில் ஜாவா தீவில் ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த இரண்டு இந்துக் கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தோனேசியாவில் இஸ்லாமியப் பல்கலைக்கழகம் கட்டுவதற்காக நிலம் தோண்டப்பட்டபோது இக்கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஜாவாவில், யோக்யகர்த்தா என்ற இடத்தில் உள்ள இந்தோனேசிய இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் அருகில் உள்ள இடத்தில் நூலகம் அமைப்பதற்காக, 2009 டிசம்பர் மாதம் வேலைகள் தொடங்கின. அத்திவாரத்துக்காக மண் தோண்டும் போது, கல் சுவர் தென்பட்டது. அரச தொல்பொருள் துறையினர் இதைக் கேள்விப்பட்டு நேரில் வந்து களப்பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து 35 நாட்களாக நடந்த அகழ்வாய்வில், 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இரண்டு சிறிய கோவில்கள் வெளிப்பட்டன. முதல் கோவில் ஆறு மீட்டர் நீள உயரத்துக்கு அமைந்துள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட இந்துக் கோவிலில் இந்து மத வழிபாட்டுச் சின்னங்களும் உள்ளன.

விநாயகர் சிலை, லிங்கம், யோனி பீடம், பலிபீடம் என்பன கண்டுபிடிக்கப்பட்டன. இவையனைத்தும் சேதம் அதிகமில்லாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கோவிலின் அருகில் ஒரு நதி ஓடுகிறது. கோவிலுக்கு வடக்கில், 12 கி.மீ. தூரத்தில் மெரபி என்ற எரிமலை இருக்கிறது.

இந்தக் கோவில் கட்டப்பட்ட 100 ஆண்டுகளுக்குள் இந்த எரிமலையிலிருந்து வெளிப்பட்ட தீக்குழம்பு அருகிலுள்ள நதியின் வழியாக வந்து இந்தக் கோவிலை மூடியிருக்கலாம்; அதனால்தான் இந்தக் கோவில் பெருமளவில் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருக்கிறது என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த சிலைகள் அனைத்தும் தொல்பொருள் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

தொல்பொருள் ஆய்வாளர்களின் தகவல்களின்படி ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழைமைவாய்ந்த இக்கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழன், மலேசியாவிலுள்ள கடாரத்தை வென்று, “கடாரம் கொண்டான்” என்ற பட்டத்தைச் சூட்டிக்கொண்டான்; மேலும் அவன் முன்னேறி இந்தோனேசியாவிலுள்ள சில தீவுகளையும் வென்றான் என்பது வரலாறு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812