இலங்கையின் மத்திய மாகாண கண்டி இராஜதானியிலிருந்து 16 வது மைல் கல் தொலைவில் அமைந்திருக்கின்றது மாத்தளை வடக்கையும், மலையகத்தையும் இணைக்கும் ஒரு கேந்திர தளமாக மாத்தளை மாநகரம் விளங்கி வந்திருக்கின்றது.
மாத்தளை எனும் பெயர் ஏற்பட்ட காரணமென்னவென்றால் கஜபாகு மன்னனின் ஆட்சிக் காலத்தில் சோழ நாட்டிலிருந்து சிறைப்பிடிக்கப்பட்ட பெருந்தொகையானவர்கள் மாத்தளையில் குடியமர்த்தப்பட்டமையால் “மஹாதலயக்’ (பெருங்கூட்டத்தவர்) எனும் பொருள்பட இப்பிரதேசம் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
அதே போன்று பண்டுகாபய மன்னனின் மாமன் (மாதுல) கிரிகண்ட சிவ இளவரசன் இப்பகுதியில் வசித்து வந்தமையால் ‘மாத்தளை எனும் பெயர் தோன்றியதாகவும் “சூள வம்சம் எனும் சிங்கள காவியத்தில் இப் பிரதேசம் ‘ஹாதிபேதேச’ என குறிப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது. இப் பேதங்கள் மருவி காலப் போக்கில் “மாத்தளை” எனும் பெயர் தோன்றியதாகவும் வரலாற்று ஏட்டுச் சுவடுகள் சான்று பகர்கின்றன.
ஆலயம் தோன்றுவதற்கான காரணம் தெரிய வருவதாவது, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டத்துறைக்கு இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் அழைத்து வரப்பட்டனர் “தலைமன்னார்” “அரிப்பு” இறங்கு துறையூடாக அழைத்து வரப்பட்டு மலையக தலைவாசலான பண்ணாகமம் என்று அப்போது அழைக்கப்பட்டு வந்த மாத்தளையிலும் குடியேறினர்.
எங்கும் வியாபித்து அடியவர்களுக்கு அருள் மழை பொழியும் அன்னை பராசக்தியான ஸ்ரீமுத்து மாரியம்பிக்கையானவள் ஒரு சிகை அலங்காரம் செய்பவரின் கனவில் தோன்றி தன் திரு உருவகத்தை ஒரு வில்வ மரத்தடியில் வெளிப்படுத்தி தன்னை பூஜிக்குமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க அன்றிலிருந்து அவ்வில்வமரத்தடியில் சிலை வைத்து வணங்கி வந்ததாக ஆரம்ப கால பரம்பரைக்கதைகளும், ஏடுகளும் சான்றி பகர்கின்றன.
1995 ஆண்டளவில் க. குமாரசாமியார் இவ்வாலயத்தின் தலைமைப் பதவியை ஏற்றிருந்த காலகட்டத்தில் இவ்வாலயத்தில் பாரிய திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அத்தியாவசிய தேவைகள் பல பூர்த்தியாகி ஆலயம் பெரும் அளவில் வளர்ச்சி கண்டது.
ஆகம முறைப்படி விஸ்தரிக்கப்பட்ட ஆலயத்தின் பிரகாரத்தில் பரிவார மூர்த்திகளை பிரதிஷ்ட்டை செய்து, மூலஸ்தானமும் விஸ்தரிக்கப்பட்டு, அர்த்த மண்டபம், மஹா மண்டபம், தரிசன மண்டபம் என்பல மண்டபங்களும் நிர்மாணிக்கப்பட்டன. த. மாரிமுத்து செட்டியாரின் முயற்சியின் பயனாக வும், நிர்வாக சபையினரும், இந்து பெரு மக்களது ஆதரவோடும், 1992ம் ஆண்டு தேர் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு 1993ம் ஆண்டு, மாதம் 5ம் திகதி வெள்ளோட்டப் பெருவிழா காணும் பாக்கியம் அனைவருக்கும் கிட்டியதை மறக்க முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக